|
||||||||
மூன்றாம் திருமுறை-53 |
||||||||
3.053.திருவானைக்கா - திருவிராகம்
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சம்புகேசுவரர்.
தேவியார் - அகிலாண்டநாயகியம்மை.
3361 வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு
வார்சடைத்
தேனைக்காவி லின்மொழித் தேவிபாக
மாயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக
வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க் கேதுமேத
மில்லையே
3.053.1
வானிலுள்ள இருளைப் போக்கும் வெண்மதியைச் சடையில் தாங்கி, தேன் போன்ற இனிய மொழி பேசும் உமாதேவியைத் தன்திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு, திருஆனைக்காவில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைச் சரணாக வாழ்பவர்கட்குத் தம்மைத் தாமே காத்துக் கொள்ள முடியாமல் பிறதுணை வேண்டும்படி நேரும் பெரிய அபாயம் எதுவும் இல்லை.
3362 சேறுபட்ட தண்வயற் சென்றுசென்று
சேணுலா
வாறுபட்ட நுண்டுறை யானைக்காவி
லண்ணலார்
நீறுபட்ட மேனியார் நிகரில்பாத
மேத்துவார்
வேறுபட்ட சிந்தையார் விண்ணிலெண்ண
வல்லரே
3.053.2
சேறுடைய குளிர்ச்சி பொருந்திய வயல் வளம் பெருகுமாறு, நெடுந்தொலைவு சென்று ஓடிவரும் காவிரி ஆற்றின் துறையில் விளங்கும் திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலாகிய சிவபெருமான், திருவெண்ணீறு பூசிய திருமேனியுடையவர். ஒப்பற்ற அப்பெருமானின் திருவடிகளைப் போற்றுபவர்கள், சிந்தை முதலிய பசுகரணங்கள், பதி கரணங்களாக மாறியவர்களாய், முத்தியின்பம் பெறுவதற்குரிய சிவஞானம் கைகூடப் பெற்றவர்கள் ஆவர்.
3363 தாரமாய மாதரா டானொர்பாக
மாயினான்
ஈரமாய புன்சடை ஏற்றதிங்கள்
சூடினான்
ஆரமாய மார்புடை யானைக்காவி
லண்ணலை
வாரமாய் வணங்குவார் வல்வினைகள்
மாயுமே
3.053.3
தாரமாகிய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர் சிவபெருமான். கங்கையைத் தாங்கிய சடைமுடியில் சந்திரனையும் சூடியவர். சோழ அரசனின் வேண்டுகோளுக்கிணங்க, அவனது தொலைந்த இரத்தின மாலையைத் திருமஞ்சன நீரோடு தம் திருமார்பில் ஏற்றவர். திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலான சிவபெருமானை அன்புடன் வணங்குவார்களின் தீவினைகள் யாவும் நீங்கும்.
3364 விண்ணினண்ணு புல்கிய வீரமாய
மால்விடைச்
சுண்ணவெண்ணீ றாடினான் சூலமேந்து
கையினான்
அண்ணல்கண்ணொர் மூன்றினா னானைக்காவு
கைதொழ
எண்ணும்வண்ணம் வல்லவர்க் கேதமொன்று
மில்லையே
3.053.4
வானில் நண்ணிச்சென்று முப்புரம் எரித்தபோது திருமால் இடபமாகத் தாங்கினான். இறைவன் திருவெண்ணீறு அணிந்தவன். சூலமேந்திய கையினன். மூன்று கண்களையுடைய மூர்த்தியான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவானைக்காவைக் கைதொழ எண்ணும் அன்பர்கட்குத் தீமை எதுவும் இல்லை.
3365 வெய்யபாவங் கைவிட வேண்டுவீர்க
ளாண்டசீர்
மைகொள்கண்டன் வெய்யதீ மாலையாடு
காதலான்
கொய்யவிண்ட நாண்மலர்க் கொன்றைதுன்று
சென்னியெம்
ஐயன்மேய பொய்கைசூ ழானைக்காவு
சேர்மினே
3.053.5
கொடிய பாவமானது விலக வேண்டும் என்று விரும்புகிற அன்பர்களே! தேவர்களைக் காத்து அருள்புரிந்த நஞ்சுண்ட இருண்ட கண்டத்தினனும், வெப்ப மிகுந்த நெருப்பினை ஏந்தி ஆடுகின்ற அன்புடையவனும், அன்றலர்ந்த கொன்றை மலரைக் கொய்து தலையிலணிந்தவனுமான எம் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பொய்கை சூழ்ந்த திருவானைக்கா என்னும் திருத்தலத்தை அடைந்து வழிபடுவீர்களாக.
3366 நாணுமோர்வு சார்வுமுன் நகையுமுட்கு
நன்மையும்
பேணுறாத செல்வமும் பேசநின்ற
பெற்றியான்
ஆணும்பெண்ணு மாகிய வானைக்காவி
லண்ணலார்
காணுங்கண்ணு மூன்றுடைக் கறைகொண்மிடற
னல்லனே
3.053.6
அஞ்ஞானத்தால் ஈசனை அறியாத பிறர் நாணத்தக்க நாணமும், பதியை ஓர்ந்து அறிதலும், அறிந்தபின் சார்ந்திருத்தலும், சார்தலினல் மகிழ்ச்சியும், மனத்தை அடக்கி உள்கித் தியானம் செய்தலுமாகிய நன்மையும் உடையவர்களாய், எவற்றையும் பொருட்படுத்தாத வீரியமும் கொண்ட அடியவர்கள் கொண்டாடிப் பேசத்தக்க தன்மையை உடைய, சிவபெருமான் ஆணும், பெண்ணும் சேர்ந்ததாகிய அர்த்தநாரித் திருக்கோலத்தில் திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலாய் மூன்று கண்களையுடையவராய் விளங்குபவர் அல்லரோ?
3367 கூருமாலை நண்பகற் கூடிவல்ல
தொண்டர்கள்
பேருமூருஞ் செல்வமும் பேசநின்ற
பெற்றியான்
பாரும்விண்ணுங் கைதொழப் பாயுங்கங்கை
செஞ்சடை
ஆரநீரொ டேந்தினா னானைக்காவு
சேர்மினே
3.053.7
காலை, மாலை, நண்பகல் முக்காலங்களிலும் இறைவனுக்குத் தொண்டு செய்யும் அடியார்கள் ஒன்று கூடி, இறைவனின் திருநாம மகிமைகளையும் திருத்தலங்களின் சிறப்புக்களையும், அவன் அருட்செயல்களையும் போற்றிப் பேச விளங்கும் தன்மையன் சிவபெருமான். பூவலகத்தோரும், விண்ணுலகத்தோரும் கைதொழுது வணங்கக் கங்கையைச் செஞ்சடையில் தாங்கியுள்ள சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவானைக்கா என்னும் திருத்தலத்தை அடைந்து வழிபடுவீர்களாக.
3368 பொன்னமல்கு தாமரைப் போதுதாது
வண்டினம்
அன்னமல்கு தண்டுறை யானைக்காவி
லண்ணலைப்
பன்னவல்ல நான்மறை பாடவல்ல
தன்மையோர்
முன்னவல்லர் மொய்கழ றுன்னவல்லர்
விண்ணையே
3.053.8
இலக்குமி வீற்றிருந்தருளும் தாமரை மலரில் வண்டினம் ரீங்காரம் செய்யவும், அன்னப்பறவைகள் வைகும் குளிர்ந்த நீர்நிலைகளின் துறைகளை உடைய திருஆனைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலான சிவபெருமானை நான்கு வேதங்களிலுமுள்ள பாடல்களைப் பாடி, அவன் திருவடிகளைப் போற்றி வணங்குபவர்கள் இப்பூவலகின்கண் குறைவற்ற செல்வராய்த் திகழ்வதோடு மறுமையில் விண்ணுலகை ஆள்வர்.
3369 ஊனொடுண்ட னன்றென ஊனொடுண்டல்
தீதென
ஆனதொண்ட ரன்பினாற் பேசநின்ற
தன்மையான்
வானொடொன்று சூடினான் வாய்மையாக
மன்னிநின்று
ஆனொடஞ்சு மாடினா னானைக்காவு
சேர்மினே
3.053.9
ஊன் உணவு இறைவனுக்குப் படைத்தல் நன்று என்று சுவைமிகுந்த இறைச்சியைப் படைத்த கண்ணப்பநாயனாரின் அன்பிற்கும், ஊன் உணவு இறைவனுக்குப் படைத்தல் அபசாரம் அது தீது என மருண்ட சிவகோசரியார் அன்பிற்கும் கட்டுண்ட தன்மையினனும், பிறைச்சந்திரனைச் சடையில் சூடி, சத்தியப் பொருளாக என்றும் நிலைத்து நின்று, பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்காட்டப் படுகின்றவனுமாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவானைக்கா என்னும் திருத்தலத்தைச் சார்ந்து அவனை வழிபட்டு உய்யுங்கள்.
3370 கையிலுண்ணுங் கையருங் கடுக்கள்தின்
கழுக்களும்
மெய்யைப்போர்க்கும் பொய்யரும் வேதநெறியை
யறிகிலார்
தையல்பாக மாயினான் றழலதுருவத்
தானெங்கள்
ஐயன்மேய பொய்கைசூ ழானைக்காவு
சேர்மினே
3.053.10
கையில் உணவு வாங்கி உண்ணும் சமணரும், கடுக்காய்களைத் தின்னும் புத்தர்களும், மெய்ப்பொருளாம் இறைவனை உணராது பொய்ப்பொருளாம் உலகியலைப் பற்றிப் பேசுபவர்களாய் வேதநெறியை அறியாதவர்கள். எனவே அவர்களைச் சாராது, உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவரும், நெருப்புப் போன்ற சிவந்த திருமேனியை உடையவருமான எங்கள் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பொய்கை சூழ்ந்த திருவானைக்கா என்னும் திருத்தலத்தை அடைந்து அவரை வழிபட்டு உய்யுங்கள்.
3371 ஊழியூழி வையகத் துயிர்கடோற்று
வானொடும்
ஆழியானுங் காண்கிலா வானைக்காவி
லண்ணலைக்
காழிஞான சம்பந்தன் கருதிச்சொன்ன
பத்திவை
வாழியாகக் கற்பவர் வல்வினைகண்
மாயுமே
3.053.11
ஊ0ழிக்காலந்தோறும் உயிர்களுக்குத் தனு, கரண, புவன, போகங்களைப் படைக்கின்ற பிரமனும், திருமாலும் இறைவனின் முடியையும், அடியையும் தேடிச்சென்றும் காண்பதற்கு அரிய திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலான சிவ பெருமானைச் சீகாழிப்பதியில் அவதரித்த ஞானசம்பந்தன் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை மண்ணில் நல்ல வண்ணம் வாழக் கற்று ஓதவல்லவர்களின் கொடியவினையாவும் மாய்ந்தழியும்.
திருச்சிற்றம்பலம்
3.053.திருவானைக்கா - திருவிராகம் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|