மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பேதை தன் கை ஒன்று உடைமை பெறின் - பேதையாயினான் தன் கைக்கண்ணே ஒன்றனை உடைமையாகப் பெற்றானாயின்; மையல் ஒருவன் களித்தற்று - அவன் மயங்குதல் முன்னே பித்தினை உடையானொருவன் அம்மயக்கத்தின்மேலே மதுவுண்டு மயங்கினாற்போலும். ('பெறின்' எனவே, தெய்வத்தான் அன்றித் தன்னாற் பெறாமை பெற்றாம். பேதைமையும் செல்வக் களிப்பும் ஒருங்கு உடைமையால் அவன் செய்வன, மையலும் மதுக்களிப்பும் ஒருங்குடையான் செய்வனபோல் தலை தடுமாறும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவன் செல்வம் எய்தியவழிப் பயன் கொள்ளுமாறு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
முன்னே பித்தாய் மயங்கிய ஒருவன் பின்பு கள்ளினை நுகர்ந்து களித்தாற் போலாவதொன்று, பேதை தன்கையின்கண் ஒன்றுடையனானவிடத்து.
தேவநேயப் பாவாணர் உரை:
பேதை தன்கை ஒன்று உடைமை பெறின் - பேதையானவன் தன் கையில் ஒரு சிறந்தபொருளை உடைமையாகப் பெற்றிருந்தால்; மையல் ஒருவன் களித்த அற்று-அது ஏற்கெனவே பித்துக் கொள்ளியான ஒருவன் அதன் மேலுங் கள்ளுண்டு மயங்கினாற்போலும். 'பெறின்' எனவே,அது சொந்த தேட்டன்றித் தெய்வத்தினால் வந்தமை பெறப்பட்டது. பேதைமையும் செல்வமயக்கும் ஒருங்கேயுடையவன் பித்தமும் கள்வெறியும் ஒருங்கே கொண்டவன்போல்,தலைகால் தெரியாமல் தடுமாறிக் கெடுவன் என்பதாம். இக்குறளால் பேதை பெற்ற செல்வம் அவன் பேதைமையையே மிகுக்கு மென்பது கூறப்பட்டது. 'ஆல்' அசைநிலை.
கலைஞர் உரை:
நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில் ஒரு பொருளும் கிடைத்துவிட்டால் பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவற்றவன் தன்னிடம் ஒன்றைச் சொந்தமாகப் பெறுவது, முன்பே பிடித்துப் பிடித்தவன், கள்ளால் மயங்கியும் நிற்பது போல் ஆகும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அதுமட்டுமல்ல.) முட்டாள் கையில் பொருளும் கிடைத்து விட்டால் அது பைத்தியம் பிடித்த ஒருவன் கள்ளையும் குடித்துவிட்டது போல (ஆடிப் பாடித் திரிந்து எதை வேண்டு மானாலும் செய்துவிடும்).