|
||||||||
மூன்றாம் திருமுறை-101 |
||||||||
3.101.திருஇராமேச்சுரம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இராமநாதேசுவரர்.
தேவியார் - பர்வதவர்த்தனி.
3879 திரிதரு மாமணி நாகமாடத்
திளைத்தொரு தீயழல்வாய்
நரிகதிக்க வெரியேந்தி யாடு
நலமே தெரிந்துணர்வார்
எரிகதிர் முத்த மிலங்குகான
லிராமேச் சுரமேய
விரிகதிர் வெண்பிறை மல்குசென்னி
விமலர் செயுஞசெயலே
3.101.1
அரிய மாணிக்கங்களையுடைய நாகங்களைப் படமெடுத்து ஆடுமாறு தம் உடலில் அணிந்துள்ளவர் சிவபெருமான். அவர் மகாசங்கார காலத்தில் நரிகள் ஊளையிடும் சுடுகாட்டில் நெருப்பெந்தி நடனம் செய்வார். மிக்க ஒளியுடைய முத்துக்கள் விளங்கும் சோலைகள் சூழ்ந்த இராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிந்தருளுகின்ற, ஒளிக்கதிர் வீசும் வெண்மையான பிறைச்சந்திரனைச் சடைமுடியில் தரித்த, இயர்பாகவே பாசங்களின் நீங்கியவரான சிவபெருமானின் அச்செயல், உயிர்கள் இளைப்பாறும் பொருட்டுச் செய்யப்படும் அருட்செயல் என்பதை உணர்ந்தவர்களே மெய்ஞ்ஞானிகள் ஆவர்.
3880 பொறிகிளர் பாம்பரை யார்த்தயலே
புரிவோ டுமைபாடத்
றிகிள ரப்பெயர்ந் தெல்லியாடுந்
திறமே தெரிந்துணர்வார்
எறிகிளர் வெண்டிரை வந்துபேரு
மிராமேச் சுரமேய
மறிகிளர் மானம்ழுப் புல்குகையெம்
மணாளர் செயுஞ்செயலே
3.101.2
வெண்ணிற அலைகள் துள்ளிவீசும் கடலுடைய இராமேச்சுரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, இள மான்கன்றையும், மழுவியும் ஏந்தியுள்ள சிவபெருமான் புள்ளிகளையுடைய பாம்பை இடையில் கட்டிக் கொண்டு, பக்கத்திலே சுருண்ட கூந்தலையுடைய உமாதேவி பாட, அதற்பேற்ப விரலால் தேறித்துப் பண்ணும் யாழ் முதலியவற்றின் இசை ஒலிக்க, நள்ளிரவில் நடனமாடும் செயலின் உண்மையைத் தெரிந்து உணர்பவர் மெய்ஞ்ஞானிகளாவர்.
3881 அலைவளர் தண்புனல் வார்சடைமே
லடக்கி யொருபாகம்
மலைவளர் காதலி பாடவாடி
மயக்கா வருமாட்சி
இலைவளர் தாழை முகிழ்விரியு
மிராமேச் சுரமேயார்
தலைவளர் கோலநன் மாலைசூடுந்
தலைவர் செயுஞ்செயலே
3.101.3
தழைகளை உடைய தாழை மரங்கள் மலர்களை விரிக்கும் திருராமேச்சுரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற. அழகிய தலைமாலைகளைச் சூடிய, தலைவராகிய சிவபெருமான் தமது நீண்ட சடைமுடிமேல் அலைபெருகிவரும் கங்கைநீரை அடக்கி, ஒரு பாகமாக அமைந்த மலையிலே வளர்ந்த உமாதேவி பாட, நடனமாடித் தம் தன்மை இதுவென்றுபிறர் அறியாதவாறு செய்து வரும் அருஞ்செயலின் மாட்சியை மெய்ஞ்ஞானிகளே உணர்வர்.
3882 மாதன நேரிழை யேர்தடங்கண்
மலையான் மகள்பாடந்
தேதெரி யங்கையி லேந்தியாடுத்
திறமே தெரிந்துணர்வார்
ஏதமி லார்தொழு தேத்திவாழ்த்து
மிராமேச் சுரமேயார்
போதுவெண் டிங்கள்பைங் கொன்றைசூடும்
புனிதர் செயுஞ்செயலே
3.101.4
குற்றமற்ற அடியவர்கள் தொழுது போற்றத் திரு இராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, அரும்பு போன்ற இள வெண்ணிறப் பிறைச்சந்திரனையும், கொன்றை மலரையும் சூடியுள்ள புனிதரான சிவபெருமான், பெரிய கொங்கைகளையுடையவளாய், ஒளிபொருந்திய ஆபரணங்களை அணிந்த, பெரிய கண்களையுடைய, மலையான்மகளான உமாதேவி பாட, ஒளிபொருந்திய நெருப்பை உள்ளங்கையிலேந்தி நடனமாடும் செயலின் திறத்தைத் தெரிந்துணர்வார் சிவஞானிகளாவர்.
3883 சூலமோ டொண்மழு நின்றிலங்கச்
சுடுகா டிடமாகக்
கோலநன் மாதுடன் பாடவாடுங்
குணமே குறித்துணர்வார்
ஏல நறும்பொழில் வண்டுபாடு
மிராமேச் சுரமேய
நீலமார் கண்ட முடையவெங்கள்
நிமலர் செயுஞ்செயலே
3.101.5
ஏலம் முதலிய செடிகளையுடைய நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருஇராமேச்சுரம் என்னும் திருத் தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற நீலகண்டமுடைய, இயல்பாகவே பாவங்களின் நீங்கியவரான எங்கள் சிவபெருமான், சூலம், ஒளி பொருந்திய மழு ஆகியவற்றை ஏந்திச் சுடுகாட்டை இடமாகக் கொண்டு அழகிய உமாதேவி அருகில் நின்று பாட, நடனம் செய்யும் குணத்தைக் குறித்துணர்பவர் சிவஞானிகளாவர்.
3884 கணைபிணை வெஞ்சிலை கையிலேந்திக்
காமனைக் காய்ந்தவர்தாம்
இணைபிணை நோக்கிநல் லாளோடாடு
மியல்பின ராகிநல்ல
இணைமலர் மேலன்னம் வைகுகான
லிராமேச் சுரமேயார்
அணைபிணை புல்கு கரந்தைசூடும்
அடிகள் செயுஞ்செயலே
3.101.6
சிறந்த தாமரை மலர்களில் அன்னங்கள் வாழும் சோலைகள் சூழ்ந்த திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிந்தருளுகின்ற, சேர்த்துக் கட்டப்பெற்ற கரந்தைமாலை சூடிய சிவபெருமான், ஐம்மலர்க்கணைகளைத் தொடுக்க வில்லைக் கையில் ஏந்திய மன்மதனை எரித்தவர். அப்பெருமான் போன்ற மருண்ட கண்களையுடைய உமாதேவியோடு நடனமாடும் இயல்புடையவர்.
3885 நீரினார் புன்சடை பின்புதாழ
நெடுவெண் மதிசூடி
ஊரினார் துஞ்சிருள் பாடியாடும்
உவகை தெரிந்துணர்வார்
ஏரினார் பைம்பொழில் வண்டுபாடு
மிராமேச் சுரமேய
காரினார் கொன்றைவெண் டிங்கள்சூடுங்
கடவுள் செயுஞ்செயலே
3.101.7
வண்டுகள் பாடும் அழகிய சோலைகள் சூழ்ந்த திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, கார்காலத்தில் மலரும் கொன்றையையும், வெண்ணிறப் பிறைச் சந்திரனையும் சூடியவரான சிவபெருமான், கங்கையைத் தாங்கிய புன்சடை பின்புறம் தொங்க, மிக்க வெண்ணிறப்பிறைச்சந்திரனைச் சூடி, உலகமே உறங்கும் நள்ளிரவில் பாடி ஆடும் உவகையின் செயல் தன்மையை உணர்பவர் சிவஞானிகளாவர்.
3886 பொன்றிகழ் சுண்ணவெண் ணீறுபூசிப்
புலித்தோ லுடையாக
மின்றிகழ் சோதியர் பாடலாடன்
மிக்கார் வருமாட்சி
என்றுநல் லோர்கள் பரவியேத்து
மிராமேச் சுரமேயார்
குன்றினா லன்றரக் கன்றடந்தோ
ளடர்த்தார்கொளுங் கொள்கையே
3.101.8
என்றும் நல்லோர்கள் போற்றி வணங்கும் திரு இராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, கயிலைமலையால் அன்று இராவணனின் அகன்ற வலிமையான தோள்களை அடர்த்த சிவபெருமான், நறுமணமிக்க அழகிய திருவெண்ணீற்றிணைத் திருமேனியில் பூசி, புலித்தோலாடை அணிந்து, மின்னல் போன்று ஒளிரும் செவ்வண்ணத்தராய், பாடி ஆடி வரும் செயலின் பருமையை உணர்பவர் சிவஞானிகளாவர்.
3887 கோவல னான்முக னோக்கொணாத
குழக னழகாய
மேவல னொள்ளெரி யேந்தியாடு
மிமையோ ரிறைமெய்ம்மை
ஏவல னார்புகழ்ந் தேத்திவாழ்த்து
மிராமேச் சுரமேய
சேவல வெல்கொடி யேந்துகொள்கையெம்
மிறைவர் செயுஞ்செயலே
3.101.9
அம்பு எய்தலில் வல்ல இராமபிரான் புகழ்ந்து ஏத்திவாழ்த்தும் திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில், விரும்பி வீற்றிருந்தருகின்ற, இடபம் பொறித்த வெற்றிக் கொடியை ஏந்திய சிவபெருமான், திருமால், பிரமன் இவர்களால் அறியப்படாதவர். இளமையும், அழகும் அமைந்த திருவுருவினர். ஒளி பொருந்திய நெருப்பைத் தம் கையிலேந்தி ஆடுகின்ற, தேவர்கட்கெல்லாம் இறைவனான அப்பெருமானின் அருட்செயலின் மெய்ம்மையை அறிவோர் சிவஞானிகளாவர்.
3888 பின்னொடு முன்னிடு தட்டைச்சாத்திப்
பிரட்டே திரிவாரும்
பொன்னெடுஞ் சீவரப் போர்வையார்கள்
புறங்கூறல் கேளாதே
இன்னெடுஞ் சோலைவண் டியாழ்முரலு
மிராமேச் சுரமேய
பன்னெடு வெண்டலை கொண்டுழலும்
பரமர் செயுஞ்செயலே
3.101.10
முதுகிலும், மார்பிலும் தடுக்கை அணிந்து, ஒதுக்கப்பட்ட இடங்களில் திரியும் சமணர்களும், பொன் போன்ற சீவரம் என்னும் ஆடையைப் போர்த்த புத்தர்களும் கூறும் புறங் கூற்று மொழிகளைக் கேளாமல், யாழிசை போல் வண்டுகள் ஒலிக்கும் சோலைகளை உடைய திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளி, பல்லையுடைய பெரிய மண்டையோட்டில் பலியேற்றுத் திரியும் சிவபெருமான் செய்யும் செயல்களைக் கேட்டு உணர்ந்து, அவரை வழிபட்டு உய்திபெறுங்கள்.
3889 தேவியை வவ்விய தென்னிலங்கை
யரையன் றிறல்வாட்டி
ஏவியல் வெஞ்சிலை யண்ணல்நண்ணு
மிராமேச் சுரத்தாரை
நாவியன் ஞானசம் பந்தனல்ல
மொழியா னவின்றேத்தும்
பாவியன் மாலைவல்லா ரவர்தம்வினை
யாயின பற்றறுமே
3.101.11
சீதாதேவியைக் கவர்ந்த தென்னிலங்கை மன்னனான இராவணனின் வலிமையை அழித்து, அம்பு எய்யும் வில்லேந்திய இராமபிரான் வழிபட்ட திருஇராமமேச்சுரம் என்னும் திருத்தலத்தில், விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை, நாவலராகிய ஞானசம்பந்தர், நல்ல மொழியால் போற்றிப் பாடிய பாட்டின் இலக்கணம் வாய்ந்த இப்பாமாலையை, ஓதி வழிபட வல்லவர்களின் வினைகள், முற்றிலும் அழியும்.
திருச்சிற்றம்பலம்
3.101.திருஇராமேச்சுரம் |
||||||||
by Swathi on 02 Apr 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|