|
||||||||
மூன்றாம் திருமுறை-52 |
||||||||
3.052.திருஆலவாய் - திருவிராகம்
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை.
சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி.
தேவியார் - மீனாட்சியம்மை.
3350 வீடலால வாயிலாய் விழுமியார்க ணின்கழல்
பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே
காடலால வாயிலாய் கபாலிநீள்க டிம்மதில்
கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே 3.052.1
வீடுபேற்றிலன்றி வேறொன்றில் விருப்பம் இல்லாதவராய் மெய்ஞ்ஞானிகள் உம் திருவடிகளைப் போற்றிப்பாட, அவர்தம் வாக்கினிடமாக விளங்குபவரே! அவர்கள் துதித்துப் போற்றுகின்ற பண்புகள் பலவற்றை உடையவரே! சுடுகாட்டைத் தவிர வேறோர் இடத்தை விரும்பி நில்லாதவரே! கபாலி என்னும் பெயரையுடையவராய், மதில் சூழப்பெற்ற நான்மாடக்கூடல் என்னும் திருஆலவாயில் எழுந்தருளியுள்ள பெருமானாரே! நீர் மதுரையம்பதியில் குலாவி விளையாடுவது எம்மால் அறியும் தரத்த தன்றாயுள்ளது.
3351 பட்டிசைந்த வல்குலாள் பாவையாளோர் பாகமா
ஒட்டிசைந்த தன்றியும் முச்சியாளொ ருத்தியாக்
கொட்டிசைந்த வாடலாய் கூடலால வாயிலாய்
எட்டிசைந்த மூர்த்தியா யிருந்தவாறி
தென்னையே
3.052.2
பட்டாடை அணிந்த திருமேனியுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகப் பிரியாவண்ணம் கொண்டதோடு, சடைமுடியின் உச்சியில் கங்கா தேவியையும் தாங்கியவரே! கொட்டு என்னும் பறை முழங்க ஆடுபவரே! கூடல் ஆலவாயில் வீற்றிருந்து அருள்பவரே! அட்டமூர்த்தியாய் விளங்கும் சிவபெருமானே! உம் அருள்தன்மை எம்மால் எடுத்தியம்ப வல்லதோ.
3352 குற்றநீ குணங்கணீ கூடலால வாயிலாய்
சுற்றநீ பிரானுநீ தொடர்ந்திலங்கு சோதிநீ
கற்றநூற் கருத்துநீ யருத்தமின்ப மென்றிவை
முற்றுநீ புகழ்ந்துமுன் னுரைப்பதென்மு கம்மனே 3.052.3
திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே! நீரே உயிர்க்குள் உயிராய் ஒன்றி உடனிருந்து இயக்குகிறீர். ஆதலால் எனது குற்றமும் நீரே; குணமும் நீரே; என் சுற்றமும் தவைவரும் நீரே. என்னுள்ளிருக்கும் அறியாமையாகிய இருளை நீக்கி அறிவொளி தொடர்ந்தொளிரச் செய்யும் சோதி நீரே. பொதுவும், சிறப்புமாகிய வேத, ஆகம நூல்களில் கருத்தும் நீரே. நூல்களில் உட்பொருளை அடியேன் நனிவிளங்கச் செய்பவரும், அவ்விளக்கத்தால் இன்பம் அடையச் செய்பவரும் நீரே. உம் திருமுன் அடியேன் இவ்வாறு உம்மைப் புகழ்வது உண்மையேயன்றி வெறும் புகழ்ச்சியன்று.
3353 முதிருநீர்ச் சடைமுடி முதல்வன்நீ முழங்கழல்
அதிரவீசி யாடுவா யழகன்நீ புயங்கன்நீ
மதுரன்நீ மணாளன்நீ மதுரையால வாயிலாய்
சதுரன்நீ சதுர்முகன் காலமேந்து சம்புவே 3.052.4
மதுரை என வழங்கும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவனே! தூயகங்கையைச் சடைமுடியில் தாங்கிய முதல்வன் நீ. சப்தத்துடன் எரியும் நெருப்பிடையே நின்று நிலமதிர ஆடுபவன்நீ. அழகன் நீ. பாம்பை ஆபரணமாக அணிந்தவன் நீ. வரம்பில் இன்பம் உடையவன் நீ. மணவாளன் நீ. மதுரை எனப்படும் ஆலவாயில் வீற்றிருந்தருளுபவன் நீ. சாமர்த்தியமுடையவன் நீ. பிரமகபாலமேந்திப் பலியேற்றுத் திரியும் சிவபிரான் நீ.
3354 கோலமாய நீண்மதிற் கூடலால வாயிலாய்
பாலனாய தொண்டு செய்து பண்டுமின்று முன்னையே
நீலமாய கண்டனே நின்னையன்றி நித்தலும்
சீலமாய சிந்தையில் தேர்வதில்லை தேவரே 3.052.5
அழகிய நீண்ட மதில்களையுடைய கூடலில் விளங்கும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் பெருமானே! மார்க்கண்டேயர், சண்டேசுரர் போன்ற பாலர்கள் சிவபூசை செய்து பண்டைக் காலத்தும், இக்காலத்தும் வழிபட விளங்கும் நீலகண்டனே. தேவர்கள் உன்னையன்றிப் பிற தெய்வங்களைத் தமது தூயசிந்தையில் கொள்ளாதவராய் வாழ்கின்றனர்.
3355 பொன்றயங் கிலங்கொளிந் நலங்குளிர்ந்த புன்சடை
பின்றயங்க வாடுவாய் பிஞ்ஞகா பிறப்பிலீ
கொன்றையம் முடியினாய் கூடலால வாயிலாய்
நின்றயங்கி யாடலே நினைப்பதே நியமமே 3.052.6
பொன்போல் ஒளிரும் அழகிய சடைமுடி பின்னால் தாழ்ந்து அசைய நடனம் ஆடுபவரே! தலைக்கோலம் உடையவரே! பிறப்பற்றவரே! கொன்றைமாலை சூடிய முடி உடையவரே! நான்மாடக் கூடலில் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே! உம் ஒளிமயமான திருநடனத்தை நினைத்து இன்புற்றிருப்பதே உயிர்கள் உய்தி பெறுதற்குரிய நியமம் ஆகும்.
3356 ஆதியந்த மாயினா யாலவாயி லண்ணலே
சோதியந்த மாயினாய் சோதியுள்ளொர் சோதியாய்
கீதம்வந்த வாய்மையாற் கிளர்தருக்கி னார்க்கலால்
ஓதிவந்த வாய்மையா லுணர்ந்துரைக்க லாகுமே 3.052.7
உலகத் தோற்றத்திற்கும், ஒடுக்கத்திற்கும் நிமித்த காரணராய் விளங்கும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே! பேரொளிப் பிழம்பாக விளங்குபவரே! பெருஞ்சோதிக்குள் சோதியாய் ஒளிர்பவர் நீர். உபதேச வழியாகச் சிவஞானம் பெற்ற பக்குவமுடைய ஆன்மாக்களுக்கு அல்லாமல் ஏனைய அபரஞானமாகிய கல்வி அறிவுடையோர்க்கு உம் அருட்பண்பை உணர்தற்கும், உரைப்பதற்கும் இயலுமோ?
3357 கறையிலங்கு கண்டனே கருத்திலாக் கருங்கடல்
துறையிலங்கை மன்னனைத் தோளடர ஊன்றினாய்
மறையிலங்கு பாடலாய் மதுரையால வாயிலாய்
நிறையிலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே 3.052.8
விடக்கறை விளங்கும் கழுத்தை உடையவரே! கரிய கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னனின் தோள்கள் நொறுங்கும்படி திருக்கயிலைமலையில் காற்பெருவிரலை ஊன்றியவரே! வேதங்களிலுள்ள பாடல்களால் போற்றப்படுபவரே! மதுரையிலுள்ள திருஆலவாயில் வீற்றிருந்தருளுபவரே! மனத்தை ஒரு வழியே நிறுத்தி உம்மை நினைப்பதே உய்தற்குரிய நியமமாகும்.
3358 தாவணவ் விடையினாய் தலைமையாக நாடொறும்
கோவணவ் வுடையினாய் கூடலால வாயிலாய்
தீவணம் மலர்மிசைத் திசைமுகனு மாலுநின்
தூவணம் மளக்கிலார் துளக்கமெய்து வார்களே 3.052.9
தாவிச் செல்லும்இடபத்தை வாகனமாக உடையவரே! தலைமை உடையவராய் நாடொறும் கோவண ஆடையோடு கூடல் ஆலவாயில் வீற்றிருந்து அருள் செய்பவரே! நெருப்புப் போன்று செந்நிறமான தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும், உம் முழுமுதல் தன்மையை அறியாதவர்களாய்க் கலக்கம் உற்றார்கள்.
3359 தேற்றமில் வினைத்தொழிற் றேரருஞ் சமணரும்
போற்றிசைத்து நின்கழல் புகழ்ந்து புண்ணியங்கொளார்
கூற்றுதைத்த தாளினாய் கூடலால வாயிலாய்
நாற்றிசைக்கு மூர்த்தியாகி நின்றதென்ன நன்மையே 3.052.10
தௌவில்லாத செயல்களைச் செய்யும் புத்தரும், சமணரும் உம் திருவடிகளைப் போற்றிப் புகழ்ந்து புண்ணியங்களைத் தேடிக்கொள்ளாதவராயினர். காலனை மார்க்கண்டேயர்க்காக உதைத்த திருவடிகளை உடையவரே! கூடல் ஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே! உலகனைத்திற்கும் தலைவராக விளங்கி உயிர்கட்கு எல்லா நன்மையும் தருபவர் நீவிர் அல்லிரோ?
3360 போயநீர் வளங்கொளும் பொருபுனற் புகலியான்
பாயகேள்வி ஞானசம் பந்தன்நல்ல பண்பினால்
ஆயசொல்லின் மாலைகொண்டு ஆலவாயிலண்ணலைத்
தீயதீர எண்ணுவார்கள் சிந்தையாவர் தேவரே 3.052.11
நீர்வளம் தரும், ஒலிக்கின்ற ஆறு பாய்கின்ற சீகாழியில் அவதரித்த பரந்த கேள்வி ஞானமுடைய ஞானசம்பந்தன் இறைவனுடைய நற்பண்புகளைப் போற்றி அருளிய இச்சொல் மாலையை ஓதித் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இச்சிவ பெருமானை வழிபடுபவர்கள் தீமைகள் நீங்கப்பெற்று நற்சிந்தை யுடைய தேவர்களாவர்.
திருச்சிற்றம்பலம்
3.052.திருஆலவாய் - திருவிராகம் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|