|
||||||||
மூன்றாம் திருமுறை-68 |
||||||||
3.068.திருக்கயிலாயம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் இமயமலையிலுள்ளது.
சுவாமிபெயர் - கயிலாயநாதர்.
தேவியார் - பார்வதியம்மை.
3526 வாளவரி கோளபுலி கீளதுரி
தாளின்மிசை நாளுமகிழ்வர்
ஆளுமவர் வேளநகர் போளயில
கோளகளி றாளிவரவில்
தோளமரர் தாளமதர் கூளியெழ
மீளமிளிர் தூளிவளர்பொன்
காளமுகின் மூளுமிருள் கீளவிரி
தாளகயி லாயமலையே
3.068.1
சிவபெருமான் ஒளிபொருந்திய வரிகளையுடைய புலியின் தோலை உடுத்தவர். அது பாதத்தில் பொருந்த எக்காலத்திலும் ஆனந்தமாய் இருப்பவர். அடியவர்களை ஆட்கொள்பவர். எதிரிட்ட விலங்குகளைக் கிழிக்கும் கூரிய பற்களை யுடைய திரண்ட வடிவுடைய யானையை அடக்கியாண்டவர். சிறந்த வில்லினை ஏந்திய தோளர். கூளிகள் தாளமிட நடனம் புரிபவர். திருவெண்ணீற்றினை அணிந்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் கயிலாய மலையானது கரிய மேகங்களால் மூண்ட இருட்டை ஓட்டும் வெண்பொன்னாகிய ஒளியை விரிக்கும் அடிவாரம் உடையதாகும்.
3527 புற்றரவு பற்றியகை நெற்றியது
மற்றொருக ணொற்றைவிடையன்
செற்றதெயி லுற்றதுமை யற்றவர்க
ணற்றுணைவ னுற்றநகர்தான்
சுற்றுமணி பெற்றதொளி செற்றமொடு
குற்றமில தெற்றெனவினாய்க்
கற்றவர்கள் சொற்றொகையின் முற்றுமொளி
பெற்றகயி லாயமலையே
3.068.2
சிவபெருமான் புற்றில் வாழும் பாம்பைப் பற்றிய கையை உடையவர். நெற்றியில் ஒரு கண்ணுடையவர். ஒற்றை இடபத்தை உடையவர். முப்புரத்தை எரித்தவர். உமாதேவியை ஒரு பாகமாக உடையவர். உலகப் பற்றை நீக்கிய அடியவர்கட்கு நல்ல துணையாக விளங்குபவர். அத்தகைய பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது. மலையிற் பிறக்கும் மணிகள் ஒளியிழக்குமாறு தன்னொளி மிக்க கயிலாய மலையாகும். கற்றவர்கள் போற்றித் துதிப்பதால் ஞான ஒளி பெற்ற சிறப்புடையது இக்கயிலாய மலையாகும்.
3528 சிங்கவரை மங்கையர்க டங்களன
செங்கைநிறை கொங்குமலர் தூய்
எங்கள் வினை சங்கையவை யிங்ககல
வங்கமொழி யெங்குமுளவாய்த்
திங்களிரு ணொங்கவொளி விங்கிமிளிர்
தொங்கலொடு தங்கவயலே
கங்கையொடு பொங்குசடை யெங்களிறை
தங்குகயி லாயமலையே
3.068.3
சிங்கங்கள் வாழ்கின்ற மலைகளிலுள்ள வித்தியாதர மகளிர் தங்கள் சிவந்த கைகளால் தேந்துளிக்கும், நறுமணம் கமழும் மலர்களைத் தூவிப் போற்றி. “எங்கள் வினைகளும், துன்பங்களும் அகலுமாறு அருள்புரிவீராக” என்று அங்கமாய் மொழியும் தோத்திரங்கள் எங்கும் ஒலிக்க, சந்திரனிடத்துள்ள குறையைப் போக்கி ஒளிமிகும்படி செய்து, மாலையோடு பக்கத்திலே கங்கையையும் மிகுந்த சடையிலே தாங்கி எங்கள் இறைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருக்கயிலாய மலையாகும்.
3529 முடியசடை பிடியதொரு வடியமழு
வுடையர்செடி யுடையதலையில்
வெடியவினை கொடியர்கெட விடுசில்பலி
நொடியமகி ழடிகளிடமாம்
கொடியகுர லுடையவிடை கடியதுடி
யடியினொடு மிடியினதிரக்
கடியகுர னெடியமுகின் மடியவத
ரடிகொள்கயி லாயமலையே
3.068.4
சிவபெருமான் தலையில் சடைமுடியையும், கையில் கூரிய மழுவையும் உடையவர். வெறுக்கத்தக்க கொலைத் தொழிலை உடைய அசுரர்களை அழித்தவர். பிச்சையேற்றுத் திரியும் அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் இடபத்தின் கனத்த குரலும், யானையின் பிளிறலும் இணைந்து மிகுந்த ஓசையுடன், மேகங்களின் இடிமுழக்கத்தை அடக்கி அடிவாரம்வரை செல்லும் திருக்கயிலாயமலையாகும்.
3530 குடங்கையி னுடங்கெரி தொடர்ந்தெழ
விடங்கிளர் படங்கொளரவம்
மடங்கொளி படர்ந்திட நடந்தரு
விடங்கன திடந்தண் முகில்போய்த்
தடங்கட றொடர்ந்துட னுடங்குவ
விடங்கொளமி டைந்தகுரலால்
கடுங்கலின் முடங்களை நுடங்கர
வொடுங்குகயி லாயமலையே
3.068.5
உள்ளங்கையில் நெருப்பானது எரிய, படம் கொண்டு ஆடுகின்ற பாம்பானது ஒளிர்ந்து திருமேனியில் படர, நடனம் புரியும் பேரழகரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, மேகங்கள் கடல்நீரை முகந்து, மேலே சென்று எல்லா இடங்களிலும் பரவி, இடிமுழக்கத்துடன் மழை பொழிய, அந்த இடியோசை கேட்ட மெலிந்த நாகம் வளைந்த புற்றிலே பதுங்குகின்ற திருக்கயிலாய மலையாகும்.
3531 ஏதமில பூதமொடு கோதைதுணை
யாதிமுதல் வேதவிகிர்தன்
கீதமொடு நீதிபல வோதிமற
வாதுபயி னாதனகர்தான்
தாதுபொதி போதுவிட வூதுசிறை
மீதுதுளி கூதனலியக்
காதன்மிகு சோதிகிளர் மாதுபயில்
கோதுகயி லாயமலையே
3.068.6
குற்றமில்லாத பூதகணங்கள் சூழ்ந்திருக்க, உமா தேவியைத் துணையாகக் கொண்டு, ஆதிமூர்த்தியாகிய சிவபெருமான், வேதங்களை இசையோடு பாடியருளி, அதன் பொருளையும் விரித்து, நீதிக்கருத்துக்கள் பலவற்றையும் ஓதியவன். தேவர்களாலும், முனிவர்களாலும், அடியவர்களாலும் நாள்தோறும் மறவாது வணங்கப்படும் தலைவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, மகரந்தப்பொடிகளைத் தன்னுள் அடக்கிய அரும்பு மலர, தேனை ஊதி உறிஞ்சிய சிறகுகளையுடைய வண்டுகள் தம்மேல் சிதறிய தேன்துளிகளால் குளிர் வருத்த, அன்புமிக, ஒளிர்கின்ற, அழகிய குயில்கள் தளிர்களைக் கோதும் திருக்கயிலாய மலையாகும்.
3532 சென்றுபல வென்றுலவு புன்றலையர்
துன்றலொடு மொன்றியுடனே
நின்றமர ரென்றுமிறை வன்றனடி
சென்றுபணி கின்றநகர்தான்
துன்றுமலர் பொன்றிகழ்செய் கொன்றைவிரை
தென்றலொடு சென்றுகமழக்
கன்றுபிடி துன்றுகளி றென்னிவைமுன்
னின்றகயி லாயமலையே
3.068.7
நன்மக்கள் ஐம்புலன்களையும் வென்றவர்களாய் குறுமயிர் பொருந்திய தலைகளையுடைய பூதகணங்களோடு சேர்ந்து, தேவர்களும் உடன்நிற்க எக்காலத்தும் இறைவனின் திருவடிகளை வணங்குகின்ற நகர், கொத்தாக மலரும் பொன்போல் விளங்கும் கொன்றை மலர்களின் நறுமணம் தென்றற்காற்றோடு பரவ, இள யானைக்கன்றுகளும், பெண் யானைகளும், ஆண் யானைகளும் மலையின் முற்பக்கங்களில் உலவுகின்ற திருக்கயிலாயமலையாகும்.
3533 மருப்பிடை நெருப்பெழு தருக்கொடு
செருச்செய்த பருத்தகளிறின்
பொருப்பிடை விருப்புற விருக்கையை
யொருக்குட னரக்னுணரா
தொருத்தியை வெருக்குற வெருட்டலு
நெருக்கென நிருத்தவிரலால்
கருத்தில வொருத்தனை யெருத்திற
நெரித்தகயி லாயமலையே
3.068.8
தந்தத்தில் நெருப்புப்பொறி பறக்க, மலையோடு கர்வத்துடன் போர்செய்த பருத்த யானையைப் போல, கயிலை மலையில் சிவபெருமான் வீற்றிருத்தலைப் பொருட்படுத்தாது, இராவணன் அதனைப் பெயர்க்க முயல, ஒப்பற்ற உமாதேவி அஞ்சவும், சிவபெருமான் நடனம்புரியும் தன் காற்பெருவிரலை ஊன்றி அறிவற்ற இராவணனின் கழுத்து முறியும்படி செய்த கயிலாயமலையே சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாகும்.
3534 பரியதிரை யெரியபுனல் வரியபுலி
யுரியதுடை பரிசையுடையான்
வரியவளை யரியகணி யுருவினொடு
புரிவினவர் பிரிவினகர்தான்
பெரியவெரி யுருவமது தெரியவுரு
பரிவுதரு மருமையதனால்
கரியவனு மரியமறை புரியவனு
மருவுகயி லாயமலையே
3.068.9
சிவபெருமான் நெருப்பையும், பெரிய அலைகளையுடைய கங்கையையும் கொண்டவர். வரிகளையுடைய புலித்தோலை ஆடையாக அணிந்தவர். கீற்றுக்களையுடைய வளையல்களை அணிந்த செவ்வரி படர்ந்த கண்களையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு பிரிவில்லாது வீற்றிருந்தருளும் இடமாவது, சிவபெருமான் பெரிய சோதிப்பிழம்பாய் நிற்க அதன் அடியையும், முடியையும் தேடத்தொடங்கிக் காண்பதற்கரியதாய் விளங்கியதால் நீலநிறத் திருமாலும், அருமறைகள் வல்ல பிரமனும் தவறுணர்ந்து மன்னிப்பு வேண்டும் பொருட்டுப் பொருந்திய திருக்கயிலாய மலையாகும்.
3535 அண்டர்தொழு சண்டி பணி கண்டடிமை
கொண்டவிறை துண்டமதியோ
டிண்டைபுனை வுண்டசடை முண்டதர
சண்டவிருள் கண்டரிடமாம்
குண்டமண வண்டரவர் மண்டைகையி
லுண்டுளறி மிண்டுசமயம்
கண்டவர்கள் கொண்டவர்கள் பண்டுமறி
யாதகயி லாயமலையே
3.068.10
தேவர்களும் தொழுது போற்றும் சண்டேசுவர நாயனாரின் சிவவழிபாட்டைக் கண்டு மகிழ்ந்து ஆட்கொண்டவர் சிவபெருமான். பிறைச்சந்திரனை இண்டைமாலையால் அலங்கரிக்கப்பட்ட சடைமுடியில் தரித்தும், மண்டையோட்டை மாலையாக அணிந்தும், கடிய இருள் போன்ற கழுத்தையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், குண்டான சமணர்களும், கையிலேந்திய மண்டையில் உணவு உண்டு திரியும் புத்தர்களும், அச் சமயங்களைக் கண்டவர்களும், அநுட்டிப்போர்களும் முன்பு அறியாத திருக்கயிலாய மலையாகும்.
3536 அந்தண்வரை வந்தபுன றந்ததிரை
சந்தனமொ டுந்தியகிலும்
கந்தமலர் கொந்தினொடு மந்திபல
சிந்துகயி லாயமலைமேல்
எந்தையடி வந்தணுகு சந்தமொடு
செந்தமிழி சைந்தபுகலிப்
பந்தனுரை சிந்தைசெய வந்தவினை
நைந்துபர லோகமௌதே
3.068.11
அழகிய, குளிர்ச்சி பொருந்திய மலையிலிருந்து விழும் நீரின் அலைகள் சந்தனம், அகில் இவற்றை உந்தித் தள்ள, நறுமணம் கமழும் மலர்க் கொத்துக்களோடு குரங்குக் கூட்டங்கள் சிதறும் திருக்கயிலாயமலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி, சந்த இசையோடு செந்தமிழில் திருப் புகலியில் அவதரித்து திருஞானசம்பந்தர் அருளிச்செய்த இத்திருப் பதிகத்தை மனத்தால் சிந்தித்து, வாயால் ஓத வினையாவும் நலியப் பரலோகம் எளிதில் பெறக்கூடும்.
திருச்சிற்றம்பலம்
3.068.திருக்கயிலாயம் |
||||||||
by Swathi on 02 Apr 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|