இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பெரிய கோயில், கிழக்கு நோக்கியது. வாயிலில் வல்லபை கணபதி காட்சியளிக்கிறர். ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடைது. வெளிப் பிராகாரம் பெரியது. இரண்டாங் கோபுர வாயிலில் விநாயகர் முருகன் சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. நடராச சபை உள்ளது.
மூல வாயிலின் முன்னால் ஒருபுறம் சோமாஸ்கந்தரும், முருபுறம் சத்தி, முத்தம் தரும் தல ஐதீக மூர்த்தியும் உள்ளனர். உட்பிராகாரத்தில் தல விநாயகரும் சோமாஸ்கந்தரும் ஆறுமுகம், கஜலட்சுமி சந்நிதிகளும் உள்ளன. இவ்வாலயத்தில் உள்ள சிவனை பார்வதிதேவி பூஜை செய்து தழுவி முத்தமிட்ட காரணத்தினால் இத்தலம் “திருச்சத்திமுத்தம்’ என பெயர் பெற்றது.
மூலஸ்தானத்திற்கு அருகில் அம்மன் சிவலிங்கத்தை கட்டி தழுவி முத்தமிட்ட திருக்கோலத்தை இன்றும் தரிசிக்கலாம். காஞ்சியில் அம்பிகை இறைவனைத் தழுவியிருப்பது போலவே இத்தலத்திலும் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. திருநாவுக்கரசருக்கு இறைவன் தன் திருவடி தரிசனம் தந்த தலம். இத்தலத்தில் அமாவாசை, பவுர்ணமி வழிபாடு மிகவும் சிறப்பாகும். |