சென்னை கோட்டையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சாந்தி ராஜமாணிக்கம் நேற்று திடீரென சந்தித்து பேசினார். மேலும் அவர் தனது தொகுதி மக்களின் பிரச்சினைகள் தொடர்பான மனு ஒன்றை முதல்வரிடம் வழங்கினார்.
கடந்த அக்டோபர் மாதம் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சுந்தர்ராஜன், நடிகர் அருண்பாண்டியன், தமிழழகன், மைக்கேல் ராயப்பன் ஆகிய நான்கு பேறும் அடுத்தடுத்த நாட்களில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து தொகுதி மக்களின் பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதோடு மட்டுமல்லாமல் அரசின் திட்டங்களையும், முதல்–அமைச்சரின் செயல்பாட்டையும் வெகுவாக பாராட்டினார்கள். இந்த சந்திப்பு தே.மு.தி.க. கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த நான்கு எம்.எல்.ஏ.க்களுக்கும் சட்ட பேரவையில் தனி இடம் ஒதுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் செங்கம் தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. டி.சுரேஷ்குமார் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்துப்பேசினார். இந்த நிலையில், தே.மு.தி.க. பெண் எம்.எல்.ஏ. சாந்தி ராஜமாணிக்கம் நேற்று மத்தியம் தலைமை செயலகத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை திடீரென சந்தித்துப்பேசினார். சந்திப்பு பற்றி தே.மு.தி.க. பெண் எம்.எல்.ஏ கூறும் போது, தொகுதி மக்களின் பிரச்சனைகள் தொடர்பான மனு ஒன்றை முதல்வரிடம் வழங்கி உள்ளதாகவும், முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக மக்கள் பணியாற்றி இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தமைக்காக தனது வாழ்த்துகளை தெரிவித்தாக அவர் கூறினார்.
|