கிர் வனப்பகுதியில் கடந்த 20 நாட்களுக்குள் 23 சிங்கங்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய சிங்கங்களின் கடைசிப் புகலிடம் எனப்படும் கிர் சரணாலயம் குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் உள்ளது. இது சிங்கங்களின் சரணாலயமாக உள்ளது. 1412 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தக் காடுகளில் சிங்கங்கள், வங்கப் புலிகள், சிறுத்தைகள் உள்ளன.
2015-ம் ஆண்டு மே மாதம் மேற்கொண்ட் 14வது ஆசியச் சிங்கங்களின் கணக்கெடுப்பின்படி, கிர் தேசியப் பூங்காவில் 523 சிங்கங்கள் இருப்பதாகக் கணக்கு எடுக்கப்பட்டது. அவைகளில் ஆண் சிங்கங்கள் 109, பெண் சிங்கங்கள் 201 மற்றும் இளஞ்சிங்கங்கள் 213 ஆகும்.
இங்குள்ள சிங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மற்ற மாநில வனப்பகுதியிலும் சிங்கத்தை வளர்க்க திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் அதற்கு குஜராத் அரசு மறுப்புத் தெரிவித்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் 14 சிங்கங்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டும், நோய்வாய்ப்பட்டும் உயிரிழந்தது. இதையடுத்து, நோய்வாய்ப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 9 சிங்கங்களும் இறந்ததால், உயிரிழந்த சிங்கங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயிரிழப்பு வன உயிரின ஆர்வலர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
|