LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1083 - களவியல்

Next Kural >

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது) கூற்று என்பதனைப் பண்டு அறியேன் - கூற்றென்று நூலோர் சொல்வதனைப் பண்டு கேட்டு அறிவதல்லது கண்டறியேன்; இனி அறிந்தேன் - இப்பொழுது கண்டறிந்தேன்; பெண் தகையாள் பேர் அமர்க்கட்டு - அது பெண்தகையுடனே பெரியவாய் அமர்த்த கண்களை உடைத்து. (பெண்தகை: நாணம்,மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் குணங்கள். அவை அவ்வக்குறிகளான் அறியப்பட்டன. அமர்த்தல்: அமர் செய்தல், பெயரடியாய வினை. பெண்தகையால் இன்பம் பயத்தலும் உண்டேனும் துன்பம் பயத்தல் மிகுதிபற்றிக் கூற்றாக்கிக் கூறினான்.)
மணக்குடவர் உரை:
பண்டு கூற்றின்வடிவு இன்னபெற்றித்தென்பதை அறியேன்: இப்பொழுது அறிந்தேன். அது பெண்டகைமையோடே பெருத்து அமர்த்த கண்களையுடைத்து. இது நம்மை வருத்தற்குத் தக்காளென்னுங் குறிப்பு.
தேவநேயப் பாவாணர் உரை:
கூற்று என்பதனை பண்டு அறியேன் - காலன் என்று சொல் லப்படுவதை இதற்கு முன்பு கேட்டறிந்த தல்லது கண்டறியேன்; இனி அறிந்தேன் - இப்போது கண்டறிந்தேன்; பெண்தகையால் பேர் அமர்க்கட்டு - அது பெண்டன்மையுடன் பெரிய அமர்த்த கண்களையுடையது. பெண்டன்மை செயல்களாற் குறிப்பா லறியப்பட்ட அச்சம் மடம், நாணம், பயிர்ப்பு என்பன. அமர்த்தல் போர் செய்தல் ' ஆல் ' உடனிகழ்ச்சிப் பொருளது. அழகும் காதல் தோன்றாத எதிர் நோக்கும் அளவிறந்து துன்புறுத்துவதால், கூற்றாக்கிக் கூறினான்.
கலைஞர் உரை:
கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன். அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை.
சாலமன் பாப்பையா உரை:
எமன் என்று நூலோர் சொல்ல முன்பு கேட்டிருக்கிறேன்; பார்த்தது இல்லை; இப்போது தெரிந்து கொண்டேன். பெண்ணிற்கே உரிய நல்ல குணங்களுடன் பெரிதாய்ப் போரிடும் கண்களையும் உடையது தான் எமன்.
Translation
Death's form I formerly Knew not; but now 'tis plain to me; He comes in lovely maiden's guise, With soul-subduing eyes.
Explanation
I never knew before what is called Yama; I see it now; it is the eyes that carry on a great fight with (the help of) female qualities.
Transliteration
Pantariyen Kootren Padhanai Iniyarindhen Pentakaiyaal Peramark Kattu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >