கார்களில் சிவப்பு விளக்குகளை பயன்படுத்துவதை முறைப்படுத்த வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, வி.கோபாலகவுடா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது,கார்களில் சிவப்பு எச்சரிக்கை விளக்கையும், ஒலிப்பான்களையும் பலரும் தவறாக பயன்படுத்துகிறார்கள். ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது தனக்கு இத்தகைய அந்தஸ்து தேவை இல்லை என்று கூறினார். கார்களில் சிவப்பு விளக்கு, ஒலிப்பான் அந்தஸ்தை மந்திரிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு ஏன் வழங்க வேண்டும்? சிவப்பு விளக்கு கார்களுடனும், ஒலிப்பான்களுடனும் பலர் செல்வது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தை நினைவூட்டுகிறது.
சிவப்பு எச்சரிக்கை விளக்கு, ஒலிப்பான்களுடன் கூடிய கார் அந்தஸ்து வழங்குவது தொடர்பான மத்திய, மாநில அரசுகள் வெளியிட்ட அறிவிக்கை சட்ட விரோதமானது என்பதால் அவற்றை ரத்து செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் கூட, அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை? போதிய காலஅவகாசம் அளிக்கப்பட்டும் இன்னும் அதை நிறைவேற்றாதது கோர்ட்டின் உத்தரவை அவமதிப்பதாக உள்ளது. மக்கள்தான் நமக்கு முதலாளிகள். அவர்கள் வரி கட்டுகிறார்கள். தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்து எடுக்கிறார்கள். அப்படி இருக்கும் போது அவர்கள் ஏன் சிவப்பு விளக்கு மற்றும் ஒலிப்பான்களுடன் கூடிய காரை பயன்படுத்தக்கூடாது?
பாதுகாப்பு என்பது அந்தஸ்துக்கான அடையாளம் போல் ஆகிவிட்டது. உயர் அந்தஸ்து பெற்றவர்கள் என்பதற்கு என்ன அளவு கோல் வைத்து இருக்கிறீர்கள்? முக்கிய பிரமுகர்களின் கார்களில் உள்ள ஒலிப்பான்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். கார்களில் சிவப்பு விளக்குகளை தவறாக பயன்படுத்துவதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள். விசாரணையின் போது மத்திய, மாநில அரசுகளின் சார்பில் ஆஜரான வக்கீல்கள், இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண மேலும் 4 வார காலம் அவகாசம் கேட்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக கோர்ட்டு உரிய நேரத்தில் உத்தரவு பிறப்பிக்கும் என்றனர்.
|