உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிப் போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர், அவர்களுடைய உருவின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
உருள் பெருந்தேர்க்கு அச்சு ஆணி அன்னார் உடைத்து - உருளா நின்ற பெரிய தேர்க்கு அச்சின்கண் ஆணிபோல வினைக்கண் திண்ணியாரையுடைத்து உலகம்; உருவு கண்டு எள்ளாமை வேண்டும் - அதனால் அவரை வடிவின் சிறுமை நோக்கி இகழ்தலை யொழிக. (சிறுமை, 'எள்ளாமை வேண்டும்' என்பதனானும், உவமையானும் பெற்றாம், அச்சு: உருள் கோத்த மரம். ஆணி: உருள் கழலாது அதன் கடைக்கண் செருகுமது. அது வடிவாற் சிறிதாயிருந்தே பெரிய பாரத்தைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைத்து, அதுபோல, வடிவாற் சிறியராயிருந்தே பெரிய வினைகளைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைய அமைச்சரும் உளர், அவரை அத்திட்பம் நோக்கி அறிந்துகொள்க என்பதாம். இதனால், அவரை அறியுமாறு கூறப்பட்டது.)
உருள் பெருந்தேர்க்கு அச்சு ஆணி அன்னார் உடைத்து-உருண்டோடுகின்ற பெரிய தேர்க்கு இன்றியமையாத சிறிய அச்சாணிபோல, வினைத்திறம் மிக்க சிற்றுடம்பினரை இவ்வுலகம் கொண்டுள்ளது; உருவு கண்டு எள்ளாமை வேண்டும் - ஆதலால், அத்தகையோரை வடிவின் சிறுமை நோக்கித் தாழ்வாக எண்ண வேண்டா. உருவின் சிறுமை எள்ளாமை வேண்டும் என்பதனாலும் உவமத்தாலும் பெறப்பட்டது. உருளுதல் தேர்ச்சக்கரத்தின் தொழில். சினைவினை முதல்வினையாக நின்றது. பெருந்தேர் ஏழுதட்டுக்களைக் கொண்ட முழுத்தேர். அச்சு - சக்கரங் கோத்த குறுக்கு உத்தரம். அச்சாணி - சக்கரங் கழலாதவாறு அச்சின் கடைசியிற் செருகும் ஆணி. அதனாற் கடையாணி யெனவும்படும். அச்சாணி சிறிதாயிருந்தும் பெரிய கோயில் தேரையும் தாங்குவதும் அதன் இயக்கத்திற்கு இன்றியமையாததுமான சிறப்புடையது. "அச்சாணியில்லாததேர் முச்சாணும் ஓடாது." பெருந்தே ரோட்டத்திற்கு இன்றியமையாத சிறிய அச்சாணிபோல், பெருநாட் டாட்சிக்கும் இன்றியமையாத சிற்றுருவப் பேராற்ற லமைச்சர் உளர். அவரை வடிவு பற்றி இகழாது, அவர் மதிநுட்பமும் வினைத்திட்பமும் நோக்கி ஆட்சித் துணையாக அரசன் அமர்த்திக் கொள்க என்பதாம்
கலைஞர் உரை:
அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது.
சாலமன் பாப்பையா உரை:
அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அப்படிப்பட்ட மன வைராக்கியமுள்ளவர்கள் உருவத்தில் வெகு சிறியவர்களாகவும் அழகில்லாதவர்களாகவும் இருக்காலம். அதனால், அவர்கள்) உருவத்தைக் கண்டு அசட்டை செய்து விடக்கூடாது. பெரிய ரதம் ஓடும்போது அது கவிழ்ந்துவிடாதபடி காக்கின்ற வெகு சிறிய அழகில்லாத கடையாணிகளைப் போல அவர்கள் உலக தர்மங்கள் கவிழ்ந்துவிடாதபடி காக்க வல்லவர்கள்.
Translation
Despise not men of modest bearing; Look not at form, but what men are:
For some there live, high functions sharing, Like linch-pin of the mighty car!.
Explanation
Let none be despised for (their) size; (for) the world has those who resemble the linch-pin of the big rolling car.