|
||||||||
மூன்றாம் திருமுறை-60 |
||||||||
3.060.திருவக்கரை
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சந்திரசேகரேசுவரர்.
தேவியார் - வடிவாம்பிகையம்மை.
3438 கறையணி மாமிடற்றான் கரி காடரங்
காவுடையான்
பிறையணி கொன்றையினா னொரு பாகமும்
பெண்ணமர்ந்தான்
மறையவன் றன்றலையிற் பலி கொள்பவன்
வக்கரையில்
உறைபவ னெங்கள்பிரா னொலி யார்கழ
லுள்குதுமே
3.060.1
இறைவன் நஞ்சுண்ட கறுத்த கண்டத்தை உடையவன். சுடுகாட்டில் திருநடனம் செய்பவன். பிறைச் சந்திரனையும், கொன்றைமாலையையும் அணிந்தவன். உமாதேவியைத் தன்திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன். பிரமன் தலையைக் கொய்து அதன் ஓட்டில் பிச்சை ஏற்பவன். திருவக்கரை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற எங்கள் தலைவனான சிவபெருமானின் ஒலிக்கின்ற வீரக்கழலணிந்த திருவடிகளைத் தியானிப்பீர்களாக.
3439 பாய்ந்தவன் காலனைமுன் பணைத் தோளியொர்
பாகமதா
ஏய்ந்தவ னெண்ணிறந்தவ் விமை யோர்க
டொழுதிறைஞ்ச
வாய்ந்தவன் முப்புரங்க ளெரி செய்தவன்
வக்கரையில்
தேய்ந்திள வெண்பிறைசேர் சடை யானடி
செப்புதுமே
3.060.2
மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவந்த காலனைக் காலால் சிவபெருமான் உதைத்தவன். பருத்த தோள்களை உடைய உமா தேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன். எண்ணற்ற தேவர்களால் தொழுது போற்றப்படுபவன். முப்புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவன். திருவக்கரை என்னும் திருத்தலத்தில் தேய்ந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனைச் சடையில் சூடி வீற்றிருந்தருளும் அச்சிவபெருமானின் திருவடிகளை வணங்கிப் போற்றுவோமாக!
3440 சந்திர சேகரனே யரு ளாயென்று
தண்விசும்பில்
இந்திர னும்முதலா விமை யோர்க
டொழுதிறைஞ்ச
அந்தர மூவெயிலும் மன லாய்விழ
வோரம்பினால்
மந்தர மேருவில்லா வளைத் தானிடம்
வக்கரையே
3.060.3
“சந்திரனைச் சடைமுடியில் சூடியுள்ள சிவபெருமானே! அருள்புரிவீராக” என்று குளிர்ந்த விண்ணுலகத்தில் விளங்கும் இந்திரன் முதலான தேவர்கள் தொழுது போற்ற, அந்தரத்தில் திரிந்து கேடுகளை விளைவித்த மூன்று கோட்டைகளும் அக்கினியாகிய கணையினால் எரிந்து சாம்பலாகுமாறு மந்தர மேருமலையை வில்லாக வளைத்த சிவபெருமான் வீற்றிருந்தருளும்
3441 நெய்யணி சூலமொடு நிறை வெண்மழு
வும்மரவும்
கையணி கொள்கையினான் கனன் மேவிய
வாடலினான்
மெய்யணி வெண்பொடியான் விரி கோவண
வாடையின்மேல்
மையணி மாமிடற்றா னுறை யும்மிடம்
வக்கரையே
3.060.4
நெய் தடவப்பட்ட சூலத்தையும், வெண்ணிற மழுவையும் படைக்கலனாக ஏந்தி, பாம்பைக் கையில் ஆபரணமாகப் பூண்டு, நெருப்பேந்தித் திருநடனம் செய்பவன் சிவபெருமான். அவன் தன் திருமேனியில் திருவெண்ணீற்றினைப் பூசியவன். விரித்து ஓதப்பெறும் வேதங்களைக் கோவணமாக அணிந்தவன். மை நிறம் பெற்ற கரிய கண்டத்தையுடைய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும்.
3442 ஏனவெண் கொம்பினொடும் மிள வாமையும்
பூண்டுகந்து
கூனிள வெண்பிறையுங் குளிர் மத்தமுஞ்
சூடிநல்ல
இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும்.
மானன மென்விழியா ளொடும் வக்கரை மேவியவன்
தானவர் முப்புரங்க ளெரி செய்த
தலைமகனே
3.060.5
பன்றியின் கொம்பும், ஆமையின் ஓடும் அணிகலனாகக் கொண்டு, வளைந்த பிறைச்சந்திரனையும், குளிர்ந்த ஊமத்த மலரையும் சூடி, நல்ல மான்போன்ற மென்மையான விழிகளையுடைய உமாதேவியோடு திருவக்கரை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் பகையசுரர்களின் முப்புரங்களை எரியுண்ணும்படி செய்த முதல்வன் ஆவான்.
3443 கார்மலி கொன்றையொடுங் கதிர் மத்தமும்
வாளரவும்
நீர்மலி யுஞ்சடைமே னிரம் பாமதி
சூடிநல்ல
வார்மலி மென்முலையா ளொடும் வக்கரை
மேவியவன்
பார்மலி வெண்டலையிற் பலி கொண்டுழல்
பான்மையனே
3.060.6
கார்காலத்தில் மிகுதியாக மலரும் கொன்றை மலரும், ஊமத்த மலரும், ஒளி பொருந்திய பாம்பும், கங்கையும் சடைமுடியில் திகழ, கலைநிரம்பா பிறைச்சந்திரனைச் சூடி, நல்ல கச்சணிந்த மென்மையான முலைகளையுடைய உமாதேவியோடு திருவக்கரை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் சிவபெருமான். அப்பெருமான் இப்பூவுலகில் வெண்ணிறப்பிரம கபாலத்தில் பிச்சையேற்றுத் திரியும் தன்மையன்.
3444 கானண வும்மறிமா னொரு கையதோர்
கைமழுவாள்
தேனண வுங்குழலா ளுமை சேர்திரு
மேனியனான்
வானண வும்பொழில்சூழ் திரு வக்கரை
மேவியவன்
ஊனண வுந்தலையிற் பலி கொண்டுழ
லுத்தமனே
3.060.7
காட்டில் உலவும் மானை ஒரு கையில் ஏந்தி, மழுவாளை மற்றொரு கையிலேந்தியவன் சிவபெருமான். வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன். வானளாவிய சோலைகள் சூழ்ந்த திருவக்கரை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் பிரமனின் மண்டையோட்டை ஏந்திப் பிச்சை எடுத்துத் திரியும் உத்தமனாவான்.
3445 இலங்கையர் மன்னனாகி யெழில் பெற்ற
விராவணனைக்
கலங்கவொர் கால்விரலாற் கதிர் பொன்முடி
பத்தலற
நலங்கெழு சிந்தையனா யருள் பெற்றலு
நன்களித்த
வலங்கெழு மூவிலையே லுடை யானிடம்
வக்கரையே
3.060.8
இலங்கை மன்னனான அழகிய இராவணன் கலங்குமாறு, சிவபெருமான் தன் காற்பெருவிரலை ஊன்றி, ஒளி வீசுகின்ற பொன்னாலான திருமுடிகளணிந்த அவன் தலைகள் பத்தும் அலறுமாறு செய்தான். பின் இராவணன் செருக்கு நீங்கி, நல்ல சிந்தனையோடு இறைவனைப் போற்றிசைக்க, திருவருளால் இறைவன் அவனுக்கு வீரவாளும், நீண்ட வாழ்நாளும் கொடுத்து அருள் புரிந்தான். அத்தகைய பெருமான் வலக்கையில் மூவிலைவேல் ஏந்தி வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும்.
3446 காமனை யீடழித்திட் டவன் காதலி
சென்றிரப்பச்
சேமமே யுன்றனக்கென்றருள் செய்தவன்
றேவர்பிரான்
சாமவெண் டாமரைமே லய னுந்தர
ணியளந்த
வாமன னும்மறியா வகை யானிடம்
வக்கரையே
3.060.9
மன்மதனுடைய அழகிய வலிய தேகத்தை எரித்துச் சாம்பலாக்கிப் பின்னர் அவன் மனைவி இரதி இரந்து வேண்டிப் பிரார்த்திக்கச் சிவபெருமான் மன்மதனை உயிர்ப்பித்து அவள் கண்ணுக்கு மட்டும் புலப்படும்படி அருள்புரிந்தான். வெண்டாமரையில் வீற்றிருந்து சாமகானம் பாடுகின்ற பிரமனும், உலகையளந்த வாமனனான திருமாலும் அறியாவண்ணம் நீண்ட சோதியாக நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும்.
3447 மூடிய சீவரத்தர் முதிர் பிண்டிய
ரென்றிவர்கள்
தேடிய தேவர்தம்மா லிறைஞ் சப்படுந்
தேவர்பிரான்
பாடிய நான்மறையான் பலிக் கென்றுபல்
வீதிதொறும்
வாடிய வெண்டலைகொண் டுழல் வானிடம்
வக்கரையே
3.060.10
காவியாடை போர்த்திய புத்தர்களும், அசோக மரத்தை வணங்கும் சமணர்களும், தேடுகின்ற தேவர்களால் வணங்கப் படுகின்ற தேவர்கட்கெல்லாம் தலைவனான சிவபெருமான் நான்மறைகளை அருளிச்செய்து, பல வீதிகள்தோறும் சென்று உலர்ந்த பிரம கபாலத்தை ஏந்திப் பிச்சையேற்றுத் திரிவான். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும்.
3448 தண்புன லும்மரவுஞ் சடை மேலுடை
யான்பிறைதோய்
வண்பொழில் சூழ்ந்தழகா ரிறை வன்னுறை
வக்கரையைச்
சண்பையர் தந்தலைவன் றமிழ் ஞானசம்
பந்தன்சொன்ன
பண்புனை பாடல்வல்லா ரவர் தம்வினை
பற்றறுமே
3.060.11
குளிர்ந்த கங்கையும், பாம்பும் சடைமுடியில் அணிந்த அழகனான சிவபெருமான், உறையும் சந்திரனைத் தொடும் படி ஓங்கி வளர்ந்துள்ள செழுமைவாய்ந்த சோலைகள் சூழ்ந்த திருவக்கரை என்னும் திருத்தலத்தைப் போற்றி, சண்பை நகர் எனப்படும் சீகாழியில் சிவம் பெருக்க அவதரித்த தலைவனான தமிழ் ஞான சம்பந்தன், அருளிய பண்ணோடு கூடிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் வினையிலிருந்து நீங்கப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
3.060.திருவக்கரை |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|