திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) மதி - மதியே; மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின் -இம்மலர் போலும் கண்ணையுடையாள் முகத்தை நீ ஒக்க வேண்டுதியாயின்; பலர் காணத்தோன்றல் - இதுபோல யான் காணத் தோன்று; பலர் காணத் தோன்றாதொழி. (தானே முகத்தின் நலம் முழுதும் கண்டு அனுபவித்தான் ஆகலின், ஈண்டும், பலர் காணத்தோன்றலை இழித்துக் கூறினான். தோன்றின் நினக்கு அவ்வொப்பு உண்டாகாது என்பதாம்.)
மணக்குடவர் உரை:
மதியே! நீ மலர்போலுங் கண்களை யுடையாளது முகத்தை ஒப்பையாயின், பலர் காணுமாறு தோன்றாதொழிக. இது மதி ஒளியும் வடிவும் ஒத்ததாயினும் குணத்தினாலே ஒவ்வாதென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
(இதுவுமது) மதி - திங்களே ! ; மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின் - இத்தாமரை மலர் போலுங் கண்ணையுடையாளின் முகத்தை யொக்க நீவிரும்பு வாயானால் ; பலர் காணத்தோன்றல் - இனியாகிலும் எல்லாருங் காணத்தோன்றாதே , நான் மட்டுங் காணத்தோன்று . ஏற்கெனவேயுள்ள வடிவு நிலையின்மையுங் களங்கமுமாகிய குற்றங்களுடன் , பொதுமகள் முகம்போலப் பலருங்கண் டின்புறுதற் கேதுவான பரத்தைமையுங் கூறியவாறு . பலர் காணத்தோன்றாமை கூடாமையின் முகமொத்த லில்லையென்பதாம் .
கலைஞர் உரை:
நிலவே! மலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின் முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பதாய் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமேயானால் (அந்தப் போட்டியில் நீ தோல்வியுறாமல் இருந்திட) பலரும் காணும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல்.
சாலமன் பாப்பையா உரை:
நிலவே மலர் போன்ற கண்ணை உடைய என் மனைவியின் முகம் போல ஆக நீ விரும்பினால் நான் மட்டும் காணத் தோன்று; பலரும் காணும்படி தோன்றாதே.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(சந்திரனே!) மலர் போன்ற கண்ணுள்ள என் காதலியின் முகம்போல் பிரகாசமுள்ள பெண்ணாக நீ மாறிவிட்டால், அதன் பிறகு இப்படிப் பலபேர் உன்னைப் பார்க்கும்படி வெளியே திரியக்கூடாது.
Translation
If as her face, whose eyes are flowers, thou wouldst have charms for me,
Shine for my eyes alone, O moon, shine not for all to see!.
Explanation
O moon, if you wish to resemble the face of her whose eyes are like (these) flowers, do not appear so as to be seen by all.