|
|||||
உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் முன்னெடுத்த உலகத்தமிழ் மொழி நாள் மற்றும் தமிழ் வார விழா |
|||||
![]() உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களின் கோரிக்கையான தமிழர்களுக்கான ஒரு தமிழ் மொழி நாள் மற்றும் அதை உள்ளடக்கிய வாரத்தைத் தமிழ் மொழி வாரம் என்றும் அறிவிக்க வேண்டும் , அதுவும் அது தமிழ் மொழிக்காகவும், இனத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும் எழுச்சியுடன் பாடி ஒரு உயர்ந்த சிந்தனை மிக்க கவிஞர் பரம்பரையை உருவாக்கிய புரட்சிக்கவிஞர். பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளாக அமைவது சிறப்பு என்றும் எடுத்துரைத்து , உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு மார்ச் 19 ஆம் நாள் கடிதம் வாயிலாக ஒரு வேண்டுகோள் விடுத்தது. இந்தக் கோரிக்கையைப் பல தமிழ் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தின.
தமிழர்த் தலைவர் .ஆசிரியர். கி.வீரமணி அவர்களும் மன்றத்தின் கருத்தை வலியுறுத்தி ஒரு சிறப்பான தலையங்கம் எழுதினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளான ஏப்ரல் 29 முதல் மே 5 வரை "தமிழ்மொழி வாரம் "என்று அறிவித்து அதனை அரசே கொண்டாடும் எனவும் அளப்பரியத் தமிழ் உணர்வுடன் அறிவித்து உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியளித்தார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் புரட்சிக் கவிஞரின் பிறந்தநாளான ஏப்ரல் 29 ஆம் நாள் , செவ்வாய்க்கிழமை மாலை சென்னை கோட்டூரில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழக வளாகத்தில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் " உலகத் தமிழ் மொழி நாள் மற்றும் தமிழ் மொழி வாரம்" என்று விழா எடுத்தது .
தம்முடன் அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை , புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் .அமெரிக்கா, இலெமூரியா அறக்கட்டளை. மும்பாய், கருநாடக மாநில தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் .பெங்களூரு, உலகத் திருக்குறள் இணையக் கல்விக்கழகம். சென்னை, கவிஞர் புதுவை சிவம் இலக்கியப் பேரவை.புதுச்சேரி, கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ .மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம் மற்றும் வலைத்தமிழ்.அமெரிக்கா ஆகிய எட்டு சிறந்த தமிழ் அமைப்புகளுடன் கை கோர்த்து இந்த விழாவினைச் சிறப்பாக நடத்தியது.
கலைமாமணி.டி.கே.எஸ். கலைவாணன் தமிழ்த்தாய் வாழ்த்தும் , புரட்சிக்கவிஞரின் இரு பாடல்களையும் பாடித் தொடங்கிய விழாவில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் பொதுச்செயலாளர்.பொறியாளர்.த.ஞானசேகரன் அனைவரையும் ஒன்றிணைத்துச் சிறப்பான வரவேற்புரை அளித்தார்.
தொடர்ந்து இலெமூரியா அறக்கட்டளையின் நிறுவுநரும் , உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின்இந்தியத் தமிழ்ச்சங்கக் குழு ஒருங்கிணைப்பாளருமான திரு.சு.குமணராசன் விரிவான விழாவின் நோக்கவுரையற்ற , புரட்சிக்கவிஞர் தமிழ்மன்றம் தலைவர் திரு.துரைக்கண்ணன் உணர்வு மிகு கருத்துரை வழங்கினார்.
இதனையடுத்து உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர்.பொறியாளர்.அரசர் அருளாளர் அமெரிக்காவிலிருந்தும், உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் துணைத்தலைவர் பேராசிரியர்.ப.மருதநாயகம் லண்டனிலிருந்தும் காணொளி வாயிலாக நன்றி தெரிவித்து உரையாற்றினார்கள்.
"உலகத் தமிழரின் உலகத்தமிழ் மொழி நாள்" என்ற தலைப்பில் பேராசிரியர் .கவிஞர்.ஈரோடு தமிழன்பன் "உலகத்தமிழ் மொழி நாள் செயல்திட்ட முன்மொழிவு " என்ற தலைப்பில் பேராசிரியர். மறைமலை இலக்குவனார் " உலகத்தமிழ் மொழி நாளும் பாவேந்தரும் " எனும் தலைப்பில் கலைமாமணி எழுச்சிக் கவிஞர் பொன்னடியார் ஆகிய புரட்சிக் கவிஞருடன் நெருங்கிப் பழகிய அறிஞர் பெருமக்கள் தமிழ் மொழி நாள் மற்றும் வாரம் என்பதின் தேவையை வலியுறுத்தி அதற்கு புரட்சிக்கவிஞரின் பிறந்தநாள் எவ்வளவு பொருத்தமானது என்பதையும் விரிவாக எடுத்துரைத்து உரையாற்றினர்.
விழாவிற்குத் தலைமை ஏற்று நிறைவுரையாற்றிய ஆசிரியர்.கி.வீரமணி அவர்கள் சமூக நீதிப் பார்வையில் புரட்சிக்கவிஞரின் மிக உயர்ந்த பங்களிப்பினை விவரித்து, தந்தை பெரியாருடன் அவர் இணைந்து பணியாற்றிய வரலாற்றினை உணர்வுப் பூர்வமாக எடுத்துரைத்து புரட்சிக் கவிஞரின் பிறந்தநாள் தொடங்கி தமிழ் மொழி வாரம் என அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் மற்றும் விழாவில் இணைந்து செயல்பட்ட எட்டுத் தமிழ் அமைப்புகளுக்கும் தமது பாராட்டினைத் தெரிவித்து , தமிழ் மக்கள் விழிப்புற்று எழுச்சி பெற்றிடப் படித்த உணர்வாளர்கள் புரட்சிக்கவிஞரின் கருத்துக்களை மக்களிடம் முன்னெடுத்துச் செல்லவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து கருநாடக மாநில தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் திரு.மு.முத்துமணி நன்னன் விழாவின் தீர்மானத்தை வாசித்தார். இதனை அடுத்து அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கப் பேரவையின் பொதுச்செயலாளர். திரு .முத்துராமன் நன்றியுரையாற்றினார்.
பல அறிஞர்களும், கவிஞர்களும், பேராசிரியர்களும், தமிழ் அமைப்பாளர்களும், தமிழ் உணர்வாளர்களும் பெருமளவில் கலந்து கொண்ட இவ்விழாவில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் பேராசிரியர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர். மோசஸ் மைக்கேல் பாரடே சிறப்பாக இணைப்புரையற்ற
நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
|
|||||
by hemavathi on 05 May 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|