திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பொருட் பொருளார் புன்னலம் - இன்பமாகிய பொருளை இகழ்ந்து பொருளாகிய பொருளையே விரும்பும் மகளிரது புல்லிய நலத்தை; அருட் பொருள் ஆயும் அறிவினவர் தோயார் - அருளொடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும் அறிவினையுடையார் தீண்டார். (அறம் முதலிய நான்கும் பொருள் எனப்படுதலின், 'பொருட் பொருள்' என விசேடித்தார். புன்மை - இழிந்தார்க்கே உரித்தாதல். தாம் விரும்புகின்ற அறத்திற்கு அவர் மெய்ந்நலம் மறுதலையாகலின், 'தோயார்' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
பொருளைப் பொருளாகக் கொள்வாராது புல்லிய நலத்தைத் தோயார், அருளைப் பொருளாக ஆராயும் அறிவுடையார்.
தேவநேயப் பாவாணர் உரை:
அருட்பொருள் ஆயும் அறிவினவர்- அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து ஈட்டும் அறிவினையுடையார்; பொருட்பொருளார் புல் நலம் தோயார்-அறத்தையும் இன்பத்தையும் நோக்காது பொருளையே பொருளாகக் கொண்ட விலைமகளிராற் பெறும் இழிந்த சிறிய இன்பத்திற்படியார். காட்சியுங் கருத்துமாகிய எல்லாப்பொருள் கட்கும் பொருள் என்பது பொதுப்பெயராதலின், 'பொருட் பொருள்' என இருபெயரொட்டாக்கினார். புன்மை தன்மையிலும் அளவிலுஞ் சிறுமை. தோய்தல் தொடுதல் அல்லது படிதல். "தாடோய் தடக்கை"(புறம்.14), கானிலந் தோயாக் கடவுளை (நாலடி. கடவுள் வாழ்த்து) என்பன காண்க. முழுகுதல் என்னும் பொருளும் உள்ளதேனும், அது இங்கு ஆழ்ந்து ஈடுபடுதலைக் குறிக்குமாதலின் விலக்கப்பட்டது. அறவழியில் ஈட்டும் பொருளை 'அருட்பொருள்' என்றும், அதற்குத் தடையாயிருத்தலால் 'புன்னலந்தோயார்' என்றும், கூறினார்.
கலைஞர் உரை:
அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள் பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக் கருதுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
அருளோடுகூடப் பொருள்தேடும் அறிவினை உடையவர், வெறும் பொருளையே தேடும் பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.