|
|||||
சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது |
|||||
முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இந்தத் தகவலைப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.
அளப்பரிய சேவைக்காக ‘பாரத ரத்னா’ பெறும் தலைவர்கள் பற்றிய விவரம்:
விவசாயிகள் தலைவர் சரண்சிங்
கடந்த 1902-ம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தின் மீரட் மாவட்டம், நூர்பூர் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் சவுத்ரி சரண்சிங் பிறந்தார். சட்டம் பயின்ற அவர் காந்தியடிகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று பலமுறை சிறை சென்றார். சுதந்திரப் போராட்டக் காலம் முதல் காங்கிரஸில் இருந்த சரண் சிங் கடந்த 1967-ம் ஆண்டு பாரதியக் கிரந்தி தளம் என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் 1977 முதல் 1979 வரை ஜனதா தளத்திலும், கடந்த 1979 முதல் 1980 வரை மதச்சார்பற்ற ஜனதா தளத்திலும் இருந்தார். நாட்டின் 5-வது பிரதமராகப் பதவி வகித்தார். உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இருமுறை பதவி வகித்தார். மத்திய உள்துறை, நிதித்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் சரண் சிங் பணியாற்றி உள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தினார். இதன்காரணமாக இன்றுவரை உத்தரப் பிரதேச விவசாயிகளின் தன்னிகரற்ற தலைவராக அவர் போற்றப்படுகிறார்.
பொருளாதாரத்தை நிமிர்த்தியவர் நரசிம்ம ராவ்
கடந்த 1921-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி ஒருங்கிணைந்த ஆந்திராவின் வாரங்கல் மாவட்டம், லக்னேபள்ளி கிராமத்தில் நரசிம்ம ராவ் பிறந்தார். சட்டம் பயின்ற அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். கடந்த 1971-ம் ஆண்டில் ஆந்திர முதல்வராகப் பதவியேற்றார். மத்திய உள்துறை, பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை அமைச்சராகத் திறம்படப் பணியாற்றினார். கடந்த 1991 முதல் 1996 வரை நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தார். அப்போது உலக பொருளாதாரத்துக்காக இந்தியாவின் வாயில்களைத் திறந்துவிட்டார். இதன்மூலம் கூன் விழுந்த இந்தியப் பொருளாதாரத்தைத் தலைநிமிர்த்தினார். இஸ்ரேல் நாட்டுடன் உறவைத் தொடங்கினார். கிழக்கு ஆசிய வெளியுறவுக் கொள்கைக்கு முன்னுரிமை அளித்தார். இந்தியாவின் அணு சக்தி திட்டங்களைப் புதுப்பித்தார். பஞ்சாப், காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒடுக்கினார். நரசிம்ம ராவுக்கு 17 மொழிகள் தெரியும். நேரு குடும்பத்தைச் சேராத காங்கிரஸ் பிரதமராக 5 ஆண்டுகள் முழுமையாகப் பதவி வகித்தவர் ஆவார்.
பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதன்
கடந்த 1925-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் எம்.எஸ். சுவாமிநாதன் பிறந்தார். அவர் மருத்துவம் படிக்க வேண்டும் என்று பெற்றோர் விரும்பினர். இரண்டாம் உலகப்போரின்போது நாடு முழுவதும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டபோது மனம் வருந்திய சுவாமிநாதன், இந்தியாவுக்குப் போதுமான உணவுத் தானியம் கிடைப்பதை உறுதி செய்ய முடிவு செய்தார். இதற்காக அவர் தனது வாழ்க்கையை வேளாண் ஆராய்ச்சிக்காக அர்ப்பணித்தார். மெட்ராஸ் வேளாண்மை கல்லூரியில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றார். டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்று ஐபிஎஸ் அதிகாரியானார்.
பின்னர் ஐபிஎஸ் பணியைத் துறந்து வேளாண் ஆராய்ச்சி படிப்புக்காக நெதர்லாந்து சென்றார். கடந்த 1954-ல் இந்தியாவுக்குத் திரும்பி இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டார். இந்தியாவில் முதல்முறையாக வீரிய ரக கோதுமையை உருவாக்கினார். இதன்மூலம் இந்தியாவின் கோதுமை உற்பத்தி பன்மடங்கு அதிகரித்தது. இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை என்று சுவாமிநாதன் அழைக்கப்படுகிறார். பத்ம பூஷண், பத்ம விபூஷண், உலக உணவு பரிசு, ரமோன் மகசேசே உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார். |
|||||
by Kumar on 09 Feb 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|