பெருமாளே விரும்பி கோயில் கொண்ட தலம் என்னும் சிறப்போடு, வடக்கு நோக்கி பெருமாள் கோயில் கொண்டுள்ள தலம் என்னும் சிறப்போடும் இத்தலம் விளங்குகிறது. இங்கே கோயில் கொண்டிருக்கும் யோக நரசிம்மருக்கும் லட்சுமி நரசிம்மருக்கும் பிரதோஷ காலத்தில் தீபமேற்றி வழிபட்டால், கடன் தொல்லைகள் நீங்கும்; தொழில் விருத்தியும் பொருள் சேர்க்கையும் உண்டாகும்.
கல்விக் கடவுளான ஹயக்ரீவருக்கும் இங்கு சன்னதி உண்டு. மாணவ மாணவிகள் வியாழக் கிழமைகளில் இவரை வலம் வந்து ஏலக்காய் மாலை சாற்றி அர்ச்சனை செய்தால் கல்வியில் சிறக்கலாம். இங்குள்ள ஆஞ்சனேயர் காரிய சித்திக்காக நூதன முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். ஐந்து வெற்றிலை, ஐந்து பாக்கு, ஐந்து பழங்களை வியாழன் அல்லது சனிக்கிழமைகளில் ஆஞ்சனேயருக்கு சமர்ப்பித்து தொடர்ந்து ஐந்து வாரங்களும்; அமாவாசை நாட்களில் தொடர்ந்து ஐந்து மாதங்களும் வழிபடுபவர்களுக்கு எண்ணிய காரியங்கள் கைகூடுகின்றன.
வெண்ணெய், காப்பு, வடைமாலை சாற்றி வேண்டுதலை நிறைவு செய்யலாம். ஞாயிற்றுக் கிழமை காலையில் நீராடி, வெறும் வயிற்றுடன் இங்குள்ள கருட பகவானுக்கு தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், பிள்ளைப் பேறில்லாதவர்களுக்கு பிள்ளைப் பேறு கிட்டும் என்கிறார்கள். |