ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
இயலுமிடத்தில் எல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது, இயலாவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்ய வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்று - வினை செய்யுங்கால் இயலுமிடத்தெல்லாம் போராற் செய்தல் நன்று; ஒல்லாக்கால் செல்லும் வாய் நோக்கிச் செயல் - அஃது இயலாவிடத்து ஏனை மூன்று உபாயத்துள்ளும் அது முடிவதோர் உபாயம் நோக்கிச் செய்க. (இயலுமிடம்: பகையின் தான் வலியனாகிய காலம். அக்காலத்துத் தண்டமே நன்று என்றார், அஞ்சுவது அதற்கேயாகலின். இயலா இடம் - ஒத்த காலமும் மெலிய காலமும். அவ்விரண்டு காலத்தும் சாமபேத தானங்களுள் அது முடியும் உபாயத்தாற் செய்க என்றார். அவை ஒன்றற்கொன்று வேறுபாடுடையவேனும் உடம்படுத்தற் பயத்தான் தம்முள் ஒக்கும் ஆகலின், இதனான், வலியான், ஒப்பான், மெலியான் என நிலை மூவகைத்து என்பதூஉம், அவற்றுள் வலியது சிறப்பும் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை:
இயலும் இடமெல்லாம் வினைசெய்தல் நன்று: இயலாத காலத்து அதனை நினைந்திருந்து இயலும் இடம் பார்த்துச் செய்க. இது வினைசெய்து முடிந்ததில்லை யென்று இகழாது பின்பு காலம் பார்த்துச் செய்கவென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே-இயலுமிட மெல்லாம் போரால் வினைசெய்தல் நல்லதே; ஒல்லாக்கால் செல்லும் வாய் நோக்கிச் செயல்-அது இயலாவிடத்து ஏனை மூன்று ஆம்புடைகளுள்ளும் ஒன்றும் பலவும் ஏற்ற வற்றை எண்ணிச் செய்க. வினையென்றது இங்குத் தண்டத்தை. எளிய பகைவரை அடக்குவதும் விரைந்து பொருள் தருவதும் போரேயாகலின், அதை நன்றென்றார். இயலுமிடம் தான் வலியனான காலம்; இயலாவிடம் தான் மெலியனான காலம்; இயல்வது ஐயுறவான இடம் தான் ஒத்தோனான காலம். இயலாக் காலத்தும் ஐயுறவுக் காலத்தும் இன்சொல், பிரிப்பு, கொடை என்னும் ஏனை மூன்று ஆம்புடைகளுள் ஒன்றும் பலவும் ஏற்ற வகையிற் கையாள்க என்றார். ஏகாரம் தேற்றம்.
கலைஞர் உரை:
ஒரு செயலைச் செய்யும்போது சாம, தான, பேத, தண்டம் என்னும் எல்லா உபாயங்களிலும் தண்டம் என்னும் உபாயம் கொண்டு செய்வது நல்லது. அது பலன் அளிக்காத போது, பிற மூன்றினுள் ஏற்ற ஒன்று கொண்டு செய்க.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போது சாம, தான, பேத, தண்டம் என்னும் எல்லா உபாயங்களிலும் தண்டம் என்னும் உபாயம் கொண்டு செய்வது நல்லது. அது பலன் அளிக்காத போது, பிற மூன்றினுள் ஏற்ற ஒன்று கொண்டு செய்க.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம்(மேற்கொண்ட காரியத்தைச்) செய்துவிடுவது நல்லது. அந்த வாய்ப்பு இல்லாத போது முன் எண்ணியபடி காத்திருந்து செய்யவேண்டும்.
Translation
When way is clear, prompt let your action be;
When not, watch till some open path you see.
Explanation
Whenever it is possible (to overcome your enemy) the act (of fighting) is certainly good; if not, endeavour to employ some more successful method.