கிரிமினல் எம்.பி, எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் முட்டாள் தனமானது எனவும், அதை கிழித்து குப்பையில் எறியுங்கள் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், உச்ச நீதிமன்றம், குற்ற வழக்கில் தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏ.க்களின் பதவியை உடனடியாக பறிக்கும் விதமாக ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியது. ஆனால் அவ்வாறு தகுதி நீக்கம் செய்வதை தடுக்க வகை செய்யும் அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்து அவசரமாக நிறைவேற்றியது. இந்த அவசர சட்டத்திற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்த நிலையில், இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, இந்த அவசர சட்டம் முட்டாள்தனமானது என்றும், அதனை கிழித்து குப்பையில் வீச வேண்டும் என்றும் காட்டமாக கூறினார். " தனிப்பட்ட முறையில் நான் என்ன கருதுகிறேன் என்றால், அரசு இந்த அவசர சட்டத்தை கொண்டுவந்தது தவறானது. இது அரசியல் ரீதியான முடிவு, ஒவ்வொரு அரசியல் கட்சியும் செய்யக்கூடியதுதான். இந்த மாதிரியான சமரசங்களை தடுத்து நிறுத்த இதுவே தருணம் என்பதை அரசியல் கட்சிகள் மனதில்கொண்டு, அதனை தடுக்க வேண்டும். ஊழலை உண்மையிலேயே நாம் தடுக்க விரும்பினால் இத்தகைய சட்டங்களை நாம் நிறைவேற்றக்கூடாது என ராகுல் காந்தி மேலும் கூறினார்.
|