|
||||||||
மூன்றாம் திருமுறை-114 |
||||||||
3.114.திருவேகம்பம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர்.
தேவியார் - காமாட்சியம்மை.
4024 பாயுமால்விடை மேலொரு பாகனே
பாவைதன்னுரு மேலொரு பாகனே
தூயவானவர் வேதத் துவனியே
சோதிமாலெரி வேதத் துவனியே
ஆயுநன்பொரு ணுண்பொரு ளாதியே
யாலநீழ லரும்பொரு ளாதியே
காயவின்மதன் பட்டது கம்பமே
கண்ணுதற்பர மற்கிடங் கம்பமே
3.114.1
இறைவர் பாய்ந்து செல்லும் பெருமையுடைய இடபத்தைச் செலுத்துபவர். உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர். தேவர்கள் போற்றுகின்ற வேதத்தின் தொனியானவர். சுடர்விட்டு எரியும் வெம்மையுடைய வேள்வித்தீ ஆனவர். ஆராயத்தக்க நல்ல கருத்துக்கள் எல்லாவற்றிலும் நுட்பமான கருத்தாக விளங்குபவர். ஆலநிழலின் கீழ்த் தட்சிணாமூர்த்தியாய் விளங்கிச் சனகாதி முனிவர்கட்கு அரும் பொருள் உரைத்த முதல்வர். போர்புரிய வந்த வில்லையுடைய மன்மதன் முதற்கண் அடைந்தது நடுக்கமேயாம். நெற்றிக் கண்ணுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருக்கச்சியேகம்பமே.
4025 சடையணிந்ததும் வெண்டலை மாலையே
தம்முடம்பிலும் வெண்டலை மாலையே
படையிலங்கையிற் சூலம தென்பதே
பரந்திலங்கையிற் சூலம தென்பதே
புடைபரப்பன பூதக ணங்களே
போற்றிசைப்பன பூகத ணங்களே
கடைகடோறு மிரப்பது மிச்சையே
கம்பமேவி யிருப்பது மிச்சையே
3.114.2
சிவபெருமான் சடையில் அணிந்திருப்பது வெண்டலை மாலை ஆகும். உடம்பிலும் தலைமாலை அணிந்துள்ளார். அழகிய கையில் சூலப்படை ஏந்தி உள்ளவர். பரந்து விளங்கும் கையைப் படை போன்று கொண்டு தோண்டிய அழகு செய்வதாகிய அணிகலன் திருமானின் கண் ஆகும். பக்கத்தில் சூழ்ந்து விளங்குவனவும், போற்றிசைப்பனவும் பூதகணங்களே. அப்பெருமான் வாயில்கள் தோறும் சென்று இரப்பது உணவே. அவர் திருக்கச்சியேகம்பம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றார்.
4026 வெள் எருக்கொடு தும்பை மிலைச்சியே;
ஏறு முன் செலத் தும்பை மிலைச்சியே!
அள்ளி நீறு அது பூசுவ தாகமே;
ஆன மாசுணம் மூசுவது ஆகமே;
புள்ளி ஆடை உடுப்பது கத்துமே;
போன, ஊழி, உடுப்பது உகத்துமே;
கள் உலாம் மலர்க் கம்பம் இருப்பதே
காஞ்சி மா நகர்க் கம்பம் இருப்பு அதே.
3.114.3
உரை கொடுக்கப்படவில்லை
4027 முற்றலாமை யணிந்த முதல்வரே
மூரியாமை யணிந்த முதல்வரே
பற்றிவாளர வாட்டும் பரிசரே
பாலுநெய்யுகந் தாட்டும் பரிசரே
வற்றலோடு கலம்பலி தேர்வதே
வானினோடு கலம்பலி தேர்வதே
கற்றிலாமனங் கம்ப மிருப்பதே
காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே
3.114.4
சிவபெருமான் ஆமையோட்டை அணிந்த முதல்வர்.வலிய ஆனேற்றை அழகு செய்து ஏறிய முதல்வர். ஒளி பொருந்திய பாம்பைப் பிடித்து ஆட்டும் தன்மையர். பாலாலும், நெய்யாலும் திருமுழுக்காட்டப்படும் பெருமையுடையவர். வற்றிய மண்டையோட்டைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சையேற்றுத் திரிபவர். தேவர்களாலும் ஏனைய உலகிலுள்ள அடியவர்களாலும் போற்றிப் பூசை செய்யப்படுபவர். அவரைப் போற்றாதவர்கள் மனம் இரும்புத்தூண் போன்றது. அப்பெருமான் திருவேகம்பம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றார்.
4028 வேடனாகி விசையற் கருளியே
வேலைநஞ்ச மிசையற் கருளியே
ஆடுபாம்பரை யார்த்த துடையதே
யஞ்சுபூதமு மார்த்த துடையதே
கோடுவான்மதிக் கண்ணி யழகிதே
குற்றமின்மதிக் கண்ணி யழகிதே
காடுவாழ்பதி யாவது மும்மதே
கம்பமாவதி யாவது மும்மதே
3.114.5
சிவபெருமான் வேட்டுவ வடிவம் தாங்கி அர்ச்சுனனுக்கு அருள்புரிந்தவர். கடலில் தோன்றிய நஞ்சை உண்டு கண்டம் கறுத்தவர். ஆடும் பாம்பை அரையில் கச்சாகக் கட்டி அதன்மேல் ஆடை அணிந்தவர், பிரளயகாலத்தில் ஐம்பூதங்களால் ஆகிய உலகம் அவரால் அழிக்கப்பட்டது. வளைந்த ஆகாயத்தில் விளங்கும் பிறையைத் தலைமாலையாக அழகுற அணிந்தவர். களங்கமில்லாத மெய்யடியார்களின் பக்தியாகிய வலை உணர்தற்கு இனிமையானது. சுடுகாடே அவர் வாழும் இருப்பிடம், திருக்கச்சியேகம்பத்தையும் தாம் விரும்பும் திருத்தலமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார்.
4029 இரும்புகைக்கொடி தங்கழல் கையதே
யிமயமாமக டங்கழல் கையதே
அரும்புமொய்த்த மலர்ப்பொறை தாங்கியே
யாழியான்றன் மலர்ப்பொறை தாங்கியே
பெரும்பகனட மாடுதல் செய்துமே
பேதைமார்மனம் வாடுதல் செய்துமே
கரும்புமொய்த்தெழு கம்ப மிருப்பதே
காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே
3.114.6
இறைவர் கொடி போன்று பெரிய புகையுடன் எழும் நெருப்பைக் கையிலேந்தியவர். இமயமலையரசனின் மகளான உமாதேவியின் கைகளால் அவருடைய திருவடிகள் வருடப்படுவன. அடியவர்களால் பூசிக்கப்படும் அரும்புகளையும், மலர்களையும் பாரமாகத் தாங்குபவர். சக்கரப் படையுடைய திருமாலின் பெரிய உடலெலும்பாகிய கங்காளத்தைச் சுமப்பவர். பகலில் திருநடனம் செய்பவர். தாருகாவனத்து முனிபத்தினிகளின் மனம் வாடச் செய்பவர். கருப்பங்கழிகள் நிறைந்து கம்பம் போலப் பருத்துக் காணப்படும் திருக்கச்சியேகம்பம் என்ற திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர்.
4030 முதிரமங்கை தவஞ்செய்த காலமே
முன்புமங்கை தவஞ்செய்த காலமே
வெதிர்களோடகில் சந்தமு ருட்டியே
வேழமோடகில் சந்த முருட்டியே
அதிரவாறு வரத்தழு வத்தொடே
யானையாடு வரத்தழு வத்தொடே
கதிர்கொள்பூண்முலைக் கம்ப மிருப்பதே
காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே
3.114.7
மேகம் போலும் நிறத்தையுடைய அம்பிகை முற்காலத்தில் இமயமலையில் சிவபெருமானைக் கணவராக அடையத் தவம் செய்தாள். பின் அம்பிகை கம்பையாற்றில் தவம் செய்யும் இக்காலத்திலும் மூங்கில், அகில், சந்தனம், மற்றும் ஏனைய முருட்டு மரங்களையும், யானை முதலிய மிருகங்களையும் ஓட முடியாதவாறு ஆரவாரத்தோடு கம்பையாறு அடித்துத்கொண்டு வர, பஞ்சகவ்வியங்களால் அபிடேகம் செய்யப்படும் சிவபெருமானைத் தழுவுவதால் முலைத்தழும்பு தம்பம்போல் உறுதியான அவர் மார்பில் விளங்குகின்றது. அப்பெருமான் காஞ்சிமாநகரிலுள்ள திருவேகம்பத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
4031 பண்டரக்க னெடுத்த பலத்தையே
பாய்ந்தரக்க னெடுத்த பலத்தையே
கொண்டரக்கிய துங்கால் விரலையே
கோளரக்கிய துங்கால் விரலையே
உண்டுழன்றது முண்டத் தலையிலே
யுடுபதிக்கிட முண்டத் தலையிலே
கண்டநஞ்ச மடக்கினை கம்பமே
கடவுணீயிடங் கொண்டது கம்பமே
3.114.8
சிவபெருமான், இராவணன் கைலைமலையை எடுத்த வலிமையை, மேற்சென்ற சிதறுவித்தலால், அவன் வலிமையற்றவன் என்பதை உணர்த்தும் வகையில் தம் திருப்பாத விரலை ஊன்றியவர். தாருகவனத்து முனிவரேவலால் கொனை செய்ய வந்த மானை ஏந்தியுள்ளவர். அவர் பிச்சையெடுத்துத் திரிந்தது தலை மண்டையோட்டிலே. சந்திரனுக்கு இடம் கொடுத்தது அவர் தலையிலே. நஞ்சைக் கண்டத்தில் அடக்கிய, உலகைத் தாங்கும் தூண் போன்றவன் சிவபெருமானே. கடவுளாகிய அப்பெருமான் விரும்பி வீற்றிருந்தருளுவது திருக்கச்சியேகம்பமே.
4032 தூணியான சுடர்விடு சோதியே
சுத்தமான சுடர்விடு சோதியே
பேணியோடு பிரமப் பறவையே
பித்தனான பிரமப் பறவையே
சேணினோடு கீழூழி திரிந்துமே
சித்தமோடு கீழூழி திரிந்துமே
காணநின்றன ருற்றது கம்பமே
கடவுணீயிட முற்றது கம்பமே
3.114.9
அம்பறாத் தூணியாகிய நெற்றிக்கண்ணிலிருந்து சுடர்விடும் நெருப்புப் பொறிகளை உடையவரே. அவற்றிலிருந்து தோன்றியவரே இயல்பாகவே பாசங்களின் நீங்கிய சுடர்விடு ஞானமயமான முருகக் கடவுளாவார். தம் வலிமையைப் பாராட்டி முடி காண்பான் சென்ற பிரமன் அன்னப்பறவை வடிவு தாங்கி ஆகாயத்திலும், திருமால் பன்றி உருவில் பாதாளத்திலும் செருக்கோடும், கீழ்மைத் தன்மையோடும் இறைவனைக் காண முயன்று ஊழிக்காலம் வரை திரிந்தும் அவர்கள் கண்டது அக்கினித் தம்பமாகிய உமது வடிவத்தையே. பரம் பொருளாகிய நீ விரும்பி வீற்றிருந்தருளுவது திருச்கச்சியேகம்பமே ஆகும்.
4033 ஓருடம்பினை யீருரு வாகவே
யுன்பொருட்டிற மீருரு வாகவே
ஆருமெய்தற் கரிது பெரிதுமே
யாற்றவெய்தற் கரிது பெரிதுமே
தேரரும்மறி யாது திகைப்பரே
சித்தமும்மறி யாது திகைப்பரே
கார்நிறத்தம ணர்க்கொரு கம்பமே
கடவுணீயிடங் கொண்டது கம்பமே
3.114.10
இறைவரே! யானையின் உடம்பினை உரித்ததாகிய தோலை உடம்பில் போர்வையாக அணிந்துள்ளீர். உம்முடைய உண்மைத்தன்மை சக்தி, சிவம் என இரண்டு திறந்தது. உமது பாகத்திலுள்ள அம்பிகையின் கரிய நிறம் ஒளிவாய்ந்தது. உயிர்கள் ஆன்ம முயற்சியினால் உம் திருவடிகளை அடைதல் அரிது. புத்தர் களும் உம்மை அறியாது திகைப்பர். அவர்கள் அறிவும் தம் நிலைமை மாறமாட்டாதாதலால் உம்மைத் துதிப்பதை வெறுப்பர். கருநிறமுடைய சமணர்கள் உம்மைக் கண்டு நடுங்குவர். பரம்பொருளாகிய நீர் விரும்பி வீற்றிருந்தருளுவது திருக்கச்சியேகம்பமே.
4034 கந்தமார்பொழில் சூழ்தரு கம்பமே
காதல்செய்பவர் தீர்த்திடு கம்பமே
புந்திசெய்வது விரும்பிப் புகலியே
பூசுரன்றன் விரும்பிப் புகலியே
அந்தமில்பொரு ளாயின கொண்டுமே
யண்ணலின்பொரு ளாயின கொண்டுமே
பந்தனின்னியல் பாடிய பத்துமே
பாடவல்லவ ராயின பத்துமே
3.114.11
நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்து விளங்குவது திருவேகம்பம் என்னும் திருத்தலம். அதனை விரும்பி வழிபடுபவர்கள் பழவினையால் வரும் துன்பங்கட்கு வருந்திச் சொரியும் துன்பக் கண்ணீரைத் தீர்த்திடும். எல்லாம் சிவன் செயல் என்பதை நிச்சயித்து, புகலியில் அவதரித்த பூசுரனான திருஞான சம்பந்தன், அந்தமில் பொருளாந்தன்மையை உட்கொண்டு, சிவபெருமானின் புகழையே பொருளாகக் கொண்டு அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் பக்தியில் மேம்பட்டு எல்லாம் கைகூடப்பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
3.114.திருவேகம்பம் |
||||||||
by Swathi on 02 Apr 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|