பஞ்சாப் தலைநகர், சண்டிகரை சேர்ந்த, மன் கவுர் என்ற 99 வயது பாட்டி அமெரிக்காவில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று, சாதனை படைத்துள்ளார்.
ஓட்டப்பந்தயம் போன்ற தடகள விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்ட மன் கவுர். நம் நாட்டில், நடைபெற்ற பல போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை பெற்றுள்ளார். மேலும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில், முதியோருக்கு நடத்தப்படும், தடகள போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்கள், விருதுகளை வாரி குவித்துள்ளார்.
சமீபத்தில், அமெரிக்காவில் பெற்ற விருதுடன், நாடு திரும்பிய அவர், பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது,
நான் தினமும், அதிகாலை, 3:00 மணிக்கு எழுந்து, வீடு அருகே உள்ள பூங்காவில், 400 மீட்டர் ஓடுவேன்; பின், யோகா செய்வேன். எண்ணெய், நெய் போன்றவற்றை உணவில் சேர்ப்பதில்லை; தினமும், அதிக அளவில் பழச்சாறுகளை குடிப்பேன்; நானே தயாரிக்கும் உணவை, இரண்டு முறை எடுத்துக்கொள்வேன்.
கடந்த ஆண்டு, கனடாவில் நடந்த ஓட்டப்பந்தயம் மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகளில், ஐந்து தங்கம், அமெரிக்காவில் நடந்த உலக தொடர் விளையாட்டுப் போட்டிகளில், ஐந்து தங்கம், 2011ல் அமெரிக்காவில் நடந்த சர்வதேச தடகள போட்டிகளில், 'அதலெட் ஆப் தி இயர்' விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளேன் என மன் கவுர் தெரிவித்துள்ளார்.
சாதனை செய்வதற்கு வயது ஒரு தடையே இல்லை என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் இந்த மூதாட்டி.
|