|
|||||
உலகின் முதல் ஏறுதழுவுதல் அரங்கத்தை மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். |
|||||
உலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் திறப்புவிழா 24/01/2024 மதுரையில் நடைபெற்றது. 62 கோடியே 78 லட்ச ரூபாய் மதிப்பில் மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் கம்பீரத் தோற்றத்துடன் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இதற்குக் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ்ச் சமுதாயத்தின் முக்கிய பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் விழா கொண்டாடப்படும் வேளையில் தமிழ்நாடு முழுவதிலும் காளையை இளைஞர்கள் அடக்கும் வீரத்தைப் போற்றும் வகையில் ஏறுதழுவுதல் விழா நடைபெறும் தமிழர்களின் பெருமைக்குரிய தொழிலாகப் பழங்காலத்திலிருந்து திகழ்ந்து வருவது உழவுத் தொழில்.
ரூ.62 கோடியே 77 லட்சம் நிதி
“சுழன்றும் ஏர்ப்பினது உலகம்” என்றார் வள்ளுவர். அத்தகைய உழவுத் தொழிலுக்கு முதன்முதலில் தேவைப்பட்டது “காளை”. அந்நாளில் காடுகளில் திரிந்த காளைகளைப் பிடித்து அடக்கிப் பழக்கி உழவுத் தொழிலில் ஈடுபடுத்தி வந்தனர் தமிழ் மக்கள்.
அதன் தொடர்ச்சியாகத்தான், மாடு பிடிக்கும் விழா, “ஏறு தழுவுதல்”, “எருது விடுதல்” “மஞ்சு விரட்டு”, ஜல்லிக்கட்டு” எனப் பல பெயர்களில் தமிழ்ச் சமுதாயத்தில் வழிவழியாக நடைமுறையிலிருந்து வந்துள்ளது. மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்படுவதற்காக 3.2.2023 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ரூ.62 கோடியே 77 இலட்சத்து 62 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கு 18.3.2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மூலம் வாடிவாசல், ஒரே நேரத்தில் 5,000 பார்வையாளர்கள் அமர்ந்து காணும் வசதிகளுடன் மூன்றடுக்குப் பார்வையாளர் மாடம், ஏறுதழுவுதல் நடைபெறும் இடம், மிக முக்கிய விருந்தினர்கள் அமரும் இடம், ஏறுதழுவுதலில் பங்குபெறும் காளைகளின் எழுச்சி வடிவங்களைப் பிரதிபலிக்கும் அருங்காட்சியகம், ஒலி-ஒளி காட்சிக்கூடம், கால்நடை மருந்தகம், நூலகம், மாடுபிடி வீரர்களுக்கான தங்கும் அறைகள், புல்வெளிகளுடன் கூடிய தோட்டம் என அனைத்தையும் கொண்டுள்ள 83,462 சதுரடி பரப்புடைய மிகப் பிரம்மாண்டமான கட்டடமாக ஏறுதழுவுதல் அரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அரங்கத்தைத் திறந்து வைக்க வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காவல்துறை சார்பில் மரியாதை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அரங்கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இதன் பின்னர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
ஏறுதழுவுதல் அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, உரையாற்றிய அவர், "ஜல்லிக்கட்டு போட்டிகளின் மீது கருணாநிதிக்கு மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தது. கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்தத் தருணத்தில் ஏறுதழுவுதல் அரங்கம் திறக்கப்பட்டுள்ளது.ஏறுதழுவுதல் அரங்கத்தைத் திறந்துவைத்தது எனக்குக் கிடைத்த பெருமை. ஏறுதழுவுதல் அரங்கத்தைக் கட்டி வரலாற்றில் இடம்பெற்றுவிட்டேன். போட்டி என வந்துவிட்டால் தோல்வியைத் தூள் தூளாக்கும் மதுரை என்பதை வாடிவாசல் நிரூபித்துள்ளது. ஜல்லிக்கட்டு நமது வரலாறு, பண்பாட்டோடு தொடர்புடையது. சென்னையில் விரைவில் கலைஞர் நினைவகம் திறக்கப்பட உள்ளது" இவ்வாறு கூறினார். |
|||||
by Kumar on 25 Jan 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|