புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
புகழ்பட வாழாதார்- தமக்குப் புகழுண்டாக வாழமாட்டாதார்; தம் நோவார் அதுபற்றிப் பிறர் இகழ்ந்தவழி, 'இவ்விகழ்ச்சி நம் மாட்டாமையான் வந்தது' என்று தம்மை நோவாதே தம்மை இகழ்வாரை நோவது எவன்-தம்மை இகழ்வாரை நோவது என் கருதி? (புகழ்பட வாழலாயிருக்க அதுமாட்டாத குற்றம் பற்றிப் பிறர் இகழ்தல் ஒரு தலையாகலின், இகழ்வாரை என்றார்.)
மணக்குடவர் உரை:
புகழ்பட வாழ மாட்டாதார் தங்களை நோவாது தம்மை யிகழ்வாரை நோகின்றது யாதினுக்கு?
இது புகழ்பட வாழமாட்டாதார் இகழப்படுவரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
புகழ்பட வாழாதார்-தமக்குப் புகழுண்டாக வாழாதவர்; தம் நோவார்-அது பற்றிப் பிறர் தம்மை யிகழ்ந்த விடத்து அதற்குக் கரணியமான தம்மையே நொந்து கொள்ளாது; தம்மை இகழ்வாரை நோவது எவன் - தம்மை யிகழ்ந்தவரை நோவது எதற்கு?
புகழ்பட வாழாமையின் தீய விளைவு இங்குக் கூறப் பட்டது.
கலைஞர் உரை:
உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள் அதற்காகத் தம்மை
நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து
பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?
சாலமன் பாப்பையா உரை:
புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அப்படித்திறமையும் புகழுமில்லாதவர் ஒரு காரியத்துக்கு நானென்று முன்வந்து அக்காரியம் கெட்டுப் போய் அதற்காக அவரைப் பிறர் இகழ்ந்தால்) பிறர் புகழும்படி நடந்து கொள்ளத் தெரியாதவர் தம்மைத் தாமே நொந்துகொள்ள வேண்டுமே யன்றித் தம்மை இகழ்வாரை நொந்து கொள்வதில் என்ன பயன்?
Translation
If you your days will spend devoid of goodly fame,
When men despise, why blame them? You've yourself to blame.
Explanation
Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability.