|
||||||||
மூன்றாம் திருமுறை-61 |
||||||||
3.061.திருவெண்டுறை
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வெண்டுறைநாதேசுவரர்.
தேவியார் - வேனெடுங்கண்ணியம்மை.
3449 ஆதிய னாதிரையன் னன லாடிய
வாரழகன்
பாதியொர் மாதினொடும் பயி லும்பர
மாபரமன்
போதிய லும்முடிமேற் புன லோடர
வம்புனைந்த
வேதியன் மாதிமையால் விரும் பும்மிடம்
வெண்டுறையே
3.061.1
சிவபெருமான் ஆதிமூர்த்தியானவர். திருவாதிரை என்னும் நட்சத்திரத்திற்கு உரியவர். நெருப்பைக் கையிலேந்தித் திருநடனம் புரியும் பேரழகர். தம் திருமேனியின் ஒரு பாகமாக உமாதேவியை ஏற்று மேலான பொருள்கள் எவற்றினும் மிக மேலான பொருளாயிருப்பவர். கொன்றை முதலிய மலர்களை அணிந்த முடிமேல், கங்கையையும் பாம்பையும் அணிந்தவராய், வேதங்களை அருளிச் செய்தவர் சிவபெருமான் ஆவார். அப்பெருமானார் மிக்க அன்புடன் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்பதாகும்.
3450 காலனை யோருதையில் லுயிர் வீடுசெய்
வார்கழலான்
பாலொடு நெய்தயிரும் பயின் றாடிய
பண்டரங்கன்
மாலை மதியொடுநீ ரர வம்புனை
வார்சடையான்
வேலன கண்ணியொடும் விரும் பும்மிடம்
வெண்டுறையே
3.061.2
மார்க்கண்டேயர் உயிரைக் கவரவந்த காலனைக் காலால் உதைத்து உயிர்விடும்படி செய்த சிவபெருமான் வாரால் கட்டிய வீரக்கழலையணிந்தவன். பால், நெய், தயிர் முதலியவற்றால் திருமுழுக்காட்டப்பட்டுப் பண்டரங்கம் என்னும் திருக்கூத்துப் புரிந்தவன். மாலை நேர சந்திரனொடு, கங்கை, பாம்பு இவற்றை அணிந்த விரிந்த சடையுடையவன். வேல்போன்ற கண்களையுடைய உமாதேவியோடு அப்பெருமான் வீற்றிருந்தருளுமிடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும்.
3451 படைநவில் வெண்மழுவான் பல பூதப்
படையுடையான்
கடைநவின் மும்மதிலும் மெரி யூட்டிய
கண்ணுதலான்
உடைநவி லும்புலித்தோ லுடை யாடையி
னான்கடிய
விடைநவி லுங்கொடியான் விரும் பும்மிடம்
வெண்டுறையே
3.061.3
சிவபெருமான் தூய மழுப்படை உடையவர். பலவகையான பூதகணங்களைப் படைவீரர்களாகக் கொண்டுள்ளவர். பாவங்களைச் செய்து வந்த மூன்று மதில்களையும் எரியுண்ணும்படி செய்த நெற்றிக் கண்ணையுடையவர். புலித்தோலாடை அணிந்தவர். விரைந்து செல்லக்கூடிய ஆற்றல் பொருந்திய இடபத்தைக் கொடியாக உடைய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும். அத்திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள்.
3452 பண்ணமர் வீணையினான் பர விப்பணி
தொண்டர்கடம்
எண்ணமர் சிந்தையினா னிமை யோர்க்கு
மறிவரியான்
பெண்ணமர் கூறுடையான் பிர மன்றலை
யிற்பலியான்
விண்ணவர் தம்பெருமான் விரும் பும்மிடம்
வெண்டுறையே
3.061.4
சிவபெருமான் வீணையிலே பண்ணோடு கூடிய பாடலை மீட்டுபவர். தம்மைப் போற்றி வணங்குகின்ற தொண்டர்களின் சிந்தையில் எழுந்தருளியிருப்பவர். தேவர்களால் அறிவதற்கு அரியவர். உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர். பிரம கபாலம் ஏந்திப் பிச்சையேற்றவர். தேவர்களுக்கெல்லாம் தலைவராக விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும்.
3453 பாரிய லும்பலியான் படி யார்க்கு
மறிவரியான்
சீரிய லும்மலையா ளொரு பாகமும்
சேரவைத்தான்
போரிய லும்புரமூன் றுடன் பொன்மலை
யேசிலையா
வீரிய நின்றுசெய்தான் விரும் பும்மிடம்
வெண்டுறையே
3.061.5
சிவபெருமான் உலகத்தார் செய்யும் பூசைகளைத் தான் ஏற்பவன். தன் தன்மையை உலக மாந்தர்களின் சிற்றறிவால் அறிவதற்கு அரியவனாய் விளங்குபவன். புகழ்மிக்க உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன். போர் செய்யும் தன்மையுடைய முப்புரங்களுடன் பொன்மயமான மேருமலையே வில்லாகக் கொண்டு தன் வலிமையைக் காட்டிப் போர் செய்தவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும்.
3454 ஊழிக ளாயுலகா யொரு வர்க்கு
முணர்வரியான்
போழிள வெண்மதியும் புன லும்மணி
புன்சடையான்
யாழின் மொழியுமையாள் வெரு வவ்வெழில்
வெண்மருப்பின்
வேழ முரித்தபிரான் விரும் பும்மிடம்
வெண்டுறையே
3.061.6
சிவபெருமான் ஊழிக்காலங்கள்தோறும் உலகப்பொருட்களுள் கலப்பால் ஒன்றாய் விளங்கினும், ஒருவர்க்கும் உணர்வதற்கு அரியவனாய் விளங்குகின்றான். பிளவுபட்ட வெண்ணிறச் சந்திரனையும், கங்கையையும் அணிந்த சடையுடையவன். யாழ் போன்று இனிமையான மொழி பேசுகின்ற உமாதேவி அஞ்சும்படி அழகிய வெண் தந்தமுடைய யானையின் தோலை உரித்தவன். அப்பெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும்.
3455 கன்றிய காலனையும் முரு ளக்கனல்
வாயலறிப்
பொன்றமு னின்றபிரான் பொடி யாடிய
மேனியினான்
சென்றிமை யோர்பரவுந் திகழ் சேவடி
யான்புலன்கள்
வென்றவ னெம்மிறைவன் விரும் பும்மிடம்
வெண்டுறையே
3.061.7
மார்க்கண்டேயரின் உயிரைக் கவரச் சினந்து வந்த காலன் அலறி விழுமாறு காலால் உதைத்து அழித்தவன். திருவெண்ணீற்றினைத் திருமேனியில் பூசியவன். தேவர்களெல்லாம் சென்று போற்றி வணங்கும் செம்மையான திருவடிகளை உடையவன். ஞானிகள் புலன்களை வெல்லும்படி செய்பவன். எம் தலைவனான அச்சிவ பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும்.
3456 கரமிரு பத்தினாலுங் கடு வன்சின
மாயெடுத்த
சிரமொரு பத்துமுடை யரக் கன்வலி
செற்றுகந்தான்
பரவவல் லார்வினைக ளறுப் பானொரு
பாகமும்பெண்
விரவிய வேடத்தினான் விரும் பும்மிடம்
வெண்டுறையே
3.061.8
பத்துத் தலைகளையுடைய அரக்கனான இராவணன், தன் இருபது கரங்களினாலும் கடும் கோபத்துடன் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க அவனது வலிமையை சிவபெருமான் அழித்தான். அவன் தன்னைப் போற்றி வழிபடும் பக்தர்களின் வினைகளை அறுப்பவன். தன் திருமேனியின் ஒரு பாகமாக உமாதேவியைக் கொண்ட கோலத்துடன் விளங்கும்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும்.
3457 கோல மலரயனுங் குளிர் கொண்ட
னிறத்தவனும்
சீல மறிவரிதாய்த் திகழ்ந் தோங்கிய
செந்தழலான்
மூலம தாகிநின்றான் முதிர் புன்சடை
வெண்பிறையான்
வேலை விடமிடற்றான் விரும் பும்மிடம்
வெண்டுறையே
3.061.9
அழகிய தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரமனும், குளிர்ந்த மழைநீர் பொழியும் மேகம் போன்று கருநிறமுடைய திருமாலும், தனது தன்மையை அறிதற்கு அரியவனாய்ச் சிவந்த நெருப்பு மலைபோல் ஓங்கி நின்றவன் சிவபெருமான். அவன் எல்லாவற்றுக்கும் மூலப்பொருளாக விளங்கி நின்றான். முதிர்ந்த சடையில் வெண்ணிறப் பிறைச்சந்திரனை அணிந்தவன். கடலில் தோன்றிய விடத்தைக் கண்டத்தில் அடக்கிய நீலகண்டனான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .
3458 நக்குரு வாயவருந் துவ ராடை
நயந்துடையாம்
பொக்கர்க டம்முரைகள் ளவை பொய்யென
வெம்மிறைவன்
திக்கு நிறைபுகழார் தரு தேவர்பி
ரான்கனகம்
மிக்குயர் சோதியவன் விரும் பும்மிடம்
வெண்டுறையே
3.061.10
ஆடையணியா உடம்புடைய சமணர்களும், மஞ்சட் காவியாடை அணிந்த புத்தர்களும் மெய்ப்பொருளாம் இறைவனைப் பற்றி ஏதும் கூறாது, தோன்றி நின்று அழியும் தன்மையுடைய உலகப் பொருள்கள் பற்றிக் கூறும் உரைகளைப் பொருளெனக் கொள்ளற்க. எம் தலைவனான சிவபெருமான் எல்லாத் திக்குகளிலும் நிறைந்து புகழுடன் விளங்குபவன். தேவர்கட்கெல்லாம் தலைவன். பொன் போன்று மிக்குயர்ந்த சோதியாய் விளங்குபவனான அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும்.
3459 திண்ணம ரும்புரிசைத் திரு வெண்டுறை
மேயவனைத்
தண்ணம ரும்பொழில்சூழ் தரு சண்பையர்
தந்தலைவன்
எண்ணமர் பல்கலையா னிசை ஞானசம்
பந்தன்சொன்ன
பண்ணமர் பாடல்வல்லார் வினை யாயின
பற்றறுமே
3.061.11
உறுதியான மதில்களையுடைய திருவெண்டுறை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைப் போற்றி, குளிர்ச்சி பொருந்திய சோலைகள் சூழ்ந்த சண்பை எனப்படும் சீகாழியில் அவதரித்த தலைவனான, பலகலைகளில் வல்ல ஞானசம்பந்தன் அருளிய இப்பண்ணோடு கூடிய திருப்பதிகத்தை ஓத வல்லவர்களின் வினையாவும் நீங்கும்.
திருச்சிற்றம்பலம்
3.061.திருவெண்டுறை |
||||||||
by Swathi on 02 Apr 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|