|
|||||
தனித்துவமிக்க தலைமையாசிரியர் - திருமதி. மரகதம் |
|||||
தனித்துவமிக்க தலைமையாசிரியர் - திருமதி. மரகதம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி – செஞ்சேரி அறிமுகம்: ‘தலைமை’ என்பது வீட்டிற்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் மிக முக்கியம். நாட்டின் ஒரு அங்கமான கல்வித்துறைக்கும் பள்ளிக்கும் ‘தலைமை’ என்பது மிக முக்கியம். ஒரு தெளிவான சிந்தனையோடு, நேர்கொண்ட பார்வையோடு, மாணவர்களின் கற்பித்தலோடு சேர்;ந்து பயணிக்கும் ஆசிரியர்களை அரவணைத்து அவர்களைச் சிறந்த முறையில் வழிகாட்டி, கல்விப்பணிகளைச் செய்பவர் செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. மரகதம் அவர்கள் ஆவார். பெற்றோர்கள், கல்வியதிகாரிகள் ஆகியோரை சேர்த்தணைத்து பள்ளியின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்ப வசதிகள் இவையனைத்தும் அரசுப் பள்ளியில் பயிலும் சாமானிய மக்களின் குழந்தைகளுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருபவர் திருமதி. மரகதம் அவர்கள் ஆவார். பள்ளியின் சிறப்புகள்: மாவட்டத்தின் சிறந்த பள்ளி மற்றும் சிறந்த பெற்றோர் ஆசிரியர் கழகம் என விருதுகள் பல பெற்ற பள்ளி கோவை மாவட்டத்தின் செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகும். தமிழகத்திலேயே முதன்முறையாகப் பின்லாந்து கல்விமுறையின் மெய் நிகர் வகுப்பறையைக் (Virtual Reality Class) கொண்ட அரசுப்பள்ளி செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியே ஆகும். ஊர்மக்களின் கல்விச்சீரால் தொடர்ந்து உயர்ந்து வரும் பள்ளியின் கட்டமைப்பு வசதிகள், தொடுதிரையுடன் கூடிய கணினிகளைக் கொண்ட ஸ்மார்ட் வகுப்பறைகள் போன்ற பல சிறப்புகளை இப்பள்ளி பெற்றுள்ளது. தலைமையாசிரியர் (திருமதி. மரகதம் அவர்கள்):: 1988ம் ஆண்டு இப்பள்ளிக்கு பணிக்கு வந்த திருமதி. மரகதம் அவர்கள் 33 வருடங்களாக பணியாற்றி வருகிறார். இவர் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்று 6 வருடங்கள் ஆகின்றன. ஒரு பள்ளியானது கட்டமைப்பு ரீதியிலாக முன்னேறுவதற்கு அரசு தரும் நிதி மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. எனவே, நன்கொடையாளர்களைச் சந்தித்து, அதன் மூலம் கிடைத்த தொகைகளில் பள்ளி கட்டிடங்களில் புதுமைகளைப் புகுத்தியதாகக் கூறுகிறார். பள்ளிச்சுவர்களில் ஓவியங்கள் வரைவதால் மாணவர்களைக் கவரலாம் என்பதால் சுவர்களில் ஓவியங்கள் தீட்ட ஏற்பாடுகள் செய்தார். இதனால் இடைநின்ற மாணவர்கள் கூட மீண்டும் பள்ளிக்கு வரத் தொடங்கியதாகத் திருமதி. மரகதம் அவர்கள் குறிப்பிடுகிறார். இதனால் தொடக்கத்தில் 98 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை இன்று 200 ஐ தொடப்போகிறது எனப் பெருமிதத்துடன் கூறுகிறார். ஏதேனும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் வரும் மாணவர்கள், மாலையில் வீடு திரும்பும் போது ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்ததாகத் திருமதி. மரகதம் அவர்கள் குறிப்பிடுகிறார். “தினம் ஒரு நன்மையைச் செய்; சந்தோஷமாக இரு” என்பது ஒரு தாரக மந்திரம். அதனைத் தான் கடைப்பிடிப்பதாகவும் குறிப்பிடுகிறார்;. Smart TV கொண்டு வந்ததன் காரணமாக மாணவர்களிடையே இருந்த கவனச்சிதறல் காணாமல் போனதாகக் குறிப்பிடுகிறார். இதனால் சராசரி நிலையிலிருந்த மாணவர்கள் 100க்கு 100 சிறந்த மாணவர்களாக மாறினர் என்றும் குறிப்பிடுகிறார். மேலும், சிறந்த கழிப்பறை வசதிகள், சுத்தமான குடிநீர் வசதி போன்றவற்றையும் மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் திருமதி. மரகதம் அவர்கள். மெய் நிகர் வகுப்பறையைப் பற்றிக் கேட்கும் போது, “கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன், மாவட்ட அலுவலர், உதவி கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர் ஆகிய அனைவரும் மெய் நிகர் வகுப்பறை எங்கள் பள்ளிக்குக் கிடைக்கக் காரணமாக இருந்தனர்” என்று கூறுகிறார். சாதனை பெண்மணி, நல்லாசிரியர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்ற திருமதி. மரகதம் அவர்கள், ‘விருதுகளுக்காக இல்லாமல் அவரவர் தத்தமது வேலையை மனசாட்சியின் படி உண்மையாகச் செய்தாலே போதும்; வெற்றி நிச்சயம்’ என்கிறார். கல்விச்சீர்: செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்காக அவ்வூர் மக்களே, ஆண்டுதோறும் கல்விச்சீர் கொடுக்கின்றனர். ஆண்டுதோறும் இலட்ச ரூபாய் செலவில் ‘கல்விச்சீர்’ கொடுக்கின்றனர். முதல்வருடம் வண்ண வண்ண இருக்கைகள், இரண்டாவது வருடம், கணினிகள், மற்றொரு வருடம் கலையரங்கம் கட்டிக் கொடுத்தல் என ஆண்டுதோறும் பொதுமக்கள் இப்பள்ளிக்கு கல்விச்சீர் கொடுத்தவண்ணம் உள்ளனர். இது இவ்வூர் மக்கள் கல்வியின் மீது கொண்ட காதலையும், இவ்வூரின் பெருமையையும் பறைசாற்றுகிறது. போதி மரம் குழுவின் செயலாளர் (திரு. மூர்த்தி அவர்கள்): 20 ஆண்டுகளாகத் திருமதி. மரகதம் அவர்களுடன் தொடர்பில் இருக்கும் போதி மரம் குழுவின் செயலாளர் திரு. மூர்த்தி அவர்கள், “நான் பத்து சதவீத ஆலோசனை வழங்கினால் அதனை 100 சதவீதம் செயல்படுத்திக் காட்டும் ஆற்றல் மிகுந்தவர் திருமதி. மரகதம் அவர்கள் ஆவார். செல்லும் இடத்திலெல்லாம் வெற்றியைக் கொண்டு வரும் வீரியம் மிக்கவர் இவர்” என்று வாழ்த்துரை வழங்கினார். பள்ளி ஆசிரியர் (திரு. செல்வக்குமார்): இப்பள்ளியில் 8 ஆண்டுகள் பணியாற்றி வரும் திரு. செல்வக்குமார் அவர்கள் கூறுகையில், “2014ம் ஆண்டு திருமதி. மரகதம் அவர்கள் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்ற போது, எங்களின் பணி வேகமெடுத்தது; ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது உத்திகளையும், புதுப்புது திட்டங்களையும் புகுத்தி மாணவர்களிடையே கல்வி ஆர்வத்தை அதிகப்படுத்துவார்; ஒரு சில நேரங்களில் அவருடைய வேகத்திற்கு எங்களால் ஈடுகொடுக்க முடியாமல் போனதுமுண்டு. மாவட்ட அளவில் சிறப்பானதொரு பள்ளி என்று இப்பள்ளி பெயர் எடுத்திருக்கிறதென்றால், அதற்கு, தலைமையாசிரியரின் அர்ப்பணிப்பும், பள்ளியாசிரியர்களின் விடாமுயற்சியும், செஞ்சேரி மக்களுடைய நன்கொடையும், பள்ளி மீது அவர்களுக்கு இருக்கக் கூடிய பற்றுதலும் தான் காரணம் என்று கூறலாம். ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி ஆய்வகம், அறிவியல் ஆய்வகம், மெய் நிகர் வகுப்பறை ஆகியவற்றை உருவாக்கினோம். ஏறத்தாழ ஒன்றரை வருட கடுமையான உழைப்பின் காரணமாக மெய்நிகர் வகுப்பறை இப்பள்ளிக்கு கிடைத்துள்ளது” என்று கூறுகிறார். முன்னாள் மாணவி (மாரியம்மாள்): இப்பள்ளியின் முன்னாள் மாணவி கூறுகையில், “நான் படித்த போது இவ்வளவு வசதிகள் இல்லை. இப்போது இந்த வசதிகளைப் பார்க்கும் போது, மீண்டும் இப்பள்ளியில் படிக்க தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என ஏங்குகிறேன்; நிச்சயமாக எனது குழந்தைகளை இப்பள்ளியிலேயே படிக்க வைப்பேன்” என்கிறார். பெற்றோர்-ஆசிரியர் கூடுகைத் தலைவர் (திரு. பொன்னுச்சாமி) பெற்றோர் ஆசிரியக் கூடுகைத் தலைவர் திரு. பொன்னுச்சாமி அவர்கள் கூறுகையில், ‘விருப்பத்தின் காரணமாக நாங்கள் வசிக்கக்கூடிய ஊரின் பள்ளியை முன்னேற்ற வேண்டும் என்று நினைத்தோம். பொதுமக்களாகிய நாங்கள் ஆசிரியர்களுக்கு உறுதுணையாக இருந்து, கல்வி அதிகாரிகளுக்கு மனு கொடுக்க செல்லும் போது கூட, உடன் சென்று உதவினோம். இன்று இத்தனை வசதிகளுடன் எங்கள் ஊரில் பள்ளி இருப்பது மனநிறைவைத் தருகிறது’ என்று கூறுகிறார். பள்ளியின் முன்னாள் ஆசிரியர் (திரு. ரஜினி பிராதாப்சிங்): இப்பள்ளியின் முன்னாள் ஆசிரியர் திரு. ரஜினி பிரதாப்சிங் அவர்கள் கூறுகையில், “சிற்றூரிலும் சிற்றூரானது ‘செஞ்சேரி’ ஆகும். அதில் இத்தனை வசதிகள் என்னும் Nபுhது வியப்பைத் தருகின்றன. இதனால் என்ன நன்மையென்றால் இத்தனை வசதிகள் கொண்ட உள்ளீட்டை நாம் கொடுக்கும் போது, நிச்சயமாக அதன் வெளியீட்டுத் தன்மை அதிகமாகவே இருக்கும் என்பதில் எவ்வித மாற்றமுமில்லை” என்று கூறுகிறார். எதிர்கொள்ள இருப்பவை: ‘பள்ளியின் வகுப்பறைகளுக்கு டைல்ஸ் போட வேண்டும். கணினி அறை ஒன்றை உருவாக்க வேண்டும். விளையாட்டு அரங்கில் கல் ஒட்டி, குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்க வேண்டும் என்று இன்னும் செய்ய வேண்டியவை அதிகம் உள்ளன’ என்று கூறுகிறார் திருமதி. மரகதம் அவர்கள்.
தொடரட்டும் இவரது முயற்சிகளும்…! வெற்றிகளும்….!
|
|||||
by Lakshmi G on 01 Apr 2021 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|