|
|||||
கார்த்திகை தீபத்தின் பாரம்பரியம் |
|||||
இந்து மதப் பண்டிகைகளில் முக்கியமான ஒன்று கார்த்திகை தீபம். வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கமான ஒன்று என்றாலும், திருக்கார்த்திகை நாளன்று ஆலயத்தில் தீபம் ஏற்றுவதும், அதன் அடிப்படையில் வீடுகளில் தீபம் ஏற்றுவதும் சிறப்பு.
சிவபெருமானில் பஞ்சபூத திருத்தலங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் திருகார்த்திகை பண்டிகை பாரம்பரியமாக கொண்டாடப்படும்.
கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த நாளன திருக்கார்த்திகை இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
பெளர்ணமியன்று சர்வாலய தீபம்
கார்த்திகை நாளன்று 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் வீடுகளில் 27 தீபம் ஏற்றுவது சிறப்பு ஆகும். ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவது சிறப்பு. கார்த்திகை நாளன்று "சொக்கப்பனை"க்கு நெருப்பு வைத்து, சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடும் நாள் கார்த்திகைத் திருநாள்.
குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்று தினங்கள், கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படும். சிலர் கார்த்திகை மாதம் முழுவதுமே வீட்டு வாசலில் விளக்கேற்றி வைத்து வழிபடுவார்கள்.
முருகப் பெருமானின் ஆலயங்களில் கொண்டாடப்படுவது குமராலய தீபம். இது கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள் ஆகும். விஷ்ணு ஆலயங்களில் கார்த்திகை மாதத்தில் ரோகினி நட்சத்திரம் இருக்கும் நாளில் கொண்டாடப்படுவது விஷ்ணுவாலய தீபம் ஆகும்.அனைத்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தின் பெளர்ணமியன்று கொண்டாடப்படுவது சர்வாலய தீபம் ஆகும்.
சோதி வடிவாய் தோன்றி அருளினார்
கார்த்திகை தீபத் திருநாளின் பாரம்பரியமும் சுவராசியமானது. பிரம்மாவும், விஷ்ணுவும் யார் பெரியவர் என்று சண்டையிட்டனர். சர்ச்சையைத் தீர்க்க, சோதிப்பிழம்பாகத் தோன்றி தனது அடியையும் முடியையும் தேடும்படி அசரீரியாக கூறினார். படைத்தல் தொழிலுக்கு உரிய பிரம்மாவும், காத்தல் தொழிலுக்கு உரிய விஷ்ணுவும் பலத்த முயற்சிகளுக்கு பிறகு அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.
தாம் கண்ட சோதியை, உலகமே காணும்படி காட்டியருள வேண்டும் என்று பிரம்மாவும், விஷ்ணுவும் கேட்டுக் கொண்டனர். அதன்படி, சிவபெருமான், திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று சோதி வடிவாய் தோன்றி அருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகையன்று தீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்
திருவண்ணாமலையில் காலையில் பரணி தீபம் ஏற்றப்படும், மாலையில் மலையில் தீபம் ஏற்றப்படும். சிவன் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாக நின்றார் என்பதை உணர்த்தும் வண்ணம், மலையுச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. 2668 அடி உயரம் கொண்ட மலை மீது தீபம் ஏற்றப்படுவது வழக்கம். செம்பு, இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் பிரம்மாண்டமான தீபம் ஏற்றப்படும். |
|||||
by Kumar on 26 Nov 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|