இங்கு ஆஞ்சநேயரின் மார்பில் சிவலிங்கம் வடிக்கப்பட்டுள்ளது. கால்களில் பாதரட்சை அணிந்து, இடுப்பில் கத்தி செருகி போர்க்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தகைய அமைப்பில் ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம். இப்பகுதியை ஆண்ட ஆஞ்சநேய பக்தரான சிற்றரசர், போருக்குச் செல்லும்போது, ஆஞ்சநேயரை வழிபட்டே செல்வார். அவருக்கு ஆஞ்சநேயர் கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை எழுந்தது.
ஆனால், எங்கு கோயில் கட்டுவதென அவருக்குத் தெரியவில்லை. மன்னரின் கனவில் தோன்றிய ஆஞ்சயநேர், அப்பகுதியில் இருந்த மலைக் கோட்டையை சுட்டிக்காட்டினார். மன்னர் ஆஞ்சநேயருக்கு சிலை வடித்து, கோட்டையில் பிரதிஷ்டை செய்து கோயில் அமைத்தார். இவர், "அபய வரத ஆஞ்சநேயர்' எனப் பெயர் பெற்றார். திண்டுக்கல்லில் உள்ள மலைக்கோட்டையின் ஒரு பகுதியாக அமைந்த கோயில் இது. கோயிலுக்கு கீழே அனுமன் தீர்த்தம் உள்ளது.
பெருமாள், ராமாவதாரம் எடுத்தபோது, சிவனே ஆஞ்சநேயராக தோன்றி சேவை செய்ததாகச் சொல்வர். அனுமன் ஜெயந்தியன்று சன்னதி முன் மண்டபம் முழுதும் பூக்கள், பழம் மற்றும் வடைகளால் அலங்காரம் செய்துவிடுவர். தை அமாவாசையன்று சுவாமிக்கு செந்தூரக்காப்பு அலங்காரம் செய்து, விசேஷ பூஜை நடக்கும். பெரும்பாலான ஆஞ்சநேயர் கோயில்களில் மட்டைத் தேங்காய் கட்டி பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளது. ஆனால், இங்கு கிரக, ஜாதக தோஷ நிவர்த்திக்காக இளநீர் கட்டி வேண்டுகின்றனர். |