LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 338 - துறவறவியல்

Next Kural >

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
குடம்பை தனித்து ஒழியப் புள்பறந்தற்று - முன் தனியாத முட்டை தனித்துக் கிடப்ப அதனுள் இருந்த புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்து போன தன்மைத்து; உடம்பொடு உயிரிடை நட்பு - உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு. ('தனித்துஒழிய' என்றதனான் முன் தனியாமை பெற்றாம். அஃதாவது, கருவும் தானும்ஒன்றாய்ப் பிறந்து வேறாம் துணையும் அதற்கு ஆதாரமாய்நிற்றல் அதனால் அஃது உடம்பிற்கு உவமையாயிற்று; அதனுள் வேற்றுமையின்றி நின்றே பின் புகாமல் போகலின், புள்உயிர்க்கு உவமையாயிற்று. முட்டையுள் பிறப்பன பிறவும்உளவேனும், புள்ளையே கூறினார், பறந்து போதல் தொழிலான் உயிரோடு ஒப்புமை எய்துவது அதுவே யாகலின். 'நட்பு'என்பது ஈண்டுக் குறிப்பு மொழியாய் நட்பின்றிப்போதல் உணர்த்தி நின்றது. சேதனமாய் அருவாய்நித்தமாய உடம்பும் தம்முள் மாறாகலின் , வினைவயத்தால்கூடியதல்லது நட்பில என்பது அறிக. இனி, 'குடம்பை' என்பதற்குக்கூடு என்று உரைப்பாரும் உளர்; அது புள்ளுடன்தோன்றாமையானும், அதன் கண் அது மீண்டு புகுதல்உடைமையானும், உடம்பிற்கு உவமையாகாமை அறிக.)
மணக்குடவர் உரை:
கூடு தனியேகிடக்கப் புள்ளுப் பறந்து போனாற்போலும்,உடம்போடு உயிர்க்கு உள்ள நட்பு. மேல் ஒருபொழுதென்று காலங்கூறினார் ஈண்டு உயிர் நினைக்காத பொழுது போமென்றார்.
தேவநேயப் பாவாணர் உரை:
உடம்பொடு உயிரிடை நட்பு - உடம்போடு உயிருக்குள்ள உறவு; குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்த அற்றே - முன் தனியாது உடனிருந்த முட்டைக்கூடு பின்பு பிரிந்து தனித்துக்கிடக்க, அதனுள்ளிருந்த பறவைக் குஞ்சு ( வெளிவந்து இறக்கை முளைத்த பின் ) பறந்துபோன தன்மைத்தே. குடம்பை என்னும் சொற்குச் சேக்கை ( பறவைக்கூடு ), முட்டைக்கூடு, புழுக்கூடு என முப்பொருள்கள் உள. "வரியுடல் சூடிக்குடம்பைநூல் தெற்றி" எனக்கல்லாடம் (கணபதிதுதி, 26-ஆம்வரி) புழுக்கூட்டைக்குறித்தது. "குடம்பைமுட் டையுங் கூடுமாகும்". என்பது பிங்கலம் ( 10. 352) குறளிலுள்ள குடம்பை என்னும் சொற்குப் பறவைக் கூடு என்று மணக்குடவ பரிதி காலிங்கரும். முட்டைக்கூடு என்று பரிமேலழகரும், பொருள் கொண்டனர். இவர் இங்ஙனம் வேறுபடக்கரணியம் இரண்டிற்கும் குடம்பை, கூடு என்பன பொதுப்பெயரா யிருப்பதும் உயிர் உடம்பினின்று பிரிந்துபோவதற்குப் பறவை தன் கூட்டைவிட்டுப் பிரிந்து போய்விடுவதை நாலடியார்ச்செய்யுளொன்று உவமங் கூறியிருப்பதுமாம். ஆயின், திருக்குறள்மாந்தனுயிரையே சிறப்பாகக்கருதினாலும், தாய்ப்பாலுண்ணிகட் கெல்லாம் ( Mammalia ) பொதுவான உயிரையும் அதன் உடம்பையுமேபற்றிக் கூறியிருக்க. நாலடியார்ச்செய்யுள் மாந்தனுயிரையும் அவனுடம்பையுமேபற்றிக் கூறியதுடன், அவன் பிறந்த குடும்பத்தையுஞ்சேர்த்துக் கூறியுள்ளது. இதுவே உவமவேறுபாட்டிற்குக்கரணியமாம். "கேளாதே வந்து கிளைஞரா யிற்றோன்றி வாளாதே போவரான் மாந்தர்கள் - வாளாதே சேக்கை மரனொழியச் சேணீங்கு புட்போல யாக்கை தமர்க்கொழிய நீத்து." என்பது அந்நாலடியார்ச் செய்யுள் ( 20) இதன் பொருள்: மாந்தர் ஒரு குடும்பத்தில் ஒருவரை யொருவர் கேளாமலே உறவினராக வந்து பிறந்து, பின்புதாம் இறக்கும் போதும், பறவை மரத்தில் தான் கட்டிய கூட்டை விட்டுவிட்டு அம்மரத்திற்குச் சொல்லாமலே நெடுந்தொலைவு நீங்கிச்சென்று விடுவது போல, தம் உறவினருக்குச் சொல்லாமலே தம் உடலை அவரிடம் விட்டுச்சென்று வீடுவர், என்பதாம். பறவை மரத்தைக் கேளாமலே வந்து அதில் தான் முட்டையிட்டுக் குஞ்சுபொரித்தற்குக் கட்டிய கூட்டை; அவ்வினை முடிந்தபின் விட்டுவிட்டு அம்மரத்திற்குச் சொல்லாமலே நீங்கிப்போய் விடுவது போல, மாந்தரும் தம்பழவினையின் ஒரு பகுதியான இருவினைப் பயனை நுகர்தற்குத்தாம் எடுத்தவுடம்பை, அந்நுகர்ச்சி முடிந்தவுடன்தம் உறவினரிடம் விட்டுவிட்டு அவருக்குச் சொல்லாமலே நீங்கிவிடுவர் என்பது, உவமை விளக்கமாம். இதில், குடும்பத்திற்குமரமும், மாந்தன் உயிர்க்குப் பறவையும், அவனுடம்பிற்குக் கூடும் உவம மாம். திருவள்ளுவர் பாலுண்ணிகளின் அல்லது மாந்தரின் உயிரும் அதன் உடம்பும் உடன்தோன்றிப் பின்பு உயிர் பிரிவதையே கூறுவதால், உடம்பிற்கு முட்டைக் கூட்டை உவமங்கொள்வதே பொருத்தமாம். ஆயினும், குஞ்சு முன்னைக் கூட்டினின்று வெளிவந்தவுடன் பறவாமையால், வெளிவந்து இறக்கை முளைத்தபின் என்று ஒரு தொடரை இடைச்செருக வேண்டியதாயிற்று. எங்கேனும் பொரித்தவுடன் பறந்து போகும் பறவையின மிருப்பின், அது முழுநிறைவாகப் பொருந்தும் உவமமாம். 'தனித்தொழிய' என்றதனால், முன்பு தனியாமை பெறப்பட்டது. அதாவது, முட்டைக்கூடு முதலில் நொய்யவுறையாகவும் பின்பு சவ்வாகவும் இறுதியில் தோடாகவும் கருவொடு கூடியிருந்து, குஞ்சுபொரிக்கும் வரை அதற்கு நிலைக்களமாய் நின்றமை. அதனால், அது மாந்தனுயிர் நீங்கும் வரை அதற்கு நிலைக்களமாக உடன்நிற்கும், உடம்பிற்கு உவமமாயிற்று. முட்டைத்தோட்டிற்கும் உடம்பிற்கும், கூடு என்பது பொதுப்பெயராயிருப்பதும், உவமைக்குத் துணையாயிற்று. பறவைக்குஞ்சு முட்டையினின்று வெளிவந்தபின் அதற்குள் மீளப்புகாமையால், உடம்பினின்று நீங்கினபின் அதற்குள் மீளப்புகாத உயிருக்கு உவமமாயிற்று. முட்டைப்பிறவிகளுள் மீன், ஊரி ( Reptile ) முதலிய பிறவினங்களுமிருப்பினும், வான்வெளியிற் செல்லும் உயிருக்கு வான்வெளியிற் பறக்கும் பறவையே சிறந்தவுவமமாகக் கொள்ளப்பட்டது . அறிவதும் உருவில்லாததும் நித்தமானதுமான உயிரும், அறியாததும் உருவுள்ளதும் நித்தமல்லாததுமான உடம்பும், ஒன்றற்கொன்று நேர்மாறாக வேறுபட்டிருப்பதனாலும், வினைவயத்தால் ஒன்று கூடியதல்லது வேறுதொடர்பொன்று மில்லாதனவாதலாலும், உயிருக்கும் உடம்பிற்கும் இடைப்பட்டவுறவை நட்பென்றது எதிர்மறைக் குறிப்பாம் (Irony). ஒழிதல் வினை ஒரேயடியாய் நீங்குதலையும், பறத்தல் வினை விரைந்து செல்லுதலையும், குறித்தன. ஏகாரம் தேற்றம்.
கலைஞர் உரை:
உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்.
சாலமன் பாப்பையா உரை:
உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.
Translation
Birds fly away, and leave the nest deserted bare; Such is the short-lived friendship soul and body share.
Explanation
The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty.
Transliteration
Kutampai Thaniththu Ozhiyap Pulparan Thatre Utampotu Uyiritai Natpu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >