இந்தியாவின் எந்த இடத்திலும், முறையான உரிமம் பெறாமல் அல்லது சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல், ஆற்றிலும் மணல் அள்ளக் கூடாது. என தேசிய பசுமை தீர்ப்பாயம், அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, நாடு முளுவதும் உள்ள ஆற்றுப் படுகைகளில், முறையான உரிமம் பெறாமல், சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறாமல், சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுகின்றன. மணல் கடத்தல்காரர்கள் மீது, நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். எடுத்து காட்டாக சமீபத்தில் உத்திர பிரதேசத்தில் பெண், ஐ.ஏ.எஸ்., அதிகாரி துர்காவை , அம்மாநில அரசு, "சஸ்பெண்ட்' செய்துள்ளது. மற்றொரு இடத்தில், மணல் கடத்தல்காரர்களுக்கு எதிராக குரல் கொடுத்த ஒருவரை, அவரின் வீட்டில் வைத்தே, பட்டப் பகலில், மணல் கொள்ளையர்கள் கொலை செய்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள ஆறுகளில், தினம்தோறும் லட்சக்கணக்கான டன் மணல், சட்ட விரோதமாக அள்ளப்படுகிறது. இதனால், மத்திய, மாநில அரசுகளுக்கு, பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, இயற்கை வளம் சீர்கெடுவதுடன், கொள்ளையடிக்கப்படுகிறது என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஸ்வதந்தர்குமார் தலைமையிலான பெஞ்ச், இந்த மனு மீது விசாரணை நடத்தி அதிரடி உத்தரவை பிறப்பித்தது. உத்தரவில் கூறியிருப்பதாவது, முறையான அனுமதியின்றி, சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல், நாட்டின் எந்த ஆற்றிலும் மணல் அள்ளக் கூடாது. இந்த உத்தரவு, உத்திர பிரதேச மாநிலத்துக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள எல்லா மாநிலத்திற்கும் பொருந்தும். மணல் குவாரிகளை கண்காணிக்கும் அதிகாரிகள், அனைத்து மாநில போலீஸ் அதிகாரிகள், இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும். இது தொடர்பாக, அனைத்து மாநில அரசுகளும், இம்மாதம், 14ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
|