LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 599 - அரசியல்

Next Kural >

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் - எல்லா விலங்கினும் தான் பேருடம்பினது, அதுவேயும் அன்றிக் கூரிய கோட்டையும் உடையது ஆயினும்; யானை புலி தாக்குறின் வெரூஉம் - யானை தன்னைப் புலி எதிர்ப்படின் அதற்கு அஞ்சும். (பேருடம்பான் வலி மிகுதி கூறப்பட்டது. புலியின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடைத்தாயினும் யானை ஊக்கம் இன்மையான் அஃதுடைய அதற்கு அஞ்சும் என்ற இது, பகைவரின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடையராயினும், அரசர் ஊக்கமிலராயின், அஃதுடைய அரசர்க்கு அஞ்சுவர் என்பது தோன்ற நின்றமையின், பிறிது மொழிதல்.)
மணக்குடவர் உரை:
யானை, பெரிய உடம்பினதாய்க் கூரியகோட்டையும் உடைத்தாயினும் புலி பொருமாயின் அஞ்சும். இஃது உள்ளமுடைமை யில்லாதார் பெரியராயினும் கெடுவார் என்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
யானை பரியது கூர்ங்கோட்டது ஆயினும் -யானை விலங்குகளெல்லாவற்றுள்ளும் உருவத்திற் பெரியதும், அதோடு கூரிய கொம்புள்ளதுமாயினும் ; புலி தாக்குறின் வெருவும் -உருவப் பருமையுங் கொம்புமில்லாத புலி தன்னைத்தாக்கின் ,அஞ்சி எதிர்க்காது அதனாற் கொல்லப்படும். பருத்தவுடம்பு வலிமிகுதி குறிக்கும். யானை மெய்வலிமை மிக்கதும் குத்தும் உறுப்புடையது மாயிருந்தும் ,ஊக்கமின்மையால் அதனை யுடைய சிற்றுடம்பு மோழைத் தலைப்புலியாற் கொல்லப்படும், என்பது ஊக்கமில்லாத அரசர் படைப் பெருமையுங் கருவிச்சிறப்பும் உடையவராயினும், அவை குன்றியிருந்தும் ஊக்கஞ் சிறந்த சிற்றரசரால் வெல்லப்படுவர் என்பதை உணர்த்துதலால். இது பிறிது மொழிதல் அணியாம் .உம்மை உயர்வு சிறப்பு. ' வெரூஉம்' இன்னிசையளபெடை.
கலைஞர் உரை:
உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்.
சாலமன் பாப்பையா உரை:
யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஊக்கமுடைமை என்பது மன வலிமையேயன்றி உடல் வலிமையல்ல.) மிகப் பெரிய உடலும் கூர்மையான தந்தங்களும் உள்ளதானாலும் ஒரு யானை (ஊக்கக் குறைவால்) ஊக்கம் மிகுந்த புலியின் தாக்குதலுக்கு அஞ்சும்.
Translation
Huge bulk of elephant with pointed tusk all armed, When tiger threatens shrinks away alarmed!.
Explanation
Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger.
Transliteration
Pariyadhu Koorngottadhu Aayinum Yaanai Veruum Pulidhaak Kurin

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >