LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- மனோன்மணீயம்

முதல் அங்கம்: இரண்டாம் களம்

     இடம்: கன்னி மாடம்
    காலம்: ஏற்பாடு
    [மனோன்மணியும் வாணியும் கழல் விளையாடி இருக்க]

(ஆசிரியத் தாழிசை)
மனோன்மணி:     (கழல் விளையாடிப் பாட)
துணையறு மகளிர்மேற் சுடுகணை தூற்பவன்
அணைகில னரன்மின்னென் றாடாய் கழல்
அணைந்துநீ றனானென் றாடாய் கழல்
வாணி:     நீறாயி னாலென்னை நேர்மலர் பட்டபுண்
ஆறா வடுவேயென் றாடாய் கழல்
    அழலாடுந் தேவர்க்கென் றாடாய் கழல்
மனோன்:    இருளில் தனித்துறை ஏழையர் தங்கள்மேற்
பொருதலோ வீரமென் றாடாய் கழல்
    போயெரிந் தான்பண்டென் றாடாய் கழல்
வாணி:     எரிந்தன னாயிலென் என்றென்றுந் தம்முடல்
கரிந்ததது பாதியென் றாடாய் கழல்
    கடுவுண்ட கண்டர்க்கென் றாடாய் கழல்
மனோன்:    தெருவில் பலிகொண்டு திரிதரும் அம்பலத்
தொருவர்க் குடைந்தானென் றாடாய் கழல்
    உருவங் கரந்தானென் றாடாய் கழல்.
வாணி:     உருவங் கரந்தாலென் ஓர்மல ரம்பினால்
அரையுரு வானாரென் றாடாய் கழல்
    (அந்நட ராஜரென்) றாடாய் கழல்
    [பெருமூச்செறிய]
    (நேரிசை ஆசிரியப்பா)
மனோன்: (சிரித்து)     ஏதடி வாணி! ஓதிய பாட்டில்
ஒருபெய ரொளித்தனை பெருமூச் செறிந்து
நன்று! நன்று! நின் நாணம்.
மன்றலு மானது போலும்வார் குழலே!
வாணி:     ஏதம் மாநீ சூது நினைத்தனை?
ஒருபொரு ளும்யான் கருதினே னல்லேன்.
இச்சகத் தெவரே பாடினும்,
உச்சத் தொனியில் உயிர்ப்பெழல் இயல்பே.
மனோன்:    மறையேல்! மறையேல் பிறைபழி நுதலாய்!
திங்கள் கண்டு பொங்கிய கடலெனச்
செம்புனல் பரக்கச் செந்தா மரைபொற்
சிவந்தவுன் கபோல நுவன்று நின்மனக்
களவெலாம் வௌியாக் கக்கிய பின்னர்
ஏதுநீ யொளிக்குதல்? இயம்பாய்
காதலன் நேற்றுனக் கோதிய தெனக்கே.
வாணி:     ஐயோ கொடுமை! அம்ம! அதிசயம்
எருதீன் றெனுமுனம் என்னகன் றென்று
திரிபவ ரொப்பநீ செப்பினை!
நான்கண் டேநாள் நாலைந் தாமே.
மனோன்:    ஏதடி! நுமது காதல் கழிந்ததோ?
காணா தொருபோ திரேனெனுங் கட்டுரை
வீணா யினதோ? பிழைத்தவர் யாவர்?
காதள வோடிய கண்ணோய்!
ஓதுவாய் என்பா லுரைக்கற் பாற்றே.
வாணி:     (கண்ணீர் ச்ிந்தி)
எதனையான் இயம்புகோ! என்றலை விதியே
வா விளை யாடுவோம் வாராய்
யார்முறை யாடுதல்? வார்குழற் றிருவே
மனோன்:    ஏனிது! ஏனிது! வாணி! எட்பூ
ஏசிய நாசியாய்! இயம்புக
மனத்திடை யடக்கலை! வழங்குதி வகுத்தே.
வாணி:     எப்படி யுனக்கியான் செப்புவே னம்மா
தலைவிதி தடுக்கற் பாற்றோ? தொலைய
அனுபவித் தன்றோ அகலும் மனையில்
தந்தையுங் கொடியன்! தாயுங் கொடியள்!
சிந்தியார் சிறிதும் யான்படும் இடும்பை
என்னுயிர்க் குயிராம் என்கா தலர்க்கும்
இன்ன லிழைத்தனர். எண்ணிய வெண்ணம்
முதலையின் பிடிபோல் முடிக்கத் துணிந்தனர்
யாரொடு நோவேன்? யார்க்கெடுத் துரைப்பேன்?
வார்கடல் உலகில் வாழ்கிலன்
மாளுவன் திண்ணம். மாளுவன் வறிதே.
மனோன்:    முல்லையின் முகையும் முருக்கின் இதழுங்
காட்டுங் கைரவ வாயாய்? உனக்கும்
முரண்டேன்? பலதே வனுக்கே மாலை
சூடிடிற் கேடென்? காதால்
வள்ளையி னழகெலாங் கொள்ளைகொ ளணங்கே!
வாணி:     அம்மொழி வெம்மொழி. அம்ம! ஒழிதி.
நஞ்சும் அஞ்சிலேன்; நின்சொல் அஞ்சினேன்
இறக்கினும் இசையேன். தாமே துறக்கினும்
மறப்பனோ என்னுளம் மன்னிய ஒருவரே?
ஆடவ ராகமற் றெவரையும்
நாடுமோ நானுள வளவுமென் உளமே!
மனோன்:    வலம்புரிப் புறத்தெழு கலந்திகழ் மதியென
வதியும் வதன மங்காய்! வாணீ!
பேய்கொண் டனையோ? பித்தே றினையோ
நீயென் நினைத்தனை? நிகரில் குடிலன்
தன்மக னாகிச் சாலவும் வலியனாய்
மன்ன னுக்கினியனாய் மன்பல தேவனும்
உன்னுளங் கவர்ந்த ஒருவனும் ஒப்போ?
பேய்கொண் டனையோ? பேதாய்?
வேய்கொள் தோழி விளம்பா யெனெக்கே.
வாணி:     அறியாயொன்றும், அம்மா! அரிவையர்
நிறையழி காதல் நேருந் தன்மை.
ஒன்றுங் கருதி யன்றவ ருள்ளஞ்
சென்று பாய்ந்து சேருதல். திரியுங்
காற்றும் பெட்புங் காரணம் இன்மையில்
ஆற்றவும் ஒக்குமென் றறைவர்
மாற்றமென்? நீயே மதிமனோன் மணியே!
மனோன்:    புதுமைநீ புகன்றது. பூவைமார் காதல்
இதுவே யாமெனில் இகழ்தற் பாற்றே!
காதல் கொள்ளுதற் கேதுவும் இல்லையாம்!
தானறி யாப்பே யாட்டந் தானாம்!
ஆயினும் அமைந்துநீ ஆய்ந்திணர்ந்தோ துதி
உண்டோ இவர்தமி லொப்பு?
கண்டோ எனுமொழிக் காரிகை யணங்கே!
வாணி:     ஒப்புயா னெப்படிச் செப்புவன்? அம்மா!
அம்மா போயிறந் ததுவே
மன்னிய ஒருவன் வடிவுடன் பண்டே
மனோன்:    பித்தே பிதற்றினை. எத்திறமாயினும்
தாந்த முளத்தைத் தடைசெயில் எங்ஙனம்.
காந்தள் காட்டுங் கையாய்!
தவிர்ந்து சாடியோடும் வகையே?
வாணி:     ஈதெல்லாம் உனக்குயா ரோதுதற் கறிவர்!
மாதர்க்குறியதிக் காதல்,
என்பதொன் றறியும் மன்பதை யுலகே.
மனோன்:    மின்புரை யிடையாய்! என்கருத் துண்மையில்
வனத்தி லெய்தி வற்கலை புனைந்து
மனத்தை யடக்கி மாதவஞ் செயற்கே
சுந்தர முனிவன் சிந்துர அடியும்.
வாரிசம் போல மலர்ந்த வதனமும்
கருணை யலையெறிந் தொழுகுங் கண்ணும்
பரிவுடன் முகிழ்க்கு முறுவலும், பால் போல்
நரைதரு தலையுன் புரையறும் உடலும்,
மாந்தளிர் வாட்டு மேனி வாணி
எண்ணுந் தோறுங் குதித்து
நண்ணு மென்னுளம் மன்னிய தவத்தே.
வாணி:     சின்னாட் செலுமுனந் தேர்குவன் நீசொல்
கட்டுரைத் திண்ணம் மட்டள வின்றிக்
காதல் கதவுங் காலை
ஓதுவை நீயே யுறுமதன் சுவையே.
மனோன்:    வேண்டுமேற் காண்டி அவையெலாம் வீண், வீண்
காதலென் பதுவென்? பூதமோ? பேயோ?
வெருட்டினால் நாய்போ லோடிடும் வெருவில்
துரத்துங் குரைக்குந் தொடரும் வெகுதொலை
அடிக்கடி முனிவரிங் கணுகுவர் அஃதோ
அடுத்தவவ் வறையில் யாதோ சக்கரம்
இருத்திடத் திறவுகோல் வாங்கினர். கண்டனை
படர்சுழி யோடு பாய்திரை காட்டும்
வடதள வுதர வாணீ! மங்காய்!
வரும்பொழு தரும்பொருள் கேட்போம்
வாசிட் டாதிவை ராக்கிய நூற்கே
வாணி:     நூறாக் கேட்கினும் நூலறி வென்செயும்?
நீறா கின்றதென் நெஞ்சம். நாளை
என்னுயில் தாங்குவ தெவ்விதம்
மன்னவன் கட்டளை மறுப்பதெவ் விதமே?
மனோன்:    உன்றன் சிந்தையும் உந்தைதன் கருத்தும்
மன்றல் வழுதிக் குரைக்க வருவதும்
மையின் புறச்சார் பலவ னொதுங்குவது
ஏயு மெழிற்கால் வாணி!
நீயுரைத் தனையோ நின்னே சனுக்கே?
வாணி:     அதுவே யம்ம! என் உளநின் றறுப்பது
வதுவையும் வேண்டிலர். வாழ்க்கையும் வேண்டிலர்
ஒருமொழி வேண்டினர்; உரைத்திலேன் பாவி.
நச்சினே னெனுமொழிக் கேயவர்க் கிச்சை
பிச்சியான், ஓகோ! பேசினே னிலையே!
இனியென் செய்வேன்? என்நினைப் பாரோ?
மனைவரா வண்ணமென் னனையு முரைத்தாள்
ஊர்வரா வண்ணங் குடிலனும் ஓட்டினன்
யார்பா லுரைப்பன்? யார்போ யுரைப்பர்?
உயிரே யெனக்கிங் கொருதுணை
அயிரா வதத்தனும் அறியா வமுதே!
(அழ)
மனோன்:    அழுங்கலை! அழுங்கலை! அனிச்சமும் நெரிஞ்சிலா
அஞ்சிய அடியாய்! அழுங்கலை! அழுதுகண்
அஞ்சனங் கரைந்துநின் கஞ்சனக் கதுப்புங்
கருத்தே! ஏனிது! கருணைக் கடவுள் நின்
கருத்தே முடிப்பக் காண்டி. அஃதோ
மணங்கமழ் கோதையர் வந்தனர்.
அணங்குறல் பொன்னிகர் சுணங்கா ரணங்கே!
[செவிலியும் தோழிப் பெண்களும் வர]
செவிலி:    தாயே! வந்துபார் நீயே வளர்த்த
முல்லையு நறுமுகை முகிழ்த்தது. வல்லை
காதலிற் கவிழ்வை போலும்!
போதுநீத் தெம்மனை புகுந்த நற்றிருவே!
மனோன்:    போடி! நீ யாது புகன்றனை? தவத்தை
நாடிநா னிருக்க நணுகுமோ என்மனத்
துச்சமாம் இச்சையாற் சோர்வு?
நெருப்பையுங் கறையான் அரிக்குமோ நேர்ந்ததே!
முதற்றோழி:     பொய்யன் றம்ம! மையுண் கண்ணால்
வந்துநீ நோக்கு சந்தமார் முல்லை
நிரம்ப அரும்பி நிற்குந் தன்மை
இன்றிரா வலரு மெல்லாம்.
துன்றிரா நிகர் குழற்றோகாய்! வருகவே.
[எல்லோரும் போக]

by Swathi   on 22 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.