|
|||||
(பெண்களின்) குடிப்பழக்கம் |
|||||
குறிப்பு: இப்பதிவை வாசிக்கும் இணையதள நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் ஓர் வேண்டுகோள். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் பெண்ணியத்திற்கு எதிரானதல்ல, பெண்ணியத்தை ஆதரிக்கும் அதே நேரத்தில் பெண்ணியம் என்ற பெயரில் புதிதாக முளைத்துவரும் சமூகச் சீர்கேட்டை எதிர்க்கும் ஒரு பொது மனிதனின் கருத்து என்ற நிலைபாட்டினிலிருந்து வாசிக்க பரிந்துரைக்கிறேன். இன்று பொழுதுபோக்கு என்பது வாழ்வின் ஒரு பகுதியாக இல்லாமல், பொழுதுபோக்கே வாழ்க்கையாக மாறிவருகிறது. பொழுதுபோக்கிற்காகத் தொடங்கப்பட்ட பல செயல்கள் இன்று குழப்பத்தையும் சீரழிவையும் ஏற்படுத்தியுள்ளன. சமீபத்தில் இணையத்தில் உலவும்போது தலைநகரான டெல்லியில் பெண்களுக்கான மதுபானக்கடை தொடங்கப்பட்டதை படித்து வியப்பில் ஆழ்ந்தேன். இவ்வளவு நாள் ஆண்களுக்குப் பயந்து (அரசு) மதுக்கடைகளுக்கு செல்லமுடியாத பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்! எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி பயந்துகொண்டே இருப்பது! ஆண்-பெண் சமம் என்பது விவாதங்களில் மட்டும் இருந்தால் போதுமா? இதை நடைமுறைப்படுத்தி நிஜவாழ்வில் சாத்தியமக்கவேண்டாமா என்று கேட்பவர்களுக்கு - இதோ ஒரு உதாரணம், பெண்களின் குடி/மதுப்பழக்கம் – ஆணுக்குப் பெண் நிகரென்று நிரூபிக்க! ஆண்கள் மதுவருந்துவதை ஏற்கும் இச்சமுதாயம் பெண்களின் குடிப்பழக்கத்தை ஏன் இழிவாகச் சித்தரிக்கின்றது? மதுவருந்துதல் தனிமனித உரிமையா அல்லது பொதுப்பிரச்சனையாகப் பார்க்கப்படவேண்டுமா? தனிமனித உரிமை என்றெண்ணினால் பெண்கள் மதுவருந்துவது மட்டும் ஏன் சமூகச் சீர்கேடாகச் சித்தரிக்கப்படுகின்றது? இதில் ஆண்களுக்கொரு நியாயம்? பெண்களுக்கொரு நியாயமா? ஆண்-பெண் சமம் அல்லது பெண்ணியம் என்பது இதுதானா? இப்பிரச்சனையை முழுமையாக அணுகும் முன், முதலில் பெண்ணியம் என்றால் என்ன என்பது பற்றிப் பார்ப்போம். எனது பார்வையில் பெண்ணியம் என்பது பெண்ணை/பெண்களைத் தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள் மற்றும் சமத்துவமின்மை போன்றவற்றிற்கெதிரான செயல்பாடு அல்லது கோட்பாடு. பெண் மதுவருந்துதல் சரியா தவறா என்று விவாதிப்பதற்கு முன், பெண்களிலிடத்தில் குடிப்பழக்கம் உருவாக அல்லது பெண்கள் குடிப்பதற்கானக் காரணங்களைப் பற்றி ஆய்வோம். ஆண்களிடத்தில் த்ரில் மற்றும் பொழுதுபோக்கிற்காகத் தொடங்கிய இப்பழக்கம் இன்று சமுதாயத்தில் புற்றுநோய் போல் பரவியுள்ளது. அதேபோல் மதுவருந்துதலென்பது பணம் படைத்த மற்றும் சமுதாய அந்தஸ்துள்ள பெண்களிடத்தில் மட்டுமல்லாது நகர்ப்புற பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்வோரிடத்திலும் பரவிவருகிறது. இன்று இளம்பெண்களிடத்தில் மதுவருந்துவது குற்றமில்லை என்ற நிலைப்பாடு பரவலாக உள்ளது. கேம்பஸ் பார்ட்டி, அலுவலக பார்டிகளில் மதுவருந்துவது நாகரிகமாகக் கருதப்படுகின்றது. மேற்கத்திய நாடுகளின் தாக்கமும், அவர்களின் பழக்கவழக்கங்களின் மீதுள்ள மோகமும், இன்றைய தவறான சினிமாக்களின் மறைமுகத் தாக்கமும் இளம்பெண்களிடத்தில் மதுப்பழக்கம் உருவாக முக்கியக் காரணமாக உள்ளது. இது குடிப்பழக்கமுள்ள ஆண்களுக்கும் பொருந்தும். 2010ல் 2% இருந்த மதுவருந்தும் பெண்களின் எண்ணிக்கை, 2015ல் 5%ஆக உயர்ந்துள்ளது. இனிவரும் நாட்களில் இது 50% ஆகும் என்பதில் வியப்பில்லை. மதுவில் தொடங்கும் இதுபோன்ற விஷயங்கள் போதைப் பொருட்கள் வரை செல்லலாம். இது தனிமனிதனோடு மட்டும் நிற்காமல் இச்சமூகத்தையே அழிக்கும். இன்றைய நிலையில் மது அருந்தாதவர்கள் குற்றவாளிகளாக பாவிக்கப்படுகிறார்கள். நீ மது அருந்தியதில்லையா? நீயெல்லாம் ஆண்மகனா? போன்ற கேள்விகளை நண்பர்கள் என்னிடத்தில் கேட்டதுண்டு. ஒரு ஆண் தன்னை ஆண்மகன் என்று நிரூபிக்க மதுவருந்தினால் மட்டும் போதுமா? வியப்பாக உள்ளது. நவீன இந்தியாவில் பெண்கள் சுயமுடிவெடுப்பது வரவேற்கத்தக்கது, அதே நேரத்தில் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்தரம் என்பது மதுவருந்தினால் வருமென்பது முற்றிலும் தவறானது. பெண்ணியம் மற்றும் பெண்முன்னேற்றம் என்பது ஆண்களுக்கெதிராக மதுவருந்துவதில் மட்டும்தான் உள்ளதா? பெண்களை சமமாக பாவித்து மரியாதையளிக்கும் ஆண்கள் வெகுகுறைவென்றாலும் எண்ணிக்கையில் இருக்கவே செய்கிறார்கள். அதேபோல் மது அருந்தாத ஆண்களும் இங்கு வாழ்ந்து கொண்டுதான் உள்ளனர். இதில் இன்னும் ஸ்வாரசியமான விஷயம் யாதெனில், பெண்களின் குடிப்பழக்கத்தை தடுக்க பல்வேறு தனியார் கவுன்சிலிங் மையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற ஆலோசனை மையங்களில் ஒரு கவுன்சிலிங்கிற்கு 25000 முதல் 100000 வரை வசூலிக்கப்படுகிறது. இன்னும் கொடுமையான விஷயம் ஆலோசனைக்குச் சென்ற பெண்ணொருத்தி அந்த மையத்திலேயே பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாள். இதுபோன்ற தவறான ஆலோசனை மையங்கள் நாடெங்கிலும் பெருகிவருகின்றன. பெண்ணியம் மற்றும் பெண் பாதுகாப்பைப் பற்றிப் பேசுபவர்கள் இதுபோன்ற பிரச்ச்னைகளுக்கெதிராக குரல் கொடுக்காமலிருப்பது ஆச்சரியமாக உள்ளது. இந்நிலை பிற்காலத்தில் நிகழவிருக்கும் அவலங்களை வரவேற்பதற்குச் சமம். இக்காலத்தில் பெண்கள் தனியே செல்வதே கடினமாக இருக்கும்போது, மதுவருந்திவிட்டு சென்றால் யோசிக்கவே பயமாக இருக்கிறது. பெண்பாதுகாப்பு, பெண்களுக்கெதிரான வன்கொடுமை தடுப்பு போன்றவற்றிற்கு முன்னுரிமையளிக்காமல் இதுபோன்ற சமூக சீர்கேட்டை வரவேற்பது இன்னும் வேதனை அளிக்கிறது. இன்று புருஷன், மகன் எங்கு விழுந்துகிடக்கின்றான் என்று வேதனையில் புலம்பும் பெண்களைப் போல், நாளை பெண்ணைப் பெற்றெடுத்த பெற்றோரும் கணவர்களும் புலம்பும் நிலை வெகுதொலைவில் இல்லை. நாளைய சந்ததிகளுக்கு `மதுவருந்துதல்` இயல்பானது என்ற நிலை வருமுன் இதைத் தடுக்க வேண்டும். மதுவருந்தி தள்ளாடும் இவளல்ல நாம் வேண்டும் புதுமைப் பெண்; ‘”வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள் கலி யழிப்பது பெண்க ளறமடா கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம்”
இதோ இவள்தான் நான் விரும்பும், பாரதி கண்ட புதுமைப் பெண்; |
|||||
by varun on 18 Jul 2016 4 Comments | |||||
கருத்துகள் | ||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|