நெல்லையப்பர் கோவிலில் 200 ஆண்டுகள் பழமையான, தேவாரப் பாடல்கள் கொண்ட ஓலைச்சுவடிகள் கண்டெடுப்பு
தேவாரப் பாடல்கள் கொண்ட ஓலைச்சுவடிகளோடு, 12 அரியவகை ஓலைச்சுவடிகள் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கள ஆய்வு நடைபெற்றது. அப்போது செப்புப் பட்டயங்கள், தாள் சுவடிகள்,அரிய ஓலைச்சுவடிகள் கண்டெடுக்கப்பட்டன. கோயில்களில் தற்போது நடைபெற்று வரும் களப்பணியில் பட்டயங்கள் சுவடிகள் கிடைத்த வண்ணம் உள்ளன. சு.தாமரைப்பாண்டியன் (களப்பணியின் திட்ட ஒருங்கிணைப்பாளர், சுவடியியல் துறை பேராசிரியர்) அவர்கள் இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சர் பி. கே. சேகர்பாபு அவர்களால் கோவில்களில் உள்ள அரிய சுவடிகளைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சியினால் சுவடி திட்டக் குழுவினர்கள் களப்பணியில் ஈடுபட்டு செயலாற்றிக் கொண்டிருப்பதை கூறினார்.
சுவடியியளாளர்கள் மா.பாலசுப்பிரமணியன்,கா. சந்தியா,இரா.சண்முகம் நா.நீலகண்டன் ஆகியோர் நெல்லையப்பர் கோவிலில் களப்பணியில் ஈடுபட்டனர்.அதில் மன்னர்களின் பெயர்கள், அவர்கள் வழங்கிய கொடைகள் மற்றும் தானங்கள் பற்றிய செய்திகள் இடம் பெற்றிருந்தன. சொக்கநாத நாயக்கர், விசுவநாத நாயக்கர், முத்து வீரப்ப நாயக்கர், சேர குல இராமபாண்டியன், இரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் ஆகியோரது நிலதானங்கள் பற்றிய செய்திகள் இருந்தன.
பின் 200 ஆண்டுகள் பழமையான 13 ஓலைச் சுவடிகள் கண்டெடுக்கப்பட்டன 'தோடுடைய செவியன்' என்ற பாடல் எழுதப்பட்ட திருஞானசம்பந்தரது தேவாரப் பாடல் எழுதப்பட்ட ஓலைச்சுவடி கிடைத்துள்ளது. சுவடிகள் எந்தச் சிதைவும் இன்றி நல்ல நிலையில் உள்ளன. இதனை நூலாக்கம் செய்வதற்கான முயற்சிகள் உடனடியாக எடுக்கப்பட உள்ளன. மின் நூலாக்கப் பணியும் நடைபெற உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து கோவில்களிலும் இக்களப்பணி தொடர்ந்து நடைபெற உள்ளது.
|