|
||||||||
சிறுகாப்பியம் |
||||||||
2.1 போர் மறவன் 1 (காதலனின் பிரிவுக்கு ஆற்றாதவளாய்த் தலைவி தனியே வருந்துகிறாள்.) தலைவி என்றன் மலருடல் இறுக அணைக்கும்அக் குன்றுநேர் தோளையும், கொடுத்தஇன் பத்தையும் உளம்மறக் காதே ஒருநொடி யேனும்! எனைஅவன் பிரிந்ததை எவ்வாறு பொறுப்பேன்! வான நிலவும், வண்புனல், தென்றலும் ஊனையும் உயிரையும் உருக்கின! இந்தக் கிளிப்பேச் சோஎனில் கிழித்தது காதையே! புளித்தது பாலும்! பூநெடி நாற்றம்! (காதலன் வரும் காலடி ஓசையிற் காதைச் செலுத்துகிறாள்.) காலடி ஓசை காதில் விழுந்தது. நீளவாள் அரை சுமந்த கண் ணாளன் வருகின் றான்இல்லை அட்டியே! 2 (தலைவன் வருகை கண்ட தலைவி வணக்கம் புகலுகிறாள்.) தலைவன் வாழிஎன் அன்பு மயிலே, எனைப்பார்! சூழும்நம் நாட்டுத் தோலாப் பெரும்படை கிளம்பிற்று! முரசொலி கேள்நீ! விடைகொடு! (தலைவி திடுக்கிடுகிறாள். அவள் முகம் துன்பத்தில் தோய்கிறது.) தலைவி மங்கை என்னுயிர் வாங்க வந்தாய்! ஒன்றும் என்வாய் உரையாது காண்க! தலைவன் பாண்டி நாட்டைப் பகைவன் சூழ்ந்தான்! ஆண்டகை என்கடன் என்ன அன்னமே? நாடு தானே நம்மைப் பெற்றது? நாமே தாமே நாட்டைக் காப்பவர்? உடலும் பொருளும் உயிரும் ஈன்ற கடல்நிகர் நாட்டைக் காத்தற் கன்றோ? பிழைப்புக் கருதி அழைப்பின்றி வந்த அழுக்குளத் தாரிய அரிவைநீ அன்றே! ஒல்காப் பெரும்புகழ்த் தொல்பெரும் பழங்குடி நல்லியல் நங்கை, நடுக்குறல் தகுமோ? வென்றுவா என்று நன்று வாழ்த்திச் சென்றுவர விடைகொடு சிரிப்பொடும் களிப்பொடும்! தலைவி பிரியா துன்பால் பெற்ற இன்பத்தை நினைந்துளம், கண்ணில் நீரைச் சேர்த்தது! வாழையடி வாழைஎன வந்தஎன் மாண்பு வாழிய சென்று வருக என்றது. (தலைவன் தலைவியை ஆரத்தழுவிப் பிரியா உளத்தோடு பிரிந்து செல்கிறான்.) 3 (பகைவன் வாளொடு போர்க்களத்தில் எதிர்ப் படுகின்றான்; வாளை உருவுகின்றான். தலைவனும் வாளை உருவுகின்றான்.) தலைவன் பகையே கேள்நீ, பாண்டிமா நாட்டின் மாப்புகழ் மறவரின் வழிவந் தவன்நான்! என்வாள் உன்உயி ரிருக்கும் உடலைச் சின்ன பின்னம் செய்ய வல்லது! வாளை எடுநின் வல்லமை காட்டுக. (இருவரும் வாட்போர் புரிகிறார்கள்.) 4 (தலைவன் எதிரியின் வாள் புகுந்த தன் மார்பைக் கையால் அழுத்தியபடி சாய்கிறான்.) தலைவன் ஆஎன் மார்பில் அவன்வாள் பாய்ந்ததே! (தரையில் வீழ்ந்து, நாற்றிசையையும் பார்க்கிறான்.) என்னை நோக்கி என்றன் அருமைக் கன்னல் மொழியாள், கண்ணீர் உகுத்துச் சாப்பாடும் இன்றித் தான்நின் றிருப்பாள். என்நிலை அவள்பால் யார்போய் உரைப்பார்? (வானில் பறவை ஒன்று மிதந்து போவதைக் காணுகின்றான்.) பறவையே ஒன்றுகேள்! பறவையே ஒன்றுகேள்! நீபோம் பாங்கில் நேரிழை என்மனை, மாபெரும் வீட்டு மணிஒளி மாடியில் உலவாது மேனி, உரையாது செவ்வாய், இமையாது வேற்கண், என்மேல் கருத்தாய் இருப்பாள் அவள்பால் இனிது கூறுக: பெருமையை உனது அருமை மணாளன் அடைந்தான். அவன்தன் அன்னை நாட்டுக் குயிரைப் படைத்தான். உடலைப் படைத்தான். என்று கூறி ஏகுக மறந்திடேல்! (தலைவன் தோள் உயர்த்தி உரத்த குரலில்) பாண்டி மாநாடே, பாவையே! வேண்டினேன் உம்பால் மீளா விடையே! 2. 2 ஒன்பது சுவை 1. உவகை (இரவு! அவள் மாடியில் நின்றபடி தான் வரச் சொல்லியிருந்த காதலனை எதிர்பார்க்கின்றாள். அவன் வருகின்றான்.) காதலன் என்மேல் உன்றனுக் கெத்தனை அன்படி! என்உயிர் நீதான்! என்னுடல் நீதான்! உன்னை யன்றிஇவ் வுலகின் ஆட்சியும் பொன்னும் வேண்டேன், புகழும் வேண்டேன். காத்திருப் பேன்எனக் கழறினை வந்தேன். பூத்திருக் கும்உன் புதுமுகம் காட்டினை. மாளிகை உச்சியின் சாளரம் நீங்கி நூலே ணியினைக் கால்விரல் பற்றித் தொத்தும் கிளிபோல் தொடர்ந்திறங் குவதாய் முத்தெழுத் தஞ்சல் எழுதினை! உயிரே இறங்கடி ஏந்தும் என்கை நோக்கி! (அவள் நூலேணி வழியாக இறங்குகிறாள்.) காதலன் வா பறந்து! வாவா மயிலே! (அவளைத் தோளில் தாங்கி இறங்குகிறான்.) காதலன் வளைந்தது கையில் மாம்பழக் குலைக்கிளை! ஒரேஒரு முத்தம் உதவு. சரி!பற! (இருவரும் விரைந்து சென்று அங்கிருந்த ஓர் குதிரைமேல் ஏறி அப்புறப் படுகிறார்கள்.) 2. வியப்பு (இருவரும் ஒரு சோலையை அடைகிறார்கள். குதிரையை ஒரு மரத்தில் கட்டி) காதலன் வந்து சேர்ந்தோம் மலர்ச்சோ லைக்கண்! என்னிரு தோளும் உன்உடல் தாங்கவும், உன்னிரு மலர்க்கைகள் என்மெய் தழுவவும் ஆனது! நகரினை அகன்றோம் எளிதில்! (இருவரும் உலாவுகின்றனர்.) காதலன் சோம்பிக் கிடந்த தோகை மாமயில் தழைவான் கண்டு மழைவான் என்று களித்தாடு கின்றது காணடி! வியப்பிது! (சிறிது தொலைவில் செல்லுகிறார்கள்.) 3. இழிப்பு காதலன் குள்ளமும் தடிப்பும் கொண்ட மாமரத் திருகிளை நடுவில் ஒருமுகம் தெரிந்தது! சுருங்கிய விழியான்; சுருண்ட மயிரினன்; இழிந்த தோற்றத்தன் என்னபார்க் கின்றான்? நமைநோக்கி ஏனவன் நகரு கின்றான்? உற்றுப்பார்! அவன் ஒருபெருங் கள்வன். காலடி ஓசை காட்டாது மெல்லஅக் கொடியோன் நம்மேற் குறியாய் வருவதை உணர்க! அன்புக் குரியாய் உணர்க! (தம்மை நோக்கி வரும் அத்தீயனை இருவரும் பார்க்கிறார்கள்.) 4. வெகுளி (கோபம்) காதலன் வெகுளியை என்உளத்து விளைக்கின் றானவன்! புலிபாய்ந் திடும்எனில் போய்ஒழிந் திடும்நரி! (காதலன் கண்ணிற் கனல் எழுகின்றது. தன் உள்ளங்கை மடங்குகின்றது. அந்தக் கள்வன் தன்னை நெருங்குவதையும் காதலன் காணு கின்றான். காதலி காணுகின்றாள்.) 5. நகை காதலன் நட்டு வீழ்ந்தான் நடை தடுமாறி! கள்ளுண் டான்.அவ் வெள்ளத்தி லேதன் உள்ளம் கரைத்தான். உணர்வி ழந்தான். உடைந்தது முன்பல் ஒழுகிற்று குருதி! (இருவரும் சிரிக்கிறார்கள்.) காதலன் ஆந்தைபோல் விழித்தான். அடங்காச் சிரிப்பை நமக்குப் பெண்ணே நல்விருந் தாக்கினான். (இருவரும் மறுபுறம் செல்லுகிறார்கள்.) 6. மறம் (வீரம்) காதலன் என்ன முழக்கம்? யார்இங்கு வந்தனர்? கால்பட்டுச் சருகு கலகல என்றது. (உறையினின்று வாளை உருவும் ஓசை கேட்கிறது.) காதலன் எவனோ உறையினின் றுருவினான் வாளை; ஒலிஒன்று கிலுக்கென்று கேட்டது பெண்ணே! ஒருபுறம் சற்றே ஒதுங்கி நிற்பாய். நினது தந்தை நீண்முடி மன்னன் அனுப்பிய மறவன் அவனே போலும்! (காதலி ஒருபுறம் மறைந்து, நடப்பதை உற்று நோக்கியிருக்கிறாள்.) காதலன் (தன்னெதிர் வந்து நின்ற மறவனை நோக்கி) அரசன் ஆணையால் அடைந்தவன் நீயோ? முரசு முழங்கும் முன்றிலுக் கப்பால் அரண்மனை புனைந்த அழகு மாடியில் வைத்தபூ மாலையை வாடாது கொணர்ந்தது இத்தோள்! உனைஇங் கெதிர்ப்பதும் இத்தோள்! நேரிழை இன்றி நிலைக்காது வாழ்வெனக் கோரி அவளைக் கொணர்ந்ததும் இத்தோள்! போர்மற வர்சூழ் பாரே எதிர்ப்பினும் நேரில் எதிர்க்க நினைத்ததும் இத்தோள்! உறையி னின்று வாளை உருவினேன். தமிழ்நாட்டு மறவன்நீ தமிழ்நாட்டு மறவன்நான் என்னையும் என்பால் அன்புவைத் தாளையும் நன்று வாழ்த்தி நட வந்தவழி! இலைஎனில் சும்மா இராதே; தொடங்குபோர்! (வாட்போர் நடக்கிறது.) காதலன் மாண்டனை! என்வாள் மார்பில் ஏற்றாய்; வாழி தோழா! நின்பெயர் வாழி! (வந்தவன் இறந்து படுகிறான்.) 7. அச்சம் (காதலன் தன் காதலியைத் தேடிச் செல்கிறான்.) காதலன் அன்பு மெல்லியல், அழகியோள் எங்கே? பெருவாய் வாட்பல் அரிமாத் தின்றதோ! கொஞ்சும் கிள்ளை அஞ்ச அஞ்ச வஞ்சக் கள்வன் மாய்த்திட் டானோ! (தேடிச் செல்லுகின்றான். பல புறங்களிலும் அவன் பார்வை சுழல்கின்றது.) 8. அவலம் (காதலி ஒருபுறம் இறந்து கிடக்கிறாள். காதலன் காணுகிறான்.) காதலன் ஐயகோ அவள்தான்! அவள்தான்! மாண்டாள். பொரிவிழிக் கள்வன் புயலெனத் தோன்றி அழகு விளக்கை அவித்தான்! நல்ல கவிதையின் சுவையைக் கலைத்தான் ஐயகோ! என்றன் அன்பே, என்றன் உயிரே! என்னால் வந்தாய், என்னுடன் வந்தாய். பொன்னாம் உன்னுயிர் போனது! குருதியின் சேற்றில் மிதந்ததுன் சாற்றுச் சுவையுடல்! கண்கள் பொறுக்குமோ காண உன்நிலை? எண்ணம் வெடித்ததே! எல்லாம் நீஎன இருந்தேன்; இவ்வகை இவ்விடம் இறந்தாய்! தனித்தேன், உய்விலை. தையலே, தையலே! என்பால் இயற்கை ஈந்த இன்பத்தைச் சுவைக்குமுன் மண்ணில் சுவர வைத்துக் கண்ணீர் பெருக்கிநான் கதற வைத்ததே! ஐயகோ பிரிந்தாய்! ஐயகோ பிரிந்தாய்! 9. அறநிலை கல்வி இல்லார்க்குக் கல்வி ஈகிலார் செல்வம் இல்லார்க்குச் செல்வம் ஈகிலார் பசிப்பிணி, மடமைப் பரிமேல் ஏறி சாக்காடு நோக்கித் தனிநடை கொண்டது! அன்போ அருளோ அடக்கமோ பொறுமையோ இன்சொலோ என்ன இருத்தல் கூடும்? வாழான் ஒருவன் வாழ்வானைக் காணின் வீழ இடும்பை விளைக்கின் றானே! வையம் உய்யு மாறு செய்வன செய்து கிடப்பேன் இனிதே! 2.3. காதல் வாழ்வு ஒன்று மணம் முடிந்தது. தனியிடம், விடுதலைபெற்ற இரண்டுள்ளம், அளவு கடந்த அன்பு - இவை மகிழ்ச்சிக் கொடியேற்றிக் காதல் முரசு முழக்கின - இன்ப விழா! முடிவில்லை. இரண்டு ஒருநாள் அவர்கள் இந்த உலகில் இறங்கி வந்து பேசலுற்றார்கள். "மக்கள் தொடர்பில்லாதது. தென்றலில் சிலிர்க்கும் தழை மரங்கள் உள்ளது. ஊற்றிற் சிறந்த நீர் நிலையின் துறையில் அமைந்த நுழைவாயிலுல்லது. அழகிய சிறுகுடில்! நாம் அங்கே தங்கலாம் - இது என் அவா அத்தான்." "ஆம்! குறைவற்ற தனிமை!" பறந்தார்கள். மூன்று "நாயின் நாக்கைப் போன்ற சிவந்த மெல்லடியைத் தூக்கிவை குடிசையில்." "நான் மட்டுமா?" அதிர்ந்தது அவள் உள்ளம்! இமைப்போதில் ஒன்றில் ஒன்று புதைந்த இரண்டுடல் குடிசையில் நுழைந்தன. "விட்டுப் பிரிவேன் என்று அச்சப் பட்டாயா?" "மன்னிக்க வேண்டும்!" குடிசை சாத்தப் பட்டது. நாவற்பழம் நீர்நிலையில் விழுந்து கொண்டிருக்கும் இச்சிச் சென்ற ஒலி குடிசைக்குள் சென்றது. அதே ஒலி குடிசையினின்றும் வௌிவந்தது. இது எதிரொலி யன்று! நான்கு "தேக்கும் அதில் உடல் பின்னிய சீந்தற் கொடியும் பார், நம்மைப்போல!" "இல்லை, அரண்மனை கசந்தால் அழகிய குடிலில் குடியேறத் தேக்கு நடவாது; சீந்தல் நகராது." வானில் ஓர் ஒலி! "வைகையின் மங்கிய ஒளியில் மங்காத இன்னிசையை உதிர்த்தன வானப் புட்கள், ஆணும் பெண்ணுமாக!" "நாமும் வானில் -- அடடா சிறகில்லையே!" நீர்நிலை கட்டித் தழுவிக் கொண்டது இருவரையும். ஐந்து "கெண்டைகள் துள்ளி விளையாடி நீரின் அடிமட்டத்தில் அள்ளி நுகர்வன இன்பத்தை!" "நாமும் அங்கு இன்பம் நுகர்வோம் -- அடடா, நாம் மீன்களல்லவே!" கண்ணிமைப்போது நான் நீருக்குள் ஒளிந்து கொள்கிறேன்! பிற்பகுதியும் கேள்." "நிறுத்துங்கள்! முற்பகுதியே என் பாதி உயிரைப் போக்கி விட்டது!" மாற்றிச் சுவைக்கும் நான்கு விழிகள் தம்மிற் பிரியாமல் நீராடின. ஆறு "கரையேறுங்கள் என்னோடு." "மாலையின் குளிரும் நனைந்த சேலையின் குளிரும் உன் இன்பத்தைப் பெருக்கவில்லையா?" "தவறு! நம் இருவர்க்கும் நடுவில் முயல் நுழையும் வௌி, இதற்கு நனைந்த ஆடை காரணம்." "அதோ நம்மை நோக்கி நம் வீட்டு ஆள்." குடிசையில் மறைந்தார்கள் ஓடி! ஏழு "அழைத்துவரச் சொன்னார்கள் அப்பா." "ஏன்?" "கப்பல் வந்திருக்கிறது." "மெல்லப் பேசு!" "என்ன ஓசை குடிசையின் உட்கட்டில்? விட்டு விட்டு இசைக்கும் ஒருவகைச் சிட்டுக் குரல்!" "என்ன சொன்னார் அப்பா?" "அனுப்ப வேண்டுமாம் உம்மை." "சிங்கைக்கா?" "ஆம். -- என்ன அங்கே திட்டென்று விழுந்த உடலின் ஓசை!" "நாலு நாட்கள் நீடிக்கலாமா?" "இன்றைக்கே! இதென்ன குடிசையில் வெள்ளம்?" "நீ போ! இதோ வருகின்றேன்." எட்டு br> "தேம்பி அழுது திட்டென்று வீழ்ந்து கண்ணீரை ஆறாய்ப் பெருக்கினை அன்புடையாளே!" "இறக்கமாட்டேன் அத்தான், உனைவிட்டுப் பிரியவில்லை என்று நீங்கள் உறுதி கூறுமட்டும்." "கடமை என் வாயை அடைக்கிறது." "என் மடமை கிடந்து துடிக்கிறது." "மடமை அல்ல; உயிரின் இயற்கை." " `தந்தை சொற்படி நடக்கட்டும் என் அத்தான்' என்று என் நெஞ்சுக்குக் கூற என்னால் முடிகிறது; உயிருக்குச் சொல்லி நிறுத்த முடியவில்லை." ஒன்பது "தோழி, நான் அப்பாவிடம் போகிறேன்." "நீர் நிலையை அடுத்த குடிசையிலா அப்பா இருக்கிறார்?" "என் கால்கள் என்னை ஏமாற்றுகின்றன. என் பிரிவால் அவள் சாகிறாள்! சென்று காப்பாற்று." "எவ்வளவு நேரம்?" "நேரமா?" "எத்தனை நாள்?" "நாளா? அடுத்த ஆண்டில் வந்துவிடுவேன்." "கால் நாழிகை சாக்காட்டின் கதவைச் சாத்திப் பிடித்துக் கொண்டிருக்க முடியும். ஐயா! அடுத்த ஆண்டில் அவள் உடலின் துகள் கலந்த மண்ணும் மட்கி வௌியுடன் வௌியாய்க் கலந்ததென்ற கதை பழமையாய்விடும்." "என் துன்ப உள்ளத்தைத் தந்தையிடம் கூறுகிறேன்." பத்து (நூலேணியில் அழுகுரல், கண்ணீர் -- அவன் கப்பலேறுகிறான்.") கப்பலுக்குள் - "இங்கே உட்கார வேண்டும் நீவிர்." "கணவனும் மனைவியும் தங்கும் இடமல்லவா இது?" "இறந்திருப்பாளானால், அது அவள் செய்த முதல் குற்றம். இறந்தசெய்தி என் காதில் எட்டாதிருக்க முயன்றிருப்பாளானால் அது இரண்டாவது குற்றம்." "இரண்டாவது குற்றத்திற்கு அவள் ஆளாகவில்லை. தன் நிலையை விளக்கும்படி என்னை அனுப்பினாள்." "பயனற்றது இவ்வுலகம்! ஒரு பற்று என்னை வாட்டு கின்றது. அவள் இறந்தாள்; ஆதலால் நான் இறந்தேன். இதை அவள் அறியாளே! நீவிர் சான்றாகக் கடலில் கலக்கிறேன்." சிரிப்பு! - இரண்டு இளைஞர்கள் தோழியும் தலைவியு மாகிறார்கள். "அத்தான்! நாம் இருவரும் சிங்கைக்குப் போகிறோம்." "தோழி! என் மாமாவிடமும் அத்தையிடமும் உடலும் உயிருமாக இருவரும் செல்லுகின்றார்கள் என்று கூறு!" வாழ்க, காதல் வாழ்வு! |
||||||||
by Swathi on 25 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|