ஞானோபதேசம் பெற விரும்பிய பிரம்மன், எமலிங்கத்தை நிறுவி ஈசனை வழிபட்டு உபதேசம் பெற்ற இடமே திருப்பாடலவனம் எனப்படும் கொரநாட்டுக் கருப்பூர். கண்வர் போன்ற மகரிஷிகளும், குபேரன் மற்றும் இந்திரன் ஆகிய தேவர்களும் வழிபட்ட தலம். எப்போதும் பெட்டகத்தினுள்ளேயே இருக்கிறாள் காளி. இடுப்புக்கு மேலுள்ள உருவத்தை மட்டுமே காண முடியும். எட்டுக் கரங்களுடன் சிறிய கோரைப் பற்களும், அனல் தெறிக்கும் விழிகளுடனும் அன்னை காட்சி தருகிறாள்.
எனினும், கருணையே வடிவானவள். வலக்கரங்களில் சூலம், உடுக்கை, கிளி மற்றும் அருவாளுடனும், இடக்கரங்களில் பாசம், மணி, கபாலம் மற்றும் கேடயமும் தாங்கி நிற்கிறாள். நெற்றியில் புனுகு சவ்வாதும் விபூதியும் சாற்றப்படுகிறது. மேலும் அம்மனுக்குச் சேர்ப்பிக்கப்படும் பூ, பழம், குங்குமம், எலுமிச்சம்பழம் ஆகியன பிறருக்கு வழங்கப்படுவதில்லை. சர்க்கரைப் பொங்கல், சுத்தான்னம் போன்றவை பள்ளயமாக நிவேதிக்கப்பட்ட பின்னரே பெட்டி திறக்கப்படுகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை உத்தராயண காலத்தில் மட்டும் அன்னை மாகாளி வீதியுலா வருகிறாள். பெட்டியில் இருந்தபடியே பல்லக்கில் ஏறி திருமஞ்சன வீதியில் புறப்பாடு. இறைவன் சுந்தரேஸ்வரர், இறைவி அன்னை அபிராமி. கிழக்கு நோக்கிய ஐந்து நிலை கொண்ட அழகிய ராஜகோபுரம். அன்னை அபிராமி தெற்கு நோக்கிய சன்னதியில், வலது மேற்கரத்தில் அட்சமாலையும், இடது மேற்கரத்தில் தாமரை மலரும் ஏந்தி அபய வரத முத்திரையுடன் கருணை பொங்கக் காட்சி தருகிறாள். |