LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- பாரதிதாசன் கவிதைகள்

இயற்கை 2

2. 4. இயற்கைச் செல்வம்


விரிந்த வானே, வௌியே - எங்கும்

விளைந்த பொருளின் முதலே!

திரிந்த காற்றும், புனலும் - மண்ணும்

செந்தீ யாவும் தந்தோய்.

தெரிந்த கதிரும் நிலவும் - பலவாச்

செறிந்த உலகின் வித்தே!

புரிந்த உன்றன் செயல்கள் - எல்லாம்

புதுமை! புதுமை! புதுமை!


அசைவைச் செய்தாய் ஆங்கே - ஒலியாம்

அலையைச்செய்தாய் நீயே!

நசையால் காணும் வண்ணம் - நிலமே

நான்காய் விரியச் செய்தாய்!

பசையாம் பொருள்கள் செய்தாய் - இயலாம்

பைந்தமிழ் பேசச் செய்தாய்!

இசையாம் தமிழைத் தந்தாய் - பறவை,

ஏந்திழை இனிமைக் குரலால்!


எல்லாம் அசையச் செய்தாய் - உயிர்கள்

எதினும் அசைவைச் சேர்த்தாய்.

சொல்லால் இசையால் இன்பம் - எமையே

துய்க்கச் செய்தாய் அடடா!

கல்லா மயில், வான்கோழி - புறவுகள்

காட்டும் சுவைசேர் அசைவால்

அல்லல் விலக்கும் `ஆடற் - கலை'தான்

அமையச் செய்தாய் வாழி!



2.5. அதிகாலை


அமைதியில் ஒளி அரும்பும் அதிகாலை - மிக

அழகான இருட்சோலை தனில்

அமைதியில் ஒளி...


இமை திறந்தே தலைவி கேட்டாள் - சேவல்

எழுந்திருப்பீர் என்று கூவல்

அமைதியில் ஒளி...


தமிழ்த்தேன் எழுந்தது வீட்டினர் மொழியெலாம்

தண்ணீர் இறைந்தது தலைவாயில் வழியெலாம்

அமைத்த கோலம் இனித்தது விழியெலாம் - நீ

ராடி உடுத்தனர் அழகுபொற் கிழியெலாம்

அமைதியில் ஒளி...


பெற்றவர் கூடத்தில் மனைமேற் பொருந்தித் - தம்

பிள்ளைக ளோடு சிற்றுண வருந்தி

உற்ற வேலையில் கைகள் வருந்தி

உழைக்க லாயினர் அன்பு திருந்தி

அமைதியில் ஒளி...



2. 6. வானம்பாடி


வானந்தான் பாடிற்றா? வானிலவு பாடிற்றா?

தேனை அருந்திச் சிறுதும்பி மேலேறி

நல்லிசை நல்கிற்றா? நடுங்கும் இடிக்குரலும்

மெல்லிசை பயின்று மிகஇனிமை தந்ததுவோ?


வானூர்தி மேலிருந்து வல்ல தமிழிசைஞன்

தானூதும் வேய்ங்குழலா? யாழா? தனியொருத்தி

வையத்து மக்கள் மகிழக் குரல்எடுத்துப்

பெய்த அமுதா? எனநானே பேசுகையில்,


நீநம்பாய் என்று நிமிர்ந்தஎன் கண்ணேரில்

வானம்பா டிக்குருவி காட்சி வழங்கியது

ஏந்தும்வான் வெள்ளத்தில் இன்பவெள்ளம் தான்கலக்க

நீந்துகின்ற வானம் பாடிக்கு நிகழ்த்தினேன்.


உன்றன் மணிச்சிறகும் சின்னக் கருவிழியும்

என்றன் விழிகட்கே எட்டா உயர்வானில்

பாடிக்கொண்டே யிருப்பாய்! பச்சைப் பசுந்தமிழர்

தேடிக்கொண் டேயிருப்பார் தென்பாங்கை உன்பால்!


அசையா மகிழ்ச்சி அடைகநீ! உன்றன்

இசைமழையால் இன்புறுவோம் யாம்.



2.7. மாவலிபுரச் செலவு


(ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் மாலை 4 மணிக்குச் சென்னை பக்கிங்காம் 

கால்வாயில் தோணி ஏறி, மறுநாள் காலை 9 மணிக்கு மாவலிபுரம் சேர்ந்தோம்

நானும் என் தோழர் பலரும். வழிப்போக்கின் இடைநேரம் இனிமையாய்க் கழிந்தது. 

எனினும் அப்பெருந்தோணியைக் கரையோரமாக ஒரு கயிறுபற்றி ஒருவன் இழுத்துச் 

சென்றமையும், மற்றோர் ஆள் பின்புறமாக ஒரு நீளக் கழியால் தள்ளிச் சென்றமையும் 

இரங்கத்தக்க காட்சி.அதையும் அங்குக் கண்ணைக் கவர்ந்த மற்றும் சில 

காட்சிகளையும் விளக்கி அப்போது எழுதியதாகும் இப்பாட்டு. 1934) 


சென்னையிலே ஒரு வாய்க்கால் - புதுச்

சேரி நகர்வரை நீளும்.

அன்னதில் தோணிகள் ஓடும் - எழில் 

அன்னம் மிதப்பது போலே.

என்னருந் தோழரும் நானும் - ஒன்றில்

ஏறி யமர்ந்திட்ட பின்பு

சென்னையை விட்டது தோணி - பின்பு

தீவிரப் பட்டது வேகம்.


தெற்குத் திசையினை நோக்கி - நாங்கள்

சென்றிடும் போது விசாலச்

சுற்றுப் புறத்தினில் எங்கும் - வெய்யில்

தூவிடும் பொன்னொளி கண்டோம்.

நெற்றி வளைத்து முகத்தை - நட்டு

நீரினை நோக்கியே நாங்கள்

அற்புதங் கண்டு மகிழ்ந்தோம் - புனல்

அத்தனையும் ஒளி வானம்.


சஞ்சீவி பர்வதச் சாரல் - என்று

சாற்றும் சுவடி திறந்து

சஞ்சார வானிலும் எங்கள் - செவி

தன்னிலும் நற்றமிழ் ஏற்றி

அஞ்சாறு பக்கம் முடித்தார் - மிக்க

ஆசையினால் ஒரு தோழர்.

செஞ்சுடர் அச்சம யத்தில் - எம்மைச்

செய்தது தான்மிக்க மோசம்.


மிக்க முரண்கொண்ட மாடு - தன்

மூக்குக் கயிற்றையும் மீறிப்

பக்கம் இருந்திடும் சேற்றில் - ஓடிப்

பாய்ச்சிடப் பட்டதோர் வண்டிச்

சக்கரம் போலிருள் வானில் - முற்றும்

சாய்ந்தது சூரிய வட்டம்!

புக்க பெருவௌி யெல்லாம் - இருள் 

போர்த்தது! போனது தோணி.


வெட்ட வௌியினில் நாங்கள் - எதிர்

வேறொரு காட்சியும் கண்டோம்

குட்டைப் பனைமரம் ஒன்றும் - எழில்

கூந்தல் சரிந்ததோர் ஈந்தும்

மட்டைக் கரங்கள் பிணைத்தே - இன்ப

வார்த்தைகள் பேசிடும் போது

கட்டுக் கடங்கா நகைப்பைப் - பனை 

கலகல வென்று கொட்டிற்றே.


எட்டியமட்டும் கிழக்குத் - திசை

ஏற்றிய எங்கள் விழிக்குப் 

பட்டது கொஞ்சம் வௌிச்சம் - அன்று

பௌர்ணமி என்பதும் கண்டோம்.

வட்டக் குளிர்மதி எங்கே - என்று

வரவு நோக்கி யிருந்தோம்.

ஒட்டக மேல்அர சன்போல் - மதி

ஓர்மரத் தண்டையில் தோன்றும்.


முத்துச் சுடர்முகம் ஏனோ - இன்று

முற்றும் சிவந்தது சொல்வாய்.

இத்தனை கோபம் நிலாவே - உனக்கு

ஏற்றியதார் என்று கேட்டோம்.

உத்தர மாகஎம் நெஞ்சில் - மதி

ஒன்று புகன்றது கண்டீர்.

சித்தம் துடித்தது நாங்கள் - பின்னால்

திரும்பிப் பார்த்திட்ட போது.


தோணிக் கயிற்றினை ஓர்ஆள் - இரு

தோள்கொண் டிழுப்பது கண்டோம்.

காணச் சகித்திட வில்லை - அவன்

கரையொடு நடந்திடு கின்றான்.

கோணி முதுகினைக் கையால் - ஒரு

கோல்நுனி யால்மலை போன்ற

தோணியை வேறொரு வன்தான் - தள்ளித்

தொல்லை யுற்றான்பின் புறத்தில்.


இந்த உலகினில் யாரும் - நல்

இன்ப மெனும்கரை யேறல்

சந்தத மும்தொழி லாளர் - புயம்

தரும் துணையன்றி வேறே

எந்த விதத்திலும் இல்லை - இதை

இருபது தரம் சொன்னோம்.

சிந்தை களித்த நிலாவும் - முத்துச்

சிந்தொளி சிந்தி உயர்ந்தான்.


நீல உடையினைப் போர்த்தே - அங்கு

நின்றிருந்தாள் உயர் விண்ணாள்.

வாலிப வெண்மதி கண்டான் - முத்து

மாலையைக் கையி லிழுத்து 

நாலு புறத்திலும் சிந்தி - ஒளி

நட்சத் திரக்குப்பை யாக்கிப்

பாலுடல் மறையக் காலை - நாங்கள்

பலி புரக்கரை சேர்ந்தோம்.



2.8. இருசுடரும் என் வாழ்வும்


காலை

ஒளியைக் கண்டேன் கடல்மேல் - நல்

உணர்வைக் கண்டேன் நெஞ்சில்!

நௌியக் கண்டேன் பொன்னின் - கதிர்

நிறையக் கண்டேன் உவகை!

துளியைக் கண்டேன் முத்தாய்க் - களி

துள்ளக் கண்டேன் விழியில்!

தௌியக் கண்டேன் வையம் - என்

செயலிற் கண்டேன் அறமே!


மாலை

மறையக் கண்டேன் கதிர்தான் - போய்

மாயக் கண்டேன் சோர்வே!

நிறையக் கண்டேன் விண்மீன் - என்

நினைவிற் கண்டேன் புதுமை!

குறையக் கண்டேன் வெப்பம் - எனைக் 

கூடக் கண்டேன் அமைதி!

உறையக் கண்டேன் குளிர்தான் - மேல்

ஓங்கக் கண்டேன் வாழ்வே!



2.9. தென்றல்


பொதிகைமலை விட்டெழுந்து சந்த னத்தின்

புதுமணத்தில் தோய்ந்து,பூந் தாது வாரி,

நதிதழுவி அருவியின்தோள் உந்தித் தெற்கு

நன்முத்துக் கடல்அலையின் உச்சி தோறும்

சதிராடி, மூங்கிலிலே பண் எழுப்பித்

தாழையெலாம் மடற்கத்தி சுழற்ற வைத்து,

முதிர்தெங்கின் இளம்பாளை முகம் சுவைத்து,

முத்துதிர்த்துத் தமிழகத்தின் வீதி நோக்கி,


அந்தியிலே இளமுல்லை சிலிர்க்கச் செந்நெல்

அடிதொடரும் மடைப்புனலும் சிலிர்க்க, என்றன்

சிந்தைஉடல் அணுஒவ்வொன் றும்சி லிர்க்கச்

செல்வம்ஒன்று வரும்;அதன்பேர் தென்றற் காற்று!

வெந்தயத்துக் கலயத்தைப் பூனை தள்ளி

விட்டதென என்மனைவி அறைக்குப் போனாள்.

அந்தியிலே கொல்லையில்நான் தனித்தி ருந்தேன்

அங்கிருந்த விசுப்பலகை தனிற் படுத்தேன்.


பக்கத்தில் அமர்ந்திருந்து சிரித்துப் பேசிப்

பழந்தமிழின் சாற்றாலே காதல் சேர்த்து

மிக்கஅவ சரமாகச் சென்ற பெண்ணாள்

விரைவாக என்னிடத்தில் வருதல் வேண்டும்.

அக்காலம் அறைக்குவந்த பூனை யின்மேல்

அடங்காத கோபமுற்றேன் பிறநே ரத்தில்

பக்காப்பூ னைநூறு பொருளை யெல்லாம்

பாழாக்கி னாலும்அதில் கவலை கொள்ளேன்.


வாழ்க்கைமலர் சொரிகின்ற இன்பத் தேனை

மனிதனது தனிமையினால் அடைதல் இல்லை;

சூழ்ந்த துணை பிரிவதெனில் இரண்டு நெஞ்சும்

தொல்லையுறு வகைஇருத்தல் வேண்டும் அங்கே

வீழ்ந்துகிடந் திட்டஎனைத் `தனிமை', `அந்தி'

இவைஇரண்டும் நச்சுலகில் தூக்கித் தள்ளப்

பாழான அவளுடலின் குளிர்ச்சி, மென்மை,

மணம் இவற்றைப் பருகுவதே நினைவாயிற்று.


தெரியாமல் பின்புறமாய் வந்த பெண்ணாள்

சிலிர்த்திடவே எனைநெருங்கிப் படுத்தாள் போலும்;

சரியாத குழல்சரிய லானாள் போலும்;

தடவினாள் போலும்;எனைத் தன்க ரத்தால்!

புரியாத இன்பத்தைப் புரிந்தாள் போலும்! 

புரியட்டும் எனஇருந்தேன் எதிரில் ஓர்பெண்

பிரிவுக்கு வருந்தினே னென்றாள் ஓகோ!

பேசுமிவள் மனைவி;மற் றொருத்தி தென்றல்! 




காதல்

2. 10. தொழுதெழுவாள்


உண்டனன் உலவி னன்பின்

உள்ளறை இட்ட கட்டில்

அண்டையில் நின்ற வண்ணம்

என்வர வறிவா னாகி,

மண்டிடும் காதற் கண்ணான்

வாயிலில் நின்றி ருந்தான்!

உண்டேன்என் மாமி என்னை

உறங்கப்போ என்று சொன்னாள்.


அறைவாயி லுட்பு குந்தேன்

அத்தான்தன் கையால் அள்ளி

நிறைவாயின் அமுது கேட்டுக்

கனிஇதழ் நெடிது றிஞ்சி

மறைவாக்கிக் கதவை, என்னை

மணிவிளக் கொளியிற் கண்டு

நறுமலர்ப் பஞ்ச ணைமேல்

நலியா துட்கார வைத்தான்.


கமழ் தேய்வு* பூசி வேண்டிக்

கனியோடு பாலும் ஊட்டி

அமைவுற என்கால் தொட்டே

அவனுடை யால்து டைத்தே

தமிழ்,அன்பு சேர்த்துப் பேசித்

தலையணை சாய்த்துச் சாய்ந்தே

இமையாது நோக்கி நோக்கி

எழில்நுதல் வியர்வை போக்கி,

* தேய்வு -- சந்தனம்


தென்றலும் போதா தென்று

சிவிறி*கைக் கொண்டு வீசி

அன்றிராப் பொழுதை இன்பம்

அறாப் பொழுதாக்கி என்னை

நன்றுறத் துயிலிற் சேர்த்தான்

நவிலுவேன் கேட்பாய் தோழி.

* சிவிறி -- விசிறி 


கண்மூக்குக் காது வாய்மெய் 

இன்பத்திற் கவிழ்ப்பான். மற்றும்

பெண்பெற்ற தாயும் போல்வான்;

பெரும்பணி எனக்கி ழைப்பான்.

வண்மையால் கால் துடைப்பான்

மறுப்பினும் கேட்பா னில்லை.

உண்மையில் நான்அ வன்பால்

உயர்மதிப் புடையேன் தோழி!


மதிப்பிலாள் என்று நெஞ்சம்

அன்புளான் வருந்து வானேல்

மதிகுன்றும் உயிர்போன் றார்க்கு

மறம்*குன்றும் செங்கோல் ஓச்சும்

அதிராத்தோள் அதிர லாகும்

அன்புறும் குடிகள் வாழ்வின்

நிதிகுன்றும் மன்னன் கையில்

மழைகுன்ற நேரும் அன்றோ?

* மறம் - வீரம்


நிலந்தொழேன் நீர்தொ ழேன்விண்

வளிதொழேன் எரிதொ ழேன்நான்

அலங்கல்சேர் மார்பன் என்றன்

அன்பனைத் தொழுவ தன்றி!

இலங்கிழைத் தோழி கேள்!பின்

இரவுபோ யிற்றே. கோழி

புலர்ந்தது பொழுதென் றோதப்

பூத்ததென் கண்ண ரும்பு.


உயிர்போன்றான் துயில் களைந்தான்

ஒளிமுகம் குறுந கைப்புப்

பயின்றது. பரந்த மார்பில்

பன்மலர்த் தாரும் கண்டேன்.

வெயில்மணித் தோடும் காதும்

புதியதோர் வியப்பைச் செய்ய

இயங்கிடும் உயிரன் னோனை

இருகையால் தொழுதெ ழுந்தேன்.


அழைத்தனர் எதிர்கொண் டெம்மை

அணிஇசை பாடி வாழ்த்தி.

இழைத்திடு மன்று நோக்கி

ஏகினோம். குடிகள் அங்கே

"ஒழித்தது வறுமை அன்னாய்

உதவுக" என்று நைந்தார்.

"பிழைத்தது மழை*என் அத்தான்

பெய்"என்றேன் குடிகட் கெல்லாம்.


மழைத்தது* மழைக்கை** செந்நெல்

வண்டிகள் நடந்த யாண்டும்.


* பிழைத்தது மழை - மழை பெய்யவில்லை.

* மழைத்தது - மழைபோல் செந்நெல் தந்தது.

** மழைக்கை - கொடுக்குமியல்புள்ள மன்னன் கை.



2.11. சொல்லும் செயலும்


சொல்வதென்றால் வெட்கமடி தோழி - சொல்லச்

சொல்லுகின்றாய் என்துணைவன் 

சொன்னதையும் செய்ததையும்

சொல்வதென்றால்...


முல்லைவிலை என்ன என்றான்

இல்லைஎன்று நான் சிரித்தேன்

பல்லைஇதோ என்று காட்டிப்

பத்துமுத்தம் வைத்து நின்றான்

சொல்வதென்றால்...


பின்னலைப்பின் னேகரும்பாம் பென்றான் - உடன்

பேதைதுடித் தேன்அணைத்து நின்றான்

கன்னல் என்றான் கனியிதழைக்

காதல்மருந் தென்று தின்றான்.

சொல்வதென்றால்...


நிறையிருட்டில் ஒருபுதிரைப் போட்டான்;

நிலவெறிப்ப தென்னவென்று கேட்டான்.

குறைமதியும் இல்லை என்றேன்.

குளிர்முகத்தில் முகம் அணைத்தான்.

சொல்வதென்றால்...



2.12. இருவர் ஒற்றுமை


எனக்கும் உன்மேல் விருப்பம் - இங்

குனக்கும் என்மேல் விருப்பம் - அத்தான்

எனக்கும் உன்மேல்...


எனக்கு நீதுணை அன்றோ - இங்

குனக்கு நான்துணை அன்றோ? - அத்தான்

எனக்கும் உன்மேல்...


இனிக்கும் என்செயல் உனக்கும் - இங்

கெனக்கும் உன்செயல் இனிக்கும்!

தனித்தல் உனக்கும் எனக்கும் - நொடி

நினைப்பின் வருத்தம் மனத்தில் - அத்தான்

எனக்கும் உன்மேல்...


விழி தனிலுன தழகே - என்

அழ கிலுனது விழியே

தொழுத பிறகுன் தழுவல் - நான்

தழுவிப் பிறகுன் தொழுதல் - அத்தான்

எனக்கும் உன்மேல்...


நீஉடல்! உயிர் நானே - நாம்

நிறை மணமலர் தேனே

ஓய்விலை நம தன்பும் - இங்கு

ஒழிவிலை பே ரின்பம் - அத்தான்

எனக்கும் உன்மேல்...



2.13. பந்துபட்ட தோள்


கட்டுடலிற் சட்டை மாட்டி - விட்டுக்

கத்தரித்த முடி சீவிப்

பட்டுச் சிறாய்இடை அணிந்தே - கையில்

பந்தடி கோலினை ஏந்திச்

சிட்டுப் பறந்தது போலே - எனை

விட்டுப் பிரிந்தனர் தோழி!

ஒட்டுற வற்றிட வில்லை - எனில்

உயிர் துடித்திட லானேன். 


வடக்குத் தெருவௌி தன்னில் - அவர்

மற்றுள தோழர்க ளோடும்

எடுத்ததன் பந்தடி கோலால் - பந்தை

எதிர்த்தடித் தேவிளை யாடிக்

கடத்திடும் ஒவ்வொரு நொடியும் - சாக்

காட்டின் துறைப்படி அன்றோ?

கொடுப்பதைப் பார்மிகத் துன்பம் - இக்

குளிர்நறுந் தென்றலும் என்றாள்.


"வளர்ப்பு மயில்களின் ஆடல் - தோட்ட

மரங்கள், மலர்க்கிளைக் கூட்டம்,

கிளிக்குப் பழந்தரும் கொடிகள் - தென்னங்

கீற்று நடுக்குலைக் காய்கள்

அளித்த எழில்கண் டிருந்தாய் - உன்

அருகினில் இன்பவெள் ளத்தில்

குளிர்ந்த இரண்டு புறாக்கள் - காதல்

கொணர்ந்தன உன்றன் நினைவில்."


தோழிஇவ் வாறுரைக் குங்கால் - அந்தத்

தோகையின் காதலன் வந்தான்.

"நாழிகை ஆவதன் முன்னே - நீவிர்

நண்ணிய தென்இங்கே" என்றாள்.

"தாழ்குழலே! அந்தப் பந்து - கைக்குத்

தப்பிஎன் தோளினைத் தாக்கி 

வீழ்ந்தது; வந்ததுன் இன்ப 

மேனி நினை"வென்று சொன்னான்.



2.14. தன்மான உலகு


என்னை அத்தான் என்ற ழைத்தாள்.

பொன்நிறை வண்டியொடு போந்து பல்லோர்

பெற்றோர் காலைப் பெரிது வணங்கி

நற்றாலி கட்ட நங்கையைக் கொடீர்என்று

வேண்டிட அவரும் மெல்லிக்குச் சொல்லிடத்

தூண்டிற் புழுப்போல் துடித்து மடக்கொடி

"தன்மா னத்து மாப்பெரும் தகைக்குநான்

என்மா னத்தை ஈவேன்" என்று

மறுத்து, நான்வரும் வரைபொருத் திருந்தே

சிறுத்த இடுப்புத் திடுக்கிட நடந்தே

என்வீடு கண்டு தன்பாடு கூறி

உண்ணாப் போதில் உதவுவெண் சோறுபோல்

வெண்ணகை காட்டிச் செவ்விதழ் விரித்தே

என்னை அத்தான் என்ற ழைத்தாள்.


என்னை அத்தான் என்ற ழைத்தாள்.

"ஏன்"எனில் அதட்டலென் றெண்ணு வாளோ?

"ஏனடி" என்றால் இல்லைஅன் பென்னுமோ?

"ஏனடி என்றன் இன்னுயிரே" எனில்

பொய்யெனக் கருதிப் போய்விடு வாளோ?

என்று கருதி இறுதியில் நானே

"காத்திருக் கின்றேன், கட்டழ கே"என

உண்மை கூறினேன் உவப்ப டைந்தாள்.

ஒருநொடிப் போதில் திருமணம் நடந்ததே.


என்னை அத்தான் என்ற ழைத்தாள்.

காத்தி ருப்பது கழறினேன்; உவந்தாள்.

ஒருநொடிக் கப்புறம் மீண்டும்

திருமணம்! நாடொறும் திருமணம் நடந்ததே!



2. 15. மெய்யன்பு


மலடிஎன்றேன், போஎன்றேன், இங்கி ருந்தால்

மாய்த்திடுவேன் என்றுரைத்தேன். மங்கை நல்லாள்

கலகலென நீருகுத்த கண்ணீ ரோடும்,

கணகணெனத் தணல்பொங்கும் நெஞ்சத் தோடும்,

விலகினாள்! விலகினவே சிலம்பின் பாட்டும்!

விண்ணிரங்கும் அழுகுரலோ இருட்டை நீந்தக்

கொலைக் கஞ்சாத் திருடரஞ்சும் காடு சென்றாள். 

கொள்ளாத துன்பத்தால் அங்கோர் பக்கம்,


உட்கார்ந்தாள், இடைஒடிந்தாள், சாய்ந்து விட்டாள்.

உயிருண்டா? இல்லையா? யாரே கண்டார்!

இட்டலிக்கும் சுவைமிளகாய்ப் பொடிக்கும் நல்ல

எண்ணெய்க்கும் நானென்ன செய்வேன் இங்கே?

கட்டவிழ்த்த கொழுந்திலையைக் கழுவிச் சேர்த்துக்

காம்பகற்றி வடித்திடுசுண் ணாம்பு கூட்டி

வெட்டிவைத்த பாக்குத்தூள் இந்தா என்று

வெண்முல்லைச் சிரிப்போடு கண்ணாற் கொல்லும்


தெள்ளமுதம் கடைத்தெருவில் விற்ப துண்டோ? 

தேடிச்சென் றேன்வானம் பாடி தன்னைச்

"சொள்ளொழுகிப் போகுதடி என்வாய்; தேனைச் 

சொட்டுகின்ற இதழாளே! பிழைபொ றுப்பாய்;

பிள்ளைபெற வேண்டாமே; உனைநான் பெற்றால்

பேறெல்லாம் பெற்றவனே ஆவேன்" என்றே

அள்ளிவிடத் தாவினேன் அவளை! என்னை

அவள் சொன்னாள் "அகல்வாய்நீ அகல்வாய்" என்றே.


"மனைவிக்கும் கணவனுக்கும் இடையில் எதோ

மனக்கசப்பு வரல்இயற்கை. தினையை நீதான்

பனையாக்கி, நம்உயர்ந்த வாழ்வின் பத்தைப்

பாழாக்க எண்ணுவதா? எழுந்தி" ரென்றேன்.

எனைநோக்கிச் சொல்லலுற்றாள்: "நமக்கு மக்கள்

இல்லையெனில் உலகமக்கள் நமக்கு மக்கள்

எனநோக்கும் பேரறிவோ உன்பால் இல்லை;

எனக்கும்இனி உயிரில்லை" என்றாள் செத்தாள்.


திடுக்கென்று கண்விழித்தேன். என்தோள் மீது 

செங்காந்தாள் மலர்போலும் அவள்கை கண்டேன். 

அடுத்தடுத்துப் பத்துமுறை தொட்டுப் பார்த்தேன்;

அடிமூக்கில் மூச்சருவி பெருகக் கண்டேன்.

படுக்கையிலே பொற்புதையல் கண்ட தைப்போல்

பாவையினை உயிரோடு கண்ணாற் கண்டேன்.

சடக்கென்று நானென்னைத் தொட்டுப் பார்த்தேன்

சாகாத நிலைகண்டேன் என்னி டத்தே.



2.16. பெற்றோர் இன்பம்


கூடத்து நடுவில் ஆடும் ஊஞ்சலில்

சோடித்து வைத்த துணைப்பொற் சிலைகள்போல்

துணைவனும் அன்புகொள் துணைவியும் இருந்தனர்!

உணவு முடிந்ததால், உடையவள் கணவனுக்குக்

களிமயில் கழுத்தின் ஒளிநிகர் துளிரும்,

சுண்ணமும் பாக்குத் தூளும், கமழும்

வண்ணம் மடித்து மலர்க்கை ஏந்தினாள். 

துணைவன் அதனை மணிவிளக் கெதிரில்

மாணிக் கத்தை வைத்ததுபோல் உதடு

சிவக்கச் சிவக்கத் தின்றுகொண் டிருந்தான்.

ஆயினும் அவன்உளம் அல்லலிற் கிடந்தது.


"கேட்டான் நண்பன்; சீட்டு நாட்டின்றி

நீட்டினேன் தொகை! நீட்டினான் கம்பி;

எண்ணூற் றைம்பது வெண்பொற் காசுகள்

மண்ணா யினஎன் கண்ணே" என்றான். 

தலைவன் இதனைச் சாற்றி முடிக்குமுன்

ஏகாலி அவர் எதிரில் வந்து

கூகூ என்று குழறினான்; அழுதான்.

உழைத்துச் சிவந்ததன் உள்ளங் கைகள்

முழுக்க அவனது முகத்தை மறைத்தன.

மலைநிகர் மார்பில் அலைநிகர் கண்ணீர்

அருவிபோல் இழிந்தது. "தெரிவி அழாதே

தெரிவி" என்று செப்பினான் தலைவன்.

"நூற்றிரண் டுருப்படி நூல்சிதை யாமல்

ஆற்றில் வெளுத்துக் காற்றில் உலர்த்திப்

பெட்டி போட்டுக் கட்டி வைத்தேன்.

பட்டா ளத்தார் சட்டையும் குட்டையும்

உடன் இருந்தன; விடிந்தது பார்த்தேன்.

உடல் நடுங்கிற்றே! ஒன்றும் இல்லை" 

என்று கூறினான் ஏழை ஏகாலி.


அல்லல் மலிந்த அவ்வி டத்தில்,

வீட்டின் உட்புறத்து விளைந்த தான

இனிய யாழிசை கனிச்சாறு போலத் 

தலைவன் தலைவியைத் தழுவ லாயிற்று.


"நம்அரும் பெண்ணும் நல்லியும் உள்ளே

கும்மா ளமிடும் கொள்ளையோ" என்று

தலைவன் கேட்டான். தலைவி "ஆம்"என்று

விசையாய் எழுந்து வீட்டினுட் சென்றே

இசையில் மூழ்கிய இருபெண் களையும்

வருந்தப் பேசி வண்தமிழ் இசையை

அருந்தா திருக்க ஆணை போட்டாள்.


தலைவன்பால் வந்து தலைவி குந்தினாள்.

மகளொடு வீணை வாசித் திருந்த

நாலாவது வீட்டு நல்லி எழுந்து

கூடத்துத் தலைவர் கொலுவை அடைந்தாள்.

"என்ன சேதி?" என்றான் தலைவன்.

நல்லி ஓர்புதுமை நவில லுற்றாள்.


"கடலின் அலைகள் தொடர்வது போல

மக்கள் சந்தைக்கு வந்துசேர்ந் தார்கள்.

ஆடவர் பற்பலர் அழகுப் போட்டி

போடுவார் போலப் புகுந்தனர் அங்கே!

என்விழி அங்கொரு பொன்மலர் நோக்கி

விரைந்தது; பின்அது மீள வில்லை.

பின்னர் அவன்விழி என்னைக் கொன்றது;

என்னுளம் அவனுளும் இரண்டும் பின்னின;

நானும் அவனும் தேனும் சுவையும்

ஆனோம். இவைகள் அகத்தில் நேர்ந்தவை.


மறுநாள் நிலவு வந்தது கண்டு

நல்லிக் காக நான்தெருக் குறட்டில்

காத்திருந் தேன்;அக் காளை வந்தான்.

தேனாள் வீட்டின்`எண்' தெரிவி என்றான்.

நான்கு - எனும்மொழியை நான் முடிக்குமுன்

நீயா என்று நெடுந்தோள் தொட்டுப்

பயிலுவ தானான் பதட்டன்; என்றன்

உயிரில் தன்உயிர் உருக்கிச் சேர்த்து

மறைந்தான்" என்று மங்கை என்னிடம்

அறைந்தாள். உம்மிடம் அவள் இதைக்கூற 

நாணினாள். ஆதலால் நான்இதைக் கூறினேன்

என்று நல்லி இயம்பும் போதே

இன்னலிற் கிடந்த இருவர் உள்ளமும்

கன்னலின் சாற்றுக் கடலில் மூழ்கின.


"நல்லியே நல்லியே! நம்பெண் உன்னிடம்

சொல்லியது இதுவா? நல்லது நல்லது,

பெண்பெற்ற போது பெருமை பெற்றோம்.

வண்ண மேனி வளர வளர,எம்

வாழ்வுக்கு உரிய வண்மை பெற்றோம்;

ஏழ்ந ரம்புகொள் யாழ்போல் அவள்வாய்

இன்னான் இடத்தில் என்அன் பென்று

சொன்னதால் இன்பம் சூழப் பெற்றோம்.

என்மகள் உள்ளத்தில் இருக்கும் தூயனின்

பொன்னடி தனில்எம் பொருளெல்லாம் வைத்தும்,

இரந்தும் பெண்ணை ஏற்றுக் குடித்தனம்

புரிந்திடச் செய்வோம் போ"என் றுரைத்தான்.


தலைவி சாற்றுவாள் தலைவ னிடத்தில்.

"மலைபோற் சுமந்தஎன் வயிற்றில் பிறந்தபெண்

நல்லி யிடத்திற் சொன்னாள். இதனைச்

சொல்லும் போதில்என் செல்வியின் சொற்கள்

முல்லை வீசினவோ! முத்துப் பற்கள்

நிலா வீசினவோ! நீல விழிகள்

உலவு மீன்போல் ஒளி வீசினவோ! 

நான்கேட் கும்பேறு பெற்றிலேன்" என்று

மகள்தன் மணாள னைக்கு றித்ததில்

இவர்கட்கு இத்தனை இன்பம் வந்ததே!



2.17. பணமும் மணமும்


அத்தைமகன் முத்தனும் ஆளிமகள் தத்தையும்

ஒத்த உளத்தால் ஒருமித்து - நித்தநித்தம்

பேசிப் பிரிவார் பிறரறியா மற்கடி

தாசி எழுதியே தாமகிழ்வார் - நேசம்

வளர்ந்து வருகையிலே, மஞ்சினி தன்மைந்தன்

குளிர்ந்த பெருமாளைக் கூட்டி - உளங்கனிந்தே

ஆளியிடம் வந்தான்; அமர்ந்தான்; பின்பெண்கேட்டான்.

ஆளி சிரித்தே அவனிடத்தில் - "கேளண்ணா

தத்தை விதவைப்பெண் சம்மதமா?" என்றுரைத்தான்.

"மெத்தவிசேட" மெனச்சொல்லி மஞ்சினிதான் - ஒத்துரைத்தான்.

"சாதியிலே நான்மட்டம் சம்மதமா?" என்றே

ஓதினான் ஆளி. "ஒருபோதும் - காதில்நான்

மட்டம் உயர்வென்ற வார்த்தையையும் ஏற்பதில்லை

இட்டந்தான்" என்றுரைத்தான் மஞ்சினி. - "கிட்டியே

ஊர்ப்பானை தன்னை உருட்டி உயிர்வாழும்

பார்ப்பானை நீக்கிப் பழிகாரர் - தீர்ப்பான

நையும் சடங்ககற்றி நற்றமிழர் ஒப்பும்மணம்

செய்வாயா?" என்றாளி செப்பினான். - "ஐயோஎன் 

உத்தேசம் பார்ப்பான் உதவா தெனலன்றோ?

செத்தாலும் பார்ப்பானைத் தேடேனே! - சத்தியமாய்ச்

சொன்னேன்" எனஉரைத்தான் மஞ்சினி. சொன்னதும்

பின்ஆளி சம்மதித்தான் பெண்கொடுக்க! - அந்நேரம்

வந்த தொருதந்தி! வாசித்தான் ஆளிஅதை:

கந்தவேள் பாங்கில்நீர் கட்டிய - சொந்தப்

பணம்இல்லை, பாங்கு முறிந்தது, யாதும் 

குணமில்லை என்றிருத்தல் கண்டு - திணறியே

"வீடும் எனக்கில்லை வெண்ணிலையும் ஒன்றுமில்லை

ஆடுவிற்றால் ரூபாய்ஓர் ஐந்நூரு - கூடிவரும்

மஞ்சினி யண்ணா மணத்தை நடத்துவோம்

அஞ்சாறு தேதிக் கதிகமாய் - மிஞ்சாமல்

நாளமைப்போம்" என்றந்த ஆளி நவிலவே,

தோளலுத்த மஞ்சினி "ஆளியண்ணா - கேளிதை

இந்த வருடத்தில் நல்லநாள் ஏதுமில்லை

சிந்திப்போம் பின்"என்று செப்பினான். - "எந்த

வருடத்தி லே?எந்த வாரத்தில்? எந்தத்

தெருவில்? திருமணம் என்ற - ஒருசொல்

நிச்சயமாய்ச் சொல்லண்ணா நீ"என்றான் ஆளிதான்.

பச்சோந்தி மஞ்சினி பாடலுற்றான்: - "பச்சையாய்த்

தாலி யறுத்தவளைத் தாலிகட்டி னால்ஊரார்

கேலிபண்ண மாட்டாரா கேளண்ணா? - மேலும் 

சாதியிலே மட்டமென்று சாற்றுகின்றாய். அம்மட்டோ

வேதியனை நீக்கிடவும் வேண்டுமென்றாய் - ஏது

முடியாதே" என்று முடித்தெழுந்து சென்றான்.

படியேறி நின்றமெய்க் காதல் - துடிதுடிக்கும் 

முத்தன் அங்குவந்தான். "முகூர்த்தநாள் நாளைக்கே,

தத்தையை நீமணக்கச் சம்மதமா? - மெத்த

இருந்தசொத்தும் இல்லையப்பா ஏழைநான் நன்றாய்த்

தெரிந்ததா முத்தா? செலவும் - விரிவாக

இல்லை மணந்துகொள்" என்றுரைத்தான் ஆளி!அந்தச்

சொல்லால் துளிர்த்துப்பூத் துக்காய்த்து - நல்ல

கனியாய்க் கனிந்திட்ட முத்தன் உளந்தான்

தனியாய் இராதே "தடையேன் - இனி"என்றான்.

முந்திமணம் ஆயிற்றாம். "பாங்கு முறியவில்லை"

தந்திவந்து சேர்ந்ததாம் பின்பு!



2.18. திருமணம்


மாதிவள் இலையெனில் வாழ்தல் இலையெனும்

காதல் நெஞ்சக் காந்தமும், நாணத்

திரைக்குட் கிடந்து துடிக்கும் சேயிழை

நெஞ்ச இரும்பும் நெருங்கும்! மணம்பெறும்!


புணர்ச்சி இன்பம் கருதாப் பூவையின்

துணைப்பாடு கருதும் தூயோன், திருமணச்

சட்டத் தாற்பெறத் தக்க தீநிலை

இருப்பினும் அதனை மேற்கொளல் இல்லை.

அஃது திருமணம் அல்ல ஆதலால்!


என்தின வறிந்து தன்செங் காந்தள்

அரும்பு விரற்கிளி அலகு நகத்தால்

நன்று சொறிவாள் என்று கருதி

மணச்சட் டத்தால் மடக்க நினைப்பது

திருந்திவரும் நாட்டுக்குத் தீயஎடுத் துக்காட்டு!

மங்கையர் உலகின் மதிப்புக்குச் சாவுமணி!


மலம் மூடத்தான் மலர்பறித் தேன்எனில்

குளிர்மலர்ச் சோலை கோவென் றழாதா?


திருமண மின்றிச் செத்தால், அந்தச்

சில்லிட்ட பிணத்துக்குத் திருமணம் செய்ய

மெல்லிய வாழைக் கன்றைவெட் டுவது

புரோகிதன் புரட்டுநூல்! அதனைத்

திராவிடர் உள்ளம் தீண்டவும் நாணுமே!

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.