இளம் தலைமுறையினர் தாய்மொழியை விட்டு விலகிச் செல்வது வேதனை அளிக்கிறது என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.
அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் தமிழ்க்கூடல்-2024 என்ற மாநாடு பல்கலை. வளாகத்தில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டைத் தொடங்கிவைத்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார், :
"இளம் தலைமுறையினர் தாய்மொழியை விட்டு விலகிச் செல்கின்றனர். இது பெரும் கவலையைத் தருகிறது. தமிழ்ச் சங்கத்தினர் மற்றும் சான்றோர் நினைத்தால் இதை மாற்ற முடியும். தாய்மொழி என வரும்போது பலரும் அதைப் பொது சொத்து எனக் கருதுகின்றனர்.
தாய்மொழிக்காகப் போராடுபவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது. தமிழும், தமிழரும் பெருமிதம் கொள்ளும் ஆட்சி, தமிழகத்தில் நடைபெற்று வருகிறது" என்றார் அவர்.
பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "வருங்காலங்களில் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான மாதிரிப் படங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரி, விரைவில் பணிகள் தொடங்கப்படும்" என்றார்
|