|
||||||||
நலம் காக்கும் சித்த மருத்துவம் : சிறுநீரை அடக்கினால் வரும் துன்பங்கள் – 41 |
||||||||
![]() முக்கியமான கூட்டத்தில் இருக்கும் போதோ, கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும் போதோ, முக்கியமான மின்னஞ்சலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் போதோ, மனதிற்கு பிடித்தமான நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கும் போதோ சிறுநீர் கழிப்பது இயலாது. காட்டாக சூழ்நிலை சாதகமாக இல்லாமலிருப்பது, பொது கழிப்பிடங்களைப் பயன்படுத்தத் தயங்குவது, கழிப்பிடத்திற்காக நீண்ட தூரம் செல்ல வேண்டியிருப்பது, சுகாதாரமற்ற கழிப்பிடமாக இருப்பது போன்ற வற்றைக் கூறலாம்.
சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியவுடன் கழித்து விடல் வேண்டும். முக்கிய வேலை இருப்பின் சிறிது தள்ளிப் போடலாம். வலி ஏற்படுமளவிற்கு ஒரு போதும் தாமதிக்கக் கூடாது.
சிறுநீரைத் தாங்கிக் கொள்ளும் நேர அளவு ஆளுக்கு ஆள் மாறுபடும்.
பொதுவாக 3 மணி யிலிருந்து 6 மணி நேரத்திற்குள் தாங்கும் அளவு நீடிக்கும். அதாவது ஒரு நாளில் 6 முதல் 10 முறை சிறுநீர் கழிப்பது இயல்பு.
சிறுநீர் உற்பத்தி அளவு, சுற்றுப்புற வெப்ப நிலை, வியர்வை அளவு, வேலையின் அளவு, உட்கொள்ளும் நீரின் அளவு, சிறுநீர்ப்பையின் கொள்ளளவு, சிறுநீர்ப்பையின் தாங்கும் திறன் (Bladder capacity, Sensitivity) போன்றவற்றை பொருத்து சிறுநீர் கழிக்கும் நேர இடைவெளி மாறுபடும்.
சிறுநீரினை நீண்ட நேரம் தடுத்து வைப்பதால் என்னென்ன துன்பங்களுண்டாகும் என கீழ்க்கண்ட சித்தர் பாடல் தெரிவிக்கின்றது.
“நீரினைத் தடுத்தல் செய்யில்
நீர்க்கட்டுத் துவாரம் புண்ணாம்
பாறிடுஞ் சந்து சந்தில்
பண்புறு நோ வாதாகும்
நேரிலங் கயருங் காம்யம்
நிச்சய நோதல் செய்யும்
பாரினில பான வாயு
பண்புறச் சேரு மன்றே.”
சிறுநீரைத் தடுப்பதால் நீர்க்கட்டு (நாளடைவில் நீர் எளிதில் கழியாத நிலை – Urinary retention) ஏற்படும். அது சாதாரணமாக புண், கட்டிகள், சீழ் கோர்த்த வீக்கம் போன்ற எதுவானாலும் ஏற்படலாம். உடலில் உள்ள மூட்டுக்களில் (Joints) வலி உண்டாகும். இனப்பெருக்க உறுப்புகளில் வலியும் வீக்கமும் ஏற்படும் என அந்தப் பாடல் தெரிவிக்கின்றது.
சிறுநீர் கழிக்கும் எண்ணம் ஏற்பட்டதும் கழிக்காததால் ஏற்படும் துன்பங்கள் :
1. இயல்பான உடல் இயங்கியலில் உருவாகும் நச்சுக்கள் சிறுநீரகத்தால் (Kidney) உறிஞ்சப்பட்டு சிறுநீர் வழியே வெளியேறும். சிறுநீரினை அடக்குவதால் அதில் உள்ள நச்சுக்கள் சிறுநீர்ப்பையைத் தாக்கும் பின்பு சிறுநீர் பாதையையும் சிறுநீரகத்தையும் தாக்கும்.
2. சிறுநீர் நீண்ட நேரம் சிருநீர்ப்பையிலேயே (Bladder) தங்கியிருப்பதால் நுண்கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகமுண்டு. சிறுநீர்ப்பாதை வழியே உட் செல்லும் ஒரு நுண் கிருமி (பாக்டீரியா) சிறிது நேரத்தில் பல்கிப் பெருகி பல இலக்கங்களாக (இலட்சங்கள்) மாறிவிடும். அதற்கான சூழல்(Breeding ground) சிறுநீர்ப்பையில் உள்ளது.இவ்வாறு பல மடங்கு பெருகிய நுண் கிருமிகள் அழற்சியினை (Inflammation) ஏற்படுத்தும். சிறுநீர்ப்பாதை, சிறுநீர்ப்பையில் ஏற்பட்ட அழற்சி பின்பு படிப்படியாக மேலேறி சிறுநீரகத்தையும் பாதிப்பிற்க்குள்ளாக்கும்.
இதனால் சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் ஏற்படல், குளிருடன் காய்ச்சல் அடிவயிற்றில் வலி ஏற்படும்.
3. சிறுநீர் கழிக்காமல் நீண்டநேரமிருப்பதால் சிறுநீர்ப்பை விரிவடைந்து பலமிழக்கும். இதனால் சிறுநீர்ப்பையின் செயல்பாடு மாறுபடும். உட்புறம் தசைத் தொய்வு ஏற்படும் (Diverticulum).
4. சிறிது அளவு சிறுநீரினைக் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். (இந்த நிலை ஏற்பட்டால் அதனை ஒரு எளிய பயிற்சியின் மூலம் சரிசெய்ய வேண்டும். சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும் போது சிறிது நிறுத்தி நிறுத்தி கழிக்க வேண்டும். அப்போது ஆசன வாய்க்கும் (Anus) சிறுநீர் கழிக்கும் பகுதிக்கும் (Urethral orifice) இடையே உள்ள தசை சுருங்கி விரியும். இந்த பயிற்சியைத் தொடர்ச்சியாகச் செய்தால் அந்தத் தசை வலுப்படும். பின்பு சாதாரணமாக அமர்ந்திருக்கும் போதே அந்தத் தசையை சுருக்கி விரிக்கும் பயிற்சியினைச் செய்ய முடியும். இதற்கு Kegel exercise அல்லது Pubo coccegeal muscle exercise என்று பெயர். இதனால் சிறுநீர்ப்பைக் கட்டுப்பாட்டிற்குள் வரும். இந்த பயிற்சியில் பல நன்மைகள் நமக்குக் கிடைக்கும்.
சிறுநீர்ப்பை மாறுபாட்டினால் (Structural and Functional) சிறுநீர் சிறிது சேர்ந்தாலும் சிறுநீர் கழிக்கும் போதும் அடி வயிற்றில் வலி ஏற்படும் (Painful bladder syndrome) இதன் தொடர்ச்சியாக சிறுநீரினைக் கட்டுப்படுத்தும் திறனும் குறையும்.
5. சிறுநீர்க் கல் உருவாக அதிக வாய்ப்புகள் எற்படும்.
6. தொடர்ச்சியாக சிறுநீரினை அடக்கி வைத்திருப்பதால் மனக்குவிப்புத் திறன் (Concentration power) குறையும்.
7. சிறுநீர்ப்பையில் சிறுநீர் சேகரமானாலும் சிறுநீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்படலாம். (Urinary retention – difficult to urinate)
சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டவுடன் அதிக நேரம் தாமதிக்காமல் கழித்து விடுவதே பல நோய்கள் வருவதைத் தடுத்துவிடும்.
நலப்பயணம் தொடரும்..............................
|
||||||||
by Swathi on 23 Jun 2015 0 Comments | ||||||||
Tags: சிறுநீரை அடக்குவதால் சிறுநீரை அடக்கினால் சிறுநீரை அடக்கலாமா சிறுநீர் மூத்திரம் Bladder control problems Urinary Incontinence | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|