திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, இலவசமாக லட்டு பிரசாதம் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் பாபிராஜூ தெரிவித்துள்ளதாவது, தற்போது திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, 50, 300 ரூபாய் மற்றும் ஆர்ஜித சேவை டிக்கெட்கள் வாங்கி வருவோருக்கு, திருப்பதி தேவஸ்தானம் சார்பாக இரண்டு லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. பாதயாத்திரை மற்றும் இலவச தரிசன பக்தர்களுக்கு, 20 ரூபாய் விலையில், லட்டு டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த டோக்கனுக்கு ஒரு லட்டு கிடைக்கும். ஏழுமலையானை தரிசிக்க, தினமும் 70 ஆயிரம் பேர் வருகின்றனர். அவர்களில், 40 ஆயிரம் பேர், பாதயாத்திரை மற்றும் தர்ம தரிசனத்திற்கு வருகின்றனர். இப்படி வரும், ஏழை பக்தர்களுக்கு, இரண்டு லட்டு இலவசமாக வழங்கலாம் என பலதரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது. ஒருவருக்கு, இரண்டு லட்டுகள் இலவசமாக வழங்கினால், ஒரு நாளைக்கு, 8 லட்சம் ரூபாய் செலவாகும். இதனால், தேவஸ்தானத்திற்கு எந்த இழப்பும் வராது. எனவே, இந்த வாரம் நடைபெறவுள்ள, அறங்காவலர் குழுக் கூட்டத்தில், அனுமதி பெற்று, லட்டுப் பிரசாதம் இலவசமாக வழங்க நடவடிக்கை மேட்கொள்ளப்படும். இரண்டு லட்டுகளுக்கு அனுமதி கிடைக்காவிடில், ஒரு லட்டாவது இலவசமாக வழங்க அனுமதி பெறப்படும். இவ்வாறு, பாபிராஜூ தெரிவித்துள்ளார்.
|