அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததால், இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக, அதிரடியாக, சில சிக்கன நடவடிக்கைகளை, மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக, நிதி அமைச்சகம், மற்ற மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை : அரசு நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, அரசின் செயல்பாடுகளுக்கு பாதகம் இல்லாத, சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. கையில் உள்ள நிதி ஆதாரத்தை வைத்து, செலவினங்களை ஒழுங்குபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, திட்டமில்லா செலவினங்களில், 10 சதவீதம் குறைக்கப்படும். மத்திய அரசின் அனைத்து துறைகளிலும், புதிய நியமனங்களுக்கு தடை விதிக்கப்படுவதோடு, அரசுத் துறைகளுக்கு, புதிய வாகனங்கள் வாங்குவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. அரசு சம்பந்தமான கருத்தரங்குகளை ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் நடத்தக்கூடாது. மேலும் உயர் அதிகாரிகளைத் தவிர, மற்ற அதிகாரிகள், உள்நாட்டு பயணங்கள் மேற்கொள்ளும் போது விமானங்களில், சாதாரண வகுப்புகளில் தான், பயணிக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
|