இங்குள்ள மூலவர் சரநாராயணப்பெருமாள் முழுவதும் சாளக்கிராமத்தால் ஆனவர். பொதுவாக நரசிம்மர் அமர்ந்த நிலையிலும், நின்ற நிலையிலும் அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இத்தலத்தில் உள்ள நரசிம்மர் சயன கோலத்தில் தாயாருடன் அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.திருமாலின் திவ்வியத்திருத் தலங்களில் இக்கோயிலில் தான் சயன நரசிம்மர் சயன திருக்கோலத்தில் தெற்கு நோக்கி சயனித்திருக்கிறார்.
இது ஒர் மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சமாகும். மேலும் தாயாரும் உடன் எழுந்தருளியிருப்பதால் இது போக சயனம் ஆகும். இந்த சயன நரசிம்மர், திருவக்கரையில் வக்ராசுரனை அழித்து விட்டு, அதன் பரிகாரத்துக்காக இத்தலத்தில் வந்து சயனித்துள்ளார்.எழுநூறு ஆண்டுகளுக்கு முன் வேதாந்த தேசிகர் திருவஹீந்திரபுரம் செல்லும் போது இந்த சயன நரசிம்மரை வழிபட்டதாக கூறப்படுகிறது.
சிவனைப்போலவே இந்த சயன நரசிம்மருக்கு ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.புரட்டாசி மாதம் முழுவதும் சிறப்பு அலங்காரமும், சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. இந்த மாதத்தில் திருப்பதி செல்ல முடியாதவர்கள் இங்குள்ள பெருமாளை வழிபாடு செய்யலாம். |