பாண்டுரங்கன் சன்னதி மண்டபத்தின் கீழ் தனி அறை உள்ளது. இதில் பக்தர்களால் எழுதப்பட்ட நூறு கோடி விட்டல் நாமாவளி புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளது. இந்த அறையை சுற்றி வந்து வழிபட வசதி செய்யப்பட்டுள்ளது.இக்கோயில் சூரிய நமஸ்காரத்தில் உள்ள 132 பஞ்ஜாதியை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது 40 அடி உயரத்திற்கு தளமும், அதன் மீது 92 அடி உயரத்திற்கு கோபுரமும் வட மாநில கட்டட வேலைப்பாடுடன் கட்டப்பட்டு உள்ளது.
18 என்பது ஜெயத்தை குறிக்கும் என்பதால் அதனை வெளிப்படுத்தும் வகையில் கோயில் விமானத்தின் மீது வைப்பதற்காக 18 அடி உயரத்திற்கு செப்புக்கலசம் செய்யப்பட்டு, பக்தர்கள் அதனை சுற்றி வந்து வழிபட வசதி செய்யப்பட்டுள்ளது. 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் நுழைவாயிலில் 27 படிக்கட்டுகள் உள்ளன. கோயில் உள்பகுதியில் தெய்வங்கள், மகான்கள், யானை சிற்பங்கள் செய்யப்பட்டு கதவுகளில் பொருத்தப்பட்டுள்ளது.
கோயிலின் வடக்கு பகுதியில் தீர்த்தக்குளம் இருக்கிறது. திருப்பணியை மராட்டிய, தமிழக ஸ்தபதிகள் இணைந்து செய்துள்ளனர். தீர்த்தக்குளத்தை ஒட்டிய அரசமரத்தில் இரண்டு யானைகளின் உருவம் அழகுற அமைந்திருந்தது. இதனை பார்த்த பக்தர்கள் அதனை வணங்கும் வகையில் அரச மரத்தின் கீழ் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. |