திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது) பெண்தகைப் பேதைக்குக் கண் - பெண் தகையை உடைய இப்பேதைக்கு உளவாய கண்கள்; கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் அமர்த்தன - தம்மைக் கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்துடனே கூடி அமர்த்திருந்தன. (அமர்த்தல்: மாறுபடுதல். குணங்கட்கும் பேதைமைக்கும் ஏலாது கொடியவாயிருந்தன என்பதாம்.)
மணக்குடவர் உரை:
தம்மைக்கண்டவர்கள் உயிரையுண்ணும் தோற்றத்தாலே பெண் தகைமையையுடைய பேதைக்கு ஒத்தன கண்கள். அமர்தல் - மேவல். இது பேதையோடு ஒத்த தொழிலுடைத் தென்று கண்ணின் கொடுமையை யுட்கொண்டு கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
பெண்தகைப் பேதைக்குக் கண் - பெண்டன்மையுடைய இப்பேதைமையாளுக் குள்ள கண்கள்; கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் அமர்த்தன - தம்மைக் கண்டவரைக் கொல்லும் தோற்றத்துடன் கூடிக் கொடியனவா யிருந்தன. இனி அமர்த்தல் மாறுபடுதல் என்றுகொண்டு கண்கள் பெண்டன்மையொடும் பேதைன்மையொடும் பொருந்தாது மாறுபட்டிருந்தன எனினுமாம். 'கண்' பால்பகா அஃறிணைப்பெயர் பேதையென்னுஞ்சொல் இங்குப் பருவங்குறியாது இளமை குறித்து நின்றது.
கலைஞர் உரை:
பெண்மையின் வார்ப்படமாகத் திகழுகிற இந்தப் பேதையின் கண்கள் மட்டும் உயிரைப் பறிப்பதுபோல் தோன்றுகின்றனவே! ஏனிந்த மாறுபாடு?.
சாலமன் பாப்பையா உரை:
பெண்மைக் குணம் மிக்க இப்பெண்ணின் கண்களுக்கு அவற்றைப் பார்ப்பவர் உயிரைப் பறிக்கும் தோற்றம் இருப்பதால் அவள் குணத்திற்கும் அறிவிற்கும் மாறுபட்டு போர் செய்கின்றன.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
பார்க்கிறவர்களுடைய உயிரைக் கவர்ந்துவிடுகிற காரணத்தால் அழகு நிறைந்த இந்தக் களங்கமற்ற பெண்ணுக்குக் கண்கள்மட்டும் அவளுடைய நல்ல இயல்புக்கு விரோதமான சுபாவமுள்ளனவாக இருக்கின்றனவே!
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பெண் தன்மையுடன் கூடிய இப்போதைக்கு இருக்கும் கண்கள், தம்மைக் கண்டவர் உயிரை உண்ணுகிற தோற்றத்துடனே கூடி பெண் தன்மைக்கு மாறுபட்டிருந்தன.
தமிழ்க்குழவி உரை:
பார்ப்பவர் உயிரைப் பறிக்கும் தோற்றம் உடையதாக இருப்பதால் இளமை சான்ற இவள் கண்கள் கொடுங்கூற்றாக உள்ளனவோ?
Translation
In sweet simplicity, A woman's gracious form hath she;
But yet those eyes, that drink my life, Are with the form at strife!.
Explanation
These eyes that seem to kill those who look at them are as it were in hostilities with this feminine simplicity.
Transliteration
Kantaar Uyirunnum Thotraththaal Pentakaip
Pedhaikku Amarththana Kan
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்