|
||||||||
மூன்றாம் திருமுறை-119 |
||||||||
3.119.திருவீழிமிழலை
பண் - புறநீர்மை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர்.
தேவியார் - சுந்தரகுசாம்பிகை.
4079 புள்ளித்தோ லாடை பூண்பது நாகம்
பூசுசாந் தம்பொடி நீறு
கொள்ளித்தீ விளக்குக் கூளிகள் கூட்டங்
காளியைக் குணஞ்செய்கூத் துடையோன்
அள்ளற்கா ராமை யகடுவான் மதிய
மேய்க்கமுட் டாழைக ளானை
வெள்ளைக் கொம்பீனும் விரிபொழில் வீழி
மிழலையா னெனவினை கெடுமே
3.119.1
சிவபெருமான் புலித்தோல் ஆடை உடுத்தவர். பாம்பை ஆபரணமாக அணிந்தவர். நறுமணம் கமழும் திருநீற்றைப் பொடியாகப் பூசியவர். சுடுகாட்டில் கொள்ளி நெருப்பை விளக்காகக் கொண்டு பூதகணங்கள் சூழக் காளியுடன் நடனம் புரிந்தவர். சேற்றில் விளங்கும் ஆமையின் வயிறு போன்ற சந்திரனும், யானையின் கொம்புபோன்ற தாழையும் விளங்கும் சோலைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமானின் திருநாமத்தை ஓத வினையாவும் கெடும்.
4080 இசைந்தவா றடியா ரிடுதுவல் வானோ
ரிழுகுசந் தனத்திளங் கமலப்
பசும்பொன்வா சிகைமேற் பரப்புவாய் கரப்பாய்
பத்திசெய் யாதவர் பக்கல்
அசும்புபாய் கழனி யலர்கயன் முதலோ
டடுந்தரிந் தெடுத்தவான் சும்மை
விசும்புதூர்ப் பனபோல் விம்மிய வீழி
மிழலையா னெனவினை கெடுமே
3.119.2
அடியவர்கள் பக்திப் பெருக்குடன் மலர்தூவிப் போற்றவும், தேவர்கள் நறுமணம் கமழும் பொற்றாமரை மாலைகளைச் சாத்தவும் அவர்கட்கு அருள்வாய். பக்தி செயாதவர்கட்கு ஒளிந்திருப்பாய். ஊற்று நீர் பாயும் கழனிகளில் மலர்களும், கயல்களும் திகழ, அரிந்த கதிர்களிலிருந்து தூற்றும் நல்லானது வானத்திலிருந்து உதிர்வன போன்று வளமுடன் விளங்குவது திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும். அங்கு வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருநாமத்தை ஓத வினை யாவும் நீங்கும்.
4081 நிருத்தன்ஆ றங்கன் நீற்றன்நான் மறையன்
நீலமார் மிடற்றன்நெற் றிக்கண்
ஒருத்தன்மற் றெல்லா வுயிர்கட்கு முயிரா
யுளனிலன் கேடிலி யுமைகோன்
திருத்தமாய் நாளு மாடுநீர்ப் பொய்கை
சிறியவ ரறிவினின் மிக்க
விருத்தரை யடிவீழ்ந் திடம்புகும் வீழி
மிழலையா னெனவினை கெடுமே
3.119.3
சிவபெருமான் திருநடனம் செய்பவர். வேதத்தின் அங்கமாக விளங்குபவர். திருநீறு பூசியுள்ளவர். நால்வேதங்களை அருளிச் செய்து அவ்வேதங்களின் பொருளாய் விளங்குபவர். நீலகண்டத்தர். நெற்றிக் கண்ணுடையவர். ஒப்பற்றவர். எல்லா உயிர்கட்கும் உயிராய் விளங்குபவர். பதிஞானத்தால் உணர்பவர்க்கு உளராவார். பசு ஞானத்தாலும், பாச ஞானத்தாலும் அறிய முற்படுபவர்கட்கு இலராவார். உயிர்களின் தீமையைப் போக்குபவர். உமாதேவியின் கணவர். புனித தீர்த்தத்தால் நாள்தோறும் அபிடேபிக்கப்படுபவர். வயதில் சிறியோர் அறிவு சால் சான்றோரின் திருப்பாதத்தை அட்டாங்க நமஸ்காரமாக வணங்கிப் போற்றச் சீலம் மிக்கவர்கள் வாழும் திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளுபவர். அவருடைய திருநாமத்தை ஓத வினை நீங்கும்.
4082 தாங்கருங் காலந் தவிரவந்திருவர்
தம்மொடுங் கூடினா ரங்கம்
பாங்கினாற் றரித்துப் பண்டுபோ லெல்லாம்
பண்ணிய கண்ணுதற் பரமர்
தேங்கொள்பூங் கமுகு தெங்கிளங் கொடிமாச்
செண்பகம் வண்பலா விலுப்பை
வேங்கைபூ மகிழால் வெயிற்புகா வீழி
மிழலையா னெனவினை கெடுமே
3.119.4
மகாசங்கார காலத்தில் திருமால், பிரமன் ஆகிய இருவரின் எலும்புகளை அழகுற அணிந்து, பின் முன்பு போல் மீண்டும் எல்லாம் படைத்துத் தொழிலாற்றும் நெற்றிக் கண்ணுடையவர் சிவபெருமான். அவர் கமுகு, தென்னை, மா, செண்பகம், பலா, இலுப்பை, வேங்கை, மகிழ், ஆல் முதலியன சேர்ந்த வெயில்புகாத சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுவார். அப்பெருமானுடைய திரு நாமத்தை ஓத வினையாவும் நீங்கும்.
4083 கூசுமா மயானங் கோயில்வா யிற்கட்
குடவயிற் றனசில பூதம்
பூசுமா சாந்தம் பூதிமெல் லோதி
பாதிநற் பொங்கர வரையோன்
வாசமாம் புன்னை மௌவல்செங் கழுநீர்
மலரணைந் தெழுந்தவான் தென்றல்
வீசுமாம் பொழிற்றேன் றுவலைசேர் வீழி
மிழலையா னெனவினை கெடுமே
3.119.5
எவரும் அடைவதற்குக் கூச்சப்படுகின்ற மயானத்தில் பெரிய வயிற்றையுடைய பூதங்கள் சூழ நறுமணம் கமழும் சாந்துபோலத்திருநீறு பூசிப், பார்வதிபாகராய், ஆடுகின்ற பாம்பை இடுப்பில் அணிந்து விளங்குபவர், சிவபெருமான். அவர் நறுமணம் கமழும் புன்னை, முல்லை, செங்கழுநீர் மலர் ஆகிய மணங்கமழும் மலர்களில் கலந்து தென்றல் வீசும் சோலைகளிலிருந்து தேன்துளிகள் சிதறும் திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளுவார். அப் பெருமானின் திருநாமத்தை ஓத வினையாவும் நீங்கும்.
4084 பாதியோர் மாதர் மாலுமோர் பாகர்
பங்கயத் தயனுமோர் பாலர்
ஆதியாய் நடுவா யந்தமாய் நின்ற
வடிகளா ரமரர்கட் கமரர்
போதுசேர் சென்னிப் புரூரவாப் பணிசெய்
பூசுரர் பூமக னனைய
வேதியர் வேதத் தொலியறா வீழி
மிழலையா னெனவினை கெடுமே
3.119.6
இறைவன் உமாதேவியைத் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு விளங்குபவர். திருமாலும், பிரமனையும் தம்பாகமாகக் கொண்டு ஏகபாத திரிமூர்த்தியாகத் திகழ்பவர். அவர் உலகத் தோற்றத்திற்கும், நிலைபெறுதலுக்கும், ஒடுக்கத்திற்கும் நிமித்த காரணராய் விளங்கும் தலைவர். தேவர்கட்குக் கடவுள். மலரணிந்த தலையையுடைய புரூரவச் சக்கரவர்த்தியால் திருப்பணி செய்யப் பெற்றுப் பிரமனையொத்த வேதியர்கள் ஓதுகின்ற வேத ஒலி இடையறாது ஒலிக்கின்ற திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமானின் திருநாமத்தை ஓத வினையாவும் நீங்கும்.
4085 தன்றவம் பெரிய சலந்தர னுடலந்
தடிந்தசக் கரமெனக் கருளென்
றன்றரி வழிபட் டிழிச்சிய விமானத்
திறையவன் பிறையணி சடையன்
நின்றநாள் காலை யிருந்தநாண் மாலை
கிடந்தமண் மேல்வரு கலியை
வென்றவே தியர்கள் விழாவறா வீழி
மிழலையா னெனவினை கெடுமே
3.119.7
சிவபெருமான் திருவருளால் தோன்றிய சக்கரப்படை சலந்தராசுரனை அழித்ததைக் கண்ட திருமால், அத்தகைய சக்கரப்படையைத் தனக்கு அருள வேண்டித் தேவலோகத்திலிருந்து விமானத்தைக் கொண்டு வந்து சிவனைப் பூசித்தார். சிவபெருமான் சந்திரனை அணிந்த சடையையுடையவர். அவர் வீற்றிருந்தருளும் இடமாவது எல்லாக் காலத்திலும் மண்ணுலகத்தின் சேர்க்கையால் உண்டாகும் துன்பத்தை வென்ற அந்தணர்கள் வாழ்கின்ற, திருவிழாக்கள் நீங்காத திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும். அத்திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனுடைய திருநாமத்தை ஓத, வினை யாவும் நீங்கும்.
4086 கடுத்தவா ளரக்கன் கைலையன் றெடுத்த
கரமுரஞ் சிரநெரிந் தலற
அடுத்ததோர் விரலா லஞ்செழுத் துரைக்க
வருளினன் றடமிகு நெடுவாள்
படித்தநான் மறைகேட் டிருந்தபைங் கிளிகள்
பதங்களை யோதப்பா டிருந்த
விடைக்குலம் பயிற்றும் விரிபொழில் வீழி
மிழலையா னெனவினை கெடுமே
3.119.8
கோபமுடைய, வாளேந்தியுள்ள அரக்கனான இராவணன் முன்பு கயிலைமலையைப் பெயர்த்தெடுக்க, அவன் கரமும், சிரமும் நெரிபட்டு அலறும்படி தம் திருப்பாதவிரலை ஊன்றியவர் சிவபெருமான். பின் இராவணன் தன் தவறுணர்ந்து அஞ்செழுத்தை யாழில் மீட்ட நீண்ட வாளை அவனுக்குக் கொடுத்தருளினார். அத்தியயனம் செய்த நான்மறைகளைக் கற்றுணர்ந்த வேதியர்கள் ஓதக்கேட்ட கிளிகள் அப்பதங்களை ஓத, அருகிருந்து கேட்ட பசுக் கூட்டங்களும் அவற்றைக் கேட்கத் தம் செவிகளைப் பழக்கும், விரிந்த சோலைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும். அங்கு வீற்றிருந் தருளும் இறைவனின் திருநாமத்தை ஓத, வினையாவும் கெடும். விடைக்குலம் - வேதம் பயிலும் சிறுவர் குழாமுமாம்.
4087 அளவிட லுற்ற வயனொடு மாலு
மண்டமண் கெண்டியுங் காணா
முளையெரி யாய மூர்த்தியைத் தீர்த்த
முக்கணெம் முதல்வனை முத்தைத்
தளையவிழ் கமலத் தவிசின்மே லன்னந்
தன்னிளம் பெடையொடும் புல்கி
விளைகதிர்க் கவரி வீசவிற் றிருக்கு
மிழலையா னெனவினை கெடுமே
3.119.9
பிரமனும், திருமாலும் முடியையும், அடியையும் தேட முற்பட்டு, அண்டங்கட்கு மேலெல்லாம் பறந்து சென்றும், பூமி மண்ணை இடந்து கீழே பாதாளலோகம் முழுவதும் சென்றும் காண முடியாவண்ணம் நெருப்புப் பிழம்பாய் விளங்கியவர் முக்கண் உடைய முதல்வரான சிவபெருமான். முத்துத் தரும் இதழ் விரிந்த தாமரைச் சிம்மாசனத்தில் அன்னப்பறவையானது தனது பெடையுடன் இருக்க, நெற்கதிர்கள் கவரிவீசுவதைப் போன்று விளங்கும் வயல்களைஉடைய திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளும் பெருமானுடைய திருநாமத்தை ஓத வினை தீரும்.
4088 கஞ்சிப்போ துடையார் கையிற்கோ சாரக்
கலதிகள் கட்டுரை விட்டு
அஞ்சித்தே விரிய வெழுந்தநஞ் சதனை
யுண்டம ரர்க்கமு தருளி
இஞ்சிக்கே கதலிக் கனிவிழக் கமுகின்
குலையொடும் பழம்விழத் தெங்கின்
மிஞ்சுக்கே மஞ்சு சேர்பொழில் வீழி
மிழலையா னெனவினை கெடுமே
3.119.10
கஞ்சியைக் கையில் வாங்கி உண்பவர்களும், ஆடையணியாத் துறவிகளுமான சமணர்கள், உரைக்கும் மொழிகளை ஏற்க வேண்டா. தேவர்கள் அஞ்சும்படி எழுந்த நஞ்சைத் தாம் உண்டு அவர்கட்கு அமுதம் அருளியவர் சிவபெருமான். உயர்ந்த கமுகின் பழக்குலை விழ, அதனால் வாழையின் கனிகள் மதில்மேல் உதிரும். மிக உயர்ந்த தென்னை மரங்களின் உச்சியில் மேகம் படியும். இத்தகைய வளம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமான் திருநாமத்தை ஓத வினையாவும் நீங்கும்.
4089 வேந்தர்வந் திறைஞ்ச வேதியர் வீழி
மிழலையுள் விண்ணிழி விமானத்
தேய்ந்ததன் றேவி யோடுறை கின்ற
வீசனை யெம்பெரு மானைத்
தோய்ந்தநீர்த் தோணி புரத்துறை மறையோன்
றூமொழி ஞானசம் பந்தன்
வாய்ந்தபா மாலை வாய்நவில் வாரை
வானவர் வழிபடு வாரே
3.119.11
இந்திரன் முதலான தேவர்கள் வந்து வழிபட, வேதங்களைக் கற்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விண்ணிழி விமானத்தில் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இறைவனான எங்கள் சிவபெருமானை, நீர்வளம் மிகுந்த தோணிபுரத்தில் அவதரித்த மறைவல்ல தூயமொழி பேசும் ஞானசம்பந்தன், போற்றி உரைத்த இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் வானவர்களால் வணங்கப்படுவார்கள்.
திருச்சிற்றம்பலம்
3.119.திருவீழிமிழலை |
||||||||
by Swathi on 02 Apr 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|