திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும்
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(தலைமகளைப் புலவி நீக்கிக் கூடிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது) நலத்தகை நல்லவர்க்கு ஏர் - நற்குணங்களால் தகுதியுடையராய தலைவர்க்கும் அழகாவது; பூ அன்ன கண்ணார் அகத்துப் புலத்தகை - தம் பூவன்ன கண்ணார் நெஞ்சின்கண் நிகழும் புலவி மிகுதியன்றே (சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'தவறில்லார்க்கும் புலவி இனிது' என்பான், 'நலத்தகை நல்லவர்க்கும்' என்றான். அழகு - இன்பப் பயனைத் தலைப்படுதல் தான் நுகர்ந்த இன்பத்திற்கு ஏதுவாகிய புலவியை வியந்து கூறியவாறு.)
மணக்குடவர் உரை:
நலத்தகையினானே நல்லாரான பரத்தையர்க்கு ஓரழகாம், பூ வன்னகண்ணார்மாட்டுப் புலத்தல்.
நமக்கு ஆவார்மாட்டுப் புலத்தல் தீதென்றவாறு. இது பரத்தையரோடு புலந்து கூறிய தலைமகட்குத் தோழி கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(தலைமகளைப் புலவி நீக்கிக் கூடிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.)
நலத்தகை நல்லவர்க்கு ஏர்-நற் குணங்களால் தகுதியுடைய நல்ல ஆடவர்க்கும் அழகாவது ; பூ அன்ன கண்ணார் அகத்துப் புலத்தகை - தம் மலர் போலுங் கண்களையுடைய மகளிரின் நெஞ்சில் நிகழும் புலவிச் சிறப்பன்றோ ?
தான் நுகர்ந்த சிறந்த இன்பத்திற் கேதுவாகிய புலவியை வியந்து கூறியவாறு . தவறில்லாதவர்க்கும் புலவி இனிதென்பான் , "நலத்தகை நல்லவர்க்கும் ஏஎர்" என்றான் . அழகு இன்பப் பயனாகிய மனவெழுச்சி . சிறப்பும்மை தொக்கது . ' ஏஎர்' இசை நிறையளபெடை.
கலைஞர் உரை:
மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல
காதலர்க்கு அழகு சேர்க்கும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குணங்களால் உயர்ந்தவருக்கு அழகு தருவது, பூப்போன்ற கண்ணை உடைய மனைவியின் மனத்தே நடக்கும் ஊடலின் மிகுதியே.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஆனால் என் காதலர் அப்படி என்னை வேரறுத்துவிட மாட்டார்.) மலர் போன்ற கண்களையுடைய மனைவியின் பிணக்கத்தில் அவளிடம் காதலுள்ள கணவனுக்கும் இன்பமுண்டு. (என் கணவர் என்மீது காதல் உள்ளவர்).
Translation
Even to men of good and worthy mind, the petulance
Of wives with flowery eyes lacks not a lovely grace
Explanation
An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands