ஆஞ்சநேயர் கைகட்டி, வாய்பொத்தி, பவ்ய ஆஞ்சநேயராக சேவை சாதிப்பது சிறப்பு. ராமபிரானுக்கு எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவை செய்தவர் அனுமன். மற்றவர்களெல்லாம், ராமனின் மூலமான ஸ்ரீமன் நாராயணனிடம் வைகுண்டம் வேண்டி பிரார்த்தித்தனர். அனுமன் மட்டும் மறுத்து விட்டார். காரணம், பூலோகத்தில் ராமநாமம் சொல்ல வழியிருக்கிறது.
வைகுண்டத்துக்குச் சென்றால் "நாராயணா' என்ற கோஷம் தானே கேட்கும் என்பதால், என்றும் அழியாத சிரஞ்சீவியாக பூலோகத்திலேயே தங்கியிருக்க ஸ்ரீராமனிடம் வரம் பெற்றார். சோழ மன்னர் ஒருவர் காவேரி ஆற்றின் கிளைநதியான அரசலாற்றின் கரையோரம் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சமேத வாசுதேவபெருமாளுக்கு கோயில் எழுப்பினார்.
அங்கே பவ்ய ஆஞ்சநேயருக்கு சன்னதியும் எழுப்பப்பட்டது. இவர் பக்தர்களின் தேவையை நிறைவேற்றி வருகிறார். சரபோஜிராஜபுரம் என அழைக்கப்படும் கடகம்பாடியில் இக்கோயில் உள்ளது. |