|
||||||||
மூன்றாம் திருமுறை-59 |
||||||||
3.059.திருக்குடமூக்கு
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கும்பேசுவரர்.
தேவியார் - மங்களநாயகியம்மை.
3427 அரவிரி கோடனீட லணி காவிரி
யாற்றயலே
மரவிரி போதுமௌவன் மண மல்லிகை
கள்ளவிழும்
குரவிரி சோலைசூழ்ந்த சூழ கன்குட
மூக்கிடமா
இரவிரி திங்கள்சூடி யிருந் தானவ
னெம்மிறையே
3.059.1
பாம்பைப் போலும் தண்டோடு மலர் விரிந்த காந்தட் செடிகள் செழித்திருத்தலால், அழகிய காவிரியாற்றின் பக்கம், மராமரங்கள் விரிந்த மலர்களும், முல்லையும், மணம் வீசும் மல்லிகையும், தேனோடு முறுக்கு உடையும் மலர்களைஉடைய குராமரங்களும் விரிந்த சோலை சூழ்ந்த கும்பகோணத்தினை இடமாகக் கொண்டு குழகனாகிய சிவபெருமான், இரவில் ஒளிரும் சந்திரனைச் சூடி வீற்றிருக்கிறான். அப்பெருமானே எம் இறைவன்.
3428 ஓத்தர வங்களோடு மொலி காவிரி
யார்த்தயலே
பூத்தர வங்களோடும் புகை கொண்டடி
போற்றிநல்ல
கூத்தர வங்களோவாக் குழ கன்குட
மூக்கிடமா
ஏத்தர வங்கள்செய்ய விருந் தானவ
னெம்மிறையே
3.059.2
வேதங்கள் ஓதப்படும் ஒலியோடு, காவிரியாறு பாயும் ஒலியும் சேர்ந்தொலிக்க, பக்கத்திலுள்ள பூஞ்சோலைகளில் மலர்ந்துள்ள பூக்களைக் கொண்டு தூவி, தூபதீபம் காட்டி இறைவனைப் போற்றுவதால் உண்டாகும் ஒலி விளங்க, திருநடனம் புரியும் அழகனாகிய சிவபெருமான், திருக்குட மூக்கினை இடமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றான். எல்லோரும் போற்றி வணங்கும் புகழுடைய அப்பெருமானே யாம் வணங்கும் கடவுளாவான்.
3429 மயில்பெடை புல்கியால மணன் மேன்மட
வன்னமல்கும்
பயில்பெடை வண்டுபண்செய் பழங் காவிரிப்பைம்
பொழில்வாய்க்
குயில்பெடை யோடுபாட லுடை யான்குட
மூக்கிடமா
இயலொடு வானமேத்த விருந் தானவ
னெம்மிறையே
3.059.3
ஆண்மயில் பெண்மயிலைத் தழுவி ஆட, காவிரியாற்றின் கரையிலுள்ள மணலின் மீது ஆண் அன்னம் தன் பெண் அன்னத்தோடு நடைபயில, வண்டுகள் பண்ணிசைக்க, நிறைய பழங்கள் கனிந்துள்ள பசுமையான சோலைகளில் குயிலானது பெடையோடு சேர்ந்து கீதமிசைக்கத் திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் விண்ணோர்கள் வேதாகம முறைப்படி பூசிக்க வீற்றிருந்தருளும் சிவபெருமானே யாம் வணங்கும் கடவுளாவான்.
3430 மிக்கரை தாழவேங்கை யுரி யார்த்துமை
யாள்வெருவ
அக்கர வாமையேன மருப் போடவை
பூண்டழகார்
கொக்கரை யோடுபாட லுடை யான்குட
மூக்கிடமா
எக்கரை யாருமேத்த விருந் தானவ
னெம்மிறையே
3.059.4
சிவபெருமான் புலியின் தோலை உரித்து நன்கு தாழ இடுப்பில் கட்டியவர். உமாதேவி அஞ்சுமாறு எலும்பு, பாம்பு, ஆமையோடு, பன்றியின் கொம்பு ஆகியவற்றை அழகிய ஆபரணமாகப் பூண்டு, கொக்கரை என்னும் வாத்தியம் இசைக்கப் பாடும் சிவபெருமான் திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் எத்தன்மேயோரும் போற்றி வணங்க வீற்றிருந்தருளுகின்றான். அவனே யாம் வணங்கும் கடவுளாவான்.
3431 வடிவுடை வாட்டடங்கண் ணுமை யஞ்சவோர்
வாரணத்தைப்
பொடியணி மேனிமூட வுரி கொண்டவன்
புன்சடையான்
கொடிநெடு மாடமோங்குங் குழ கன்குட
மூக்கிடமா
இடிபடு வானமேத்த விருந் தானவ
னெம்மிறையே
3.059.5
அழகிய உருவமுடைய வாள்போன்ற ஒளி பொருந்திய அகன்ற கண்களையுடைய உமாதேவி அஞ்சுமாறு யானையின் தோலை உரித்து, திருவெண்ணீறணிந்த திருமேனிமீது போர்த்தவனும், சடைமுடியுடையவனும், அழகனும் ஆன சிவபெருமான், கொடிகள் அசைகின்ற ஆகாயத்தைத் தொடும்படி ஓங்கி வளர்ந்துள்ள நீண்ட மாடங்கள் நிறைந்த திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் வானவர்கள் போற்ற வீற்றிருந் தருளுகின்றான். அப்பெருமானே யாம் வணங்கும் கடவுளாவான்.
3432 கழைவளர் கவ்வைமுத்தங் கமழ் காவிரி
யாற்றயலே
தழைவளர் மாவினல்ல பல வின்கனி
கள்தங்கும்
குழைவளர் சோலைசூழ்ந்த சூழ கன்குட
மூக்கிடமா
இழைவளர் மங்கையோடு மிருந் தானவ
னெம்மிறையே
3.059.6
முற்றிய மூங்கில்களிலிருந்து மிகுதியாகக் கிடைக்கும் ஒலிக்கின்ற முத்துக்கள் நிறைந்த காவிரியாற்றின் பக்கத்திலே, தழைகள் மிகுந்த மாங்கனிகளும், பலாவின் கனிகளும் கொத்தாக விளைகின்ற சோலைகள் சூழ்ந்த திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில், அழகான சிவபெருமான், நல்ல ஆபரணங்கள் அணிந்த உமாதேவியோடு வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமானே யாம் வணங்கும் கடவுளாவான்.
3433 மலைமலி மங்கைபாகம் மகிழ்ந் தானெழில்
வையமுய்யச்
சிலைமலி வெங்கணையாற் சிதைத் தான்புர
மூன்றினையும்
குலைமலி தண்பலவின் பழம் வீழ்குட
மூக்கிடமா
இலைமலி சூலமேந்தி யிருந் தானவ
னெம்மிறையே
3.059.7
மலைமகளாகிய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, மகிழ்ந்து விளங்கும் சிவபெருமான் எழில்மிக்க இவ்வுலகம் உய்யுமாறு மேருமலையை வில்லாகக் கொண்டு, அக்கினியைக் கணையாக்கித் தொடுத்து, மூன்று புரங்களையும் சிதைத்தவன். கொத்தாகக் காய்க்கும் பலாக்கனிகள் தாமாகவே கனிந்து வீழும் வளம் நிறைந்த திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் இலைபோன்ற சூலப்படையை ஏந்தி வீற்றிருந்தருளும் சிவபெருமானே யாம் வணங்கும் கடவுளாவான்.
3434 நெடுமுடி பத்துடைய நிகழ்வாளரக்
கன்னுடலைப்
படுமிடர் கண்டயரப் பரு மால்வரைக்
கீழடர்த்தான்
கொடுமட றங்குதெங்கு பழம் வீழ்குட
மூக்கிடமா
இடுமண லெக்கர்சூழ விருந் தானவ
னெம்மிறையே
3.059.8
நீண்ட முடிகள் பத்துடைய வாளுடைய இராவணனின் உடலானது துன்பப்படுமாறு கயிலைமலையின் கீழ் அடர்த்த பெருமானாய், வளைந்த மடல்களையுடைய தென்னை மரங்களிலிருந்து முற்றிய காய்கள் விழும் திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் மணல் திட்டு சூழ வீற்றிருந்தருளும் சிவபெருமானேயாம் வணங்கும் கடவுளாவான்.
3435 ஆரெரி யாழியானு மல ரானும
ளப்பரிய
நீரிரி புன்சடைமே னிரம் பாமதி
சூடிநல்ல
கூரெரி யாகிநீண்ட குழ கன்குட
மூக்கிடமா
ஈருரி கோவணத்தோ டிருந் தானவ
னெம்மிறையே
3.059.9
அக்கினிபோல் ஒளிரும் சக்கராயுதப் படையுடைய திருமாலும், பிரமனும் அளக்கமுடியாதவனாய், கட்டுப்படுத்த முடியாமல் பெருக்கெடுத்த கங்கையைப் புன்சடை மேல் தாங்கி, இளம்பிறைச் சந்திரனைச் சூடி, நல்ல நெருப்புப் பிழம்பு போல் ஓங்கி நின்ற அழகனானசிவபெருமான், திருகுடமூக்கு என்னும் திருத்தலத்தில் தோலும் கோவண ஆடையும் அணிந்து வீற்றிருந்தருளுகின்றான். அவனே யாம் வணங்கும் கடவுள் ஆவான்.
3436 மூடிய சீவரத்தார் முது மட்டையர்
மோட்டமணர்
நாடிய தேவரெல்லா நயந் தேத்திய
நன்னலத்தான்
கூடிய குன்றமெல்லா முடை யான்குட
மூக்கிடமா
ஏடலர் கொன்றைசூடி யிருந்தானவ
னெம்மிறையே
3.059.10
மஞ்சட் காவியுடையணிந்த, இறைவனை உணராத பேதையராகிய புத்தர்களும், இறுமாப்புடைய சமணர்களும், கூறுவன பயனற்றவை. தன்னை நாடித் தேவர்கள் எல்லாம் விரும்பி வழிபட, அவர்கட்கு நல்லதையே அருளும் சிவபெருமான், மன்னுயிரைக் குன்றவைக்கும் தீவினையால் வரும் குற்றங்களை நீக்கி அருள்புரிவான். திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் இதழ் விரிந்த கொன்றைமாலையைச் சூடி வீற்றிருந்தருளும் அப் பெருமானே யாம் வணங்கும் கடவுளாவான்.
3437 வெண்கொடி மாடமோங்கு விறல் வெங்குரு
நன்னகரான்
நண்பொடு நின்றசீரான் றமிழ்ஞானசம்
பந்தனல்ல
தண்குட மூக்கமர்ந்தா னடிசேர்தமிழ்
பத்தும்வல்லார்
விண்புடை மேலுலகம் வியப்பெய்துவர்
வீடௌதே
3.059.11
வெண்கொடி அசைகின்ற மாடங்கள் ஓங்கி விளங்கும் வெங்குரு எனப்படும் சீகாழியில் அனைவரிடத்தும் நட்புக் கொண்டு பழகும் புகழ்மிக்க தமிழ் ஞானசம்பந்தன் நல்ல குளிர்ந்த திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவ பெருமானின் திருவடிகளைப் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் வானிலுள்ள சுவர்க்கலோகத்தை அடைந்து இன்புறுவர். அவர்கட்கு முக்திப்பேறு எளிதாகக் கைகூடும்.
திருச்சிற்றம்பலம்
3.059.திருக்குடமூக்கு |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|