|
|||||
இலங்கையிடமிருந்து கச்சத்தீவை பெற முடியாது - மத்திய அரசு ! |
|||||
இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீண்டும் பெற முடியாது என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா- இலங்கை இடையே கடந்த 1974-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது என அறிவிக்க கோரி தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதன் வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். சௌகான், எஸ்.ஏ. பாப்டே அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது,
முன்னொரு காலத்தில் கச்சத்தீவு எந்த ஒரு நாட்டுக்கும் சொந்தமில்லாமல் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கச்சத்தீவுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்னை இந்தியா-இலங்கை இடையே நீடித்து வந்தது. அதைத் தொடர்ந்து, இந்திய-இலங்கை கடல் பகுதியில் சர்வதேச எல்லைக் கோட்டை நிர்ணயித்தபோது கச்சத்தீவு இலங்கை வரம்புக்குள் சென்றுவிட்டது. அதன்பிறகு, 1974-ஆம் ஆண்டில் இந்தியா- இலங்கை இடையே கச்சத்தீவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 1976-ஆம் ஆண்டில் இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலும், கச்சத்தீவு இலங்கையின் பகுதியில் இருப்பதை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.
எனவே, தமிழக அரசு தாக்கல் செய்த மனு ஏற்படையது அல்ல. அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் கச்சத்தீவில் உள்ள ஆலயத்துக்கு சுற்றுலா சென்று வருவதற்கு மட்டும்தான் இந்தியர்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும். அந்தத் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை தமிழகத்துக்குக் கிடையாது என பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. |
|||||
by Swathi on 30 Aug 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|