தாய்ப்பாசத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பதை எடுத்துக்காட்டுவது போன்ற சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகாவில் வனப்பகுதியை ஒட்டிய கிராமத்திற்குள் யானைகள் புகுந்தன. அதில் ஒரு கர்ப்பிணி யானை, குட்டியை ஈன்றது. துரதிர்ஷ்டவசமாக பிறந்த சில நிமிடங்களிலேயே குட்டி பரிதாபமாக இறந்தது. ஆனால் குட்டி இறந்தது தாய் யானைக்கு தெரியவில்லை.
இதனால் குட்டியை எழுப்பி பாலூட்டுவதற்காக காலால் உதைத்து அங்கும் இங்கும் உருட்டியது. குட்டியிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. இதனால் குட்டியின் அருகிலேயே உணவு சாப்பிடாமல் சுமார் 48 மணி நேரம் வரை தாய் யானை கண்ணீருடன் நின்றுகொண்டிருந்தது.
இந்த காட்சி காண்பவர்களின் கண்களை குளமாக்கும் வகையில் இருந்தது. கடைசியில் அங்கிருந்த மற்ற யானைகளுடன் சேர்ந்து கண்களில் கண்ணீர் வடித்தவாறே அந்த யானை வனப்பகுதியை நோக்கி கனத்த இதயத்துடன் சென்றது.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் குட்டி யானையை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.
|