புதுடில்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பா.ஜ.க வின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் இன்று உரையாற்றிய நரேந்திர மோடி காங்கிரஸ் அரசைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
“பிரணாப் முகர்ஜியே பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர். ஆனால், பிரதமர் பதவியில் பிரணாப் முகர்ஜியை அமரவைத்தால், தங்களது குடும்ப உறுப்பினர்களின் பதவி பறிபோய்விடும் என்று எண்ணியே காங்கிரசின் தலைமையானது மன்மோகன் சிங்கைப் பிரதமர் பதவியில் அமர வைத்துள்ளது. மக்களிடம் இருந்து மத்திய அரசு விலகியே இருக்கிறது. ஒரு குடும்பத்துக்காக தேசத்தையே பலி கொடுக்கிறது காங்கிரஸ் கட்சி. சோனியாவின் குடும்பத்துக்காக மட்டும்தான் காங்கிரஸ் கட்சி இப்போது வெகு பாடுபட்டு வருகிறது. இந்தியாவின் நன்மதிப்பையே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பாழாக்கி விட்டது. கடந்த 30 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி நாட்டிற்காக எதையும் செய்யவில்லை. நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமும், நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணமும் காங்கிரஸ் கட்சியின் ரத்தத்திலே சிறிதளவு கூட கிடையாது. நாட்டில் இருந்து காங்கிரஸைத் தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்” என்று தனது கடுமையான விமர்சனத்தைக் கூறியுள்ளார்.
தேர்தல் களத்தில் பா.ஜ.க வினுடைய தேர்தல் வியூகம் எது என்பதை மோடியின் இந்தக் கடுமையான விமர்சனம் கோடிட்டுக் காட்டியுள்ளது. ராமர்கோயில், ராமர்பாலம், வெளிநாட்டுசோனியா, 2 ஜி ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் போன்ற எதையும் குறிப்பிடாமலேயே பிரணாப்பைத் தனிமைப்படுத்திப் புகழ்ந்திருப்பதும் காங்கிரசுக் கட்சியைக் கடுமையாகச் சாடியிருப்பதும் பா.ஜ.க உருவாக்க விரும்பும் அலை எது என்பதைக் காட்டியுள்ளது. இதே போன்றுதான் அதன் பிரச்சாரம் தொடருமா? மேலும் இந்தப் பிரச்சாரம் பா.ஜ.கவிற்கு போதுமான வெற்றியைப் பறித்துத் தருமா? என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
|